IV. பூரியில் உள்ள புனித திருக்கோயில்கள் மற்றும் மடங்கள்

5. மடங்கள்
a. குஞ்ஜ மடம்

நோக்கங்கள்

நோக்கம் 1: கௌடிய வைஷ்ணவ சமயத்தின் புனித மையமாக விளங்கும் குஞ்ஜா மடத்தின் வரலாறு மற்றும் ஆன்மிக முக்கியத்துவத்தை வலியுறுத்துதல்.

நோக்கம் 2: குஞ்ஜா மடத்துடன் தொடர்புடைய மகத்தான கௌடிய வைஷ்ணவ ஆச்சாரியர்களையும், கிருஷ்ண பக்தியைப் பரப்புவதில் அவர்கள் ஆற்றிய பங்களிப்பையும் எடுத்துக்காட்டுதல்.

நோக்கம் 3: கௌடிய வைஷ்ணவ மரபில் குஞ்ஜா மடத்துடன் தொடர்புடைய புனித லீலைகள், வரலாற்று நிகழ்வுகள் மற்றும் நிலைத்திருக்கும் பக்தி பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுதல்.

நோக்கம் 4: கௌடிய வைஷ்ணவ வழிபாடு மற்றும் பண்பாட்டின் மையமாக விளங்கும் குஞ்ஜா மடத்தின் இருப்பிடம், கட்டிட அமைப்பு மற்றும் தொடர்ச்சியான ஆன்மிக முக்கியத்துவத்தை விளக்குதல்.

நோக்கம் 5: கௌடிய வைஷ்ணவ மரபில் குஞ்ஜா மடத்தின் பிரதான மூலவர்களையும், அங்கு பின்பற்றப்படும் புனித வழிபாட்டு மரபுகளையும் எடுத்துக்காட்டுதல்.

நோக்கம் 6: குஞ்ஜா மடத்தின் ஆன்மிக மகத்துவத்தையும் பாரம்பரியத்தையும் உறுதிப்படுத்தும் சாஸ்திர மற்றும் வரலாற்று ஆதாரங்களை எடுத்துக்காட்டுதல்.

நோக்கம் 7: புரி ஸ்ரீ ஜகந்நாதர் திருக்கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள குஞ்ஜா மடத்தின் இருப்பிடத்தையும்,அதன் சிறப்பையும் அறிதல்.

நோக்கம் 1: கௌடிய வைஷ்ணவ சமயத்தின் புனித மையமாக விளங்கும் குஞ்ஜா மடத்தின் வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவத்தை வலியுறுத்துதல்.

அறிமுகம்

குஞ்ஜா மடம் ஒடிசா மாநிலத்தின் புனித நகரமான புரியில் அமைந்துள்ள, கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயத்தில் மிகவும் போற்றப்படும் தொன்மையான மடங்களில் ஒன்றாகும்.ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மகாபிரபு ஸ்ரீதாம் புரிக்கு வந்தபோது முதன்முதலில் தங்கிய திருத்தலமாக இது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பின்னர் இம்மடம் பஜன், ஹரிநாம சங்கீர்த்தனம், சாஸ்திர விவாதம் மற்றும் பக்தி சாதனைகளின் முக்கிய ஆன்மிக மையமாக வளர்ச்சி பெற்றது. இம்மடம், ஒடிசா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிருஷ்ண பக்தியைப் பரப்பிய மகத்தான கௌடிய வைஷ்ணவ ஆச்சாரியர்களான ஸ்ரீ ஷ்யாமானந்த பிரபு மற்றும் ஸ்ரீ ரசிகானந்த பிரபு ஆகியோரின் திவ்ய லீலைகளுடன் நெருங்கிய தொடர்புடையதாகும். மேலும், புகழ்பெற்ற கௌடிய வேதாந்த அறிஞரான ஸ்ரீல பலதேவ வித்யாபூஷண பிரபுபாதர், இம்மடத்தில் ஸ்ரீல ராதா தாமோதர கோஸ்வாமியிடம் தீட்சை பெற்றார்.

வரலாற்றில் புல்தோட்டா மடம் என்ற பெயராலும் அறியப்பட்ட குஞ்ஜா மடம், பல நூற்றாண்டுகளாக சாந்தர்கள், யாத்திரிகர்கள் மற்றும் பக்தர்களுக்கு ஆன்மிகப் புகலிடமாக விளங்கி வருகிறது. ஸ்ரீ சைதன்ய மகாபிரபு நிறுவிய பக்தி உணர்வையும் ஆன்மிக மரபையும் இன்றளவும் பாதுகாத்து வரும் இம்மடம், கௌடிய வைஷ்ணவ மரபைப் பின்பற்றும் பக்தர்களின் முக்கிய புனித யாத்திரைத் தலமாகத் திகழ்கிறது.

நோக்கம் 2: குஞ்ஜா மடத்துடன் தொடர்புடைய மகத்தான கௌடிய வைஷ்ணவ ஆச்சாரியர்களையும், கிருஷ்ண பக்தியைப் பரப்புவதில் அவர்கள் ஆற்றிய பங்களிப்பையும் எடுத்துக்காட்டுதல்.

இத்தலத்துடன் தொடர்புடைய மகான்கள்

குஞ்ஜா மடம், கௌடிய வைஷ்ணவ மரபின் மிகச் சிறந்த மகான்களுடன் தொடர்புடைய புனிதத் தலமாகும். அவர்களின் இருப்பும் ஆன்மிகச் செயல்பாடுகளும் இம்மடத்தை பக்தி, ஹரிநாம சங்கீர்த்தனம் மற்றும் ஆன்மிகக் கல்வியின் முக்கிய மையமாக மாற்றியுள்ளன.

1. ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (1486–1534)

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, கௌடிய வைஷ்ணவ இயக்கத்தின் நிறுவனர் மற்றும் குஞ்ஜா மடத்துடன் தொடர்புடைய மிக முக்கியமான தெய்வீக ஆளுமை ஆவார். ஸ்ரீ ஜகந்நாதரை தரிசிப்பதற்காக ஜெகநாத்புரிக்கு வந்தபின், அவர் முதன்முதலில் தங்கிய இடமாக குஞ்ஜா மடம் போற்றப்படுகிறது.

புரியில் இருந்த இருபத்துநான்கு ஆண்டுகாலத்தில் அவரது திவ்ய லீலைகள் பலவாகும் . மேலும், அவரது தங்குதல் புரியை ஹரிநாம சங்கீர்த்தன இயக்கத்தின் முக்கிய ஆன்மிக மையமாக நிலைநிறுத்தியது. இன்று வரை, குஞ்ஜா மடம் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் திருவடித் தொடர்பால் பக்தர்களால் மிகுந்த பக்தியுடன் வணங்கப்படும் புனிதத் தலமாக விளங்குகிறது.

2. ஸ்ரீ ஷ்யாமானந்த பிரபு (1534–1620)

ஸ்ரீ ஷ்யாமானந்த பிரபு, ஒடிசா மாநிலத்தில் கௌடிய வைஷ்ணவ சமயத்தைப் பரப்பிய தலைசிறந்த பிரசாரகர்களில் ஒருவராக விளங்கினார். விருந்தாவனத்தின் கோஸ்வாமிகளிடம் ஆன்மிகப் பயிற்சி பெற்ற அவர், தனது வாழ்நாள் முழுவதையும் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் உபதேசங்களையும் ஸ்ரீ கிருஷ்ண பக்தியையும் பரப்புவதற்காக அர்ப்பணித்தார்.

புரிக்கு வந்திருந்த காலங்களில், குஞ்ஜா மடம் அவரது முக்கிய தங்குமிடங்களிலும், பஜன் மற்றும் பக்தி சாதனைகளுக்கான பிரதான ஆன்மிக மையங்களிலும் ஒன்றாக விளங்கியது. அவரது பக்தி, பிரசாரப் பணி மற்றும் ஆன்மிகச் சேவையால், குஞ்ஜா மடம் கௌடிய வைஷ்ணவ மரபில் சிறப்புமிக்க இடத்தைப் பெற்றது.

3. ஸ்ரீ ரசிகானந்த பிரபு (1590–1652)

ஸ்ரீ ரசிகானந்த பிரபு, ஸ்ரீ ஷ்யாமானந்த பிரபுவின் புகழ்பெற்ற சீடரும், கௌடிய வைஷ்ணவ மரபின் சிறந்த ஆச்சாரியர்களில் ஒருவரும் ஆவார். அவர் குஞ்ஜா மடத்தை பக்தி, பஜன் மற்றும் ஆன்மிகக் கல்வியின் முக்கிய மையமாக நிறுவி வளர்ச்சியடையச் செய்தார்.

தமது ஆழ்ந்த ஆன்மிக செல்வாக்கும் இடைவிடாத பிரசாரப் பணியின் மூலம், ஒடிசா முழுவதும் ஸ்ரீ கிருஷ்ண உணர்வையும் (கிருஷ்ண பக்தியையும்) பரப்பி, எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை பக்தி மார்க்கத்தின் மூலம் மாற்றியமைத்தார். அவருடைய சேவையால், குஞ்ஜா மடம் கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயத்தின் முக்கிய ஆன்மிக மையங்களில் ஒன்றாக உயர்ந்தது.

4. ஸ்ரீல ராதா தாமோதர கோஸ்வாமி

ஸ்ரீல ராதா தாமோதர கோஸ்வாமி, ஸ்ரீ ரசிகானந்த பிரபுவின் சீடர் பரம்பரையில் விளங்கிய முக்கியமான கௌடிய வைஷ்ணவ ஆச்சாரியர் ஆவார். அவர் குஞ்ஜா மடத்தில் தங்கி, அங்குள்ள ஆன்மிகச் செயல்பாடுகள், வழிபாட்டு முறைகள் மற்றும் பக்தி மரபை வழிநடத்தினார்.

கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயத்தின் புகழ்பெற்ற வேதாந்த அறிஞரான ஸ்ரீல பலதேவ வித்யாபூஷண பிரபுபாதருக்கு, கௌடிய வைஷ்ணவ மரபில் தீட்சை வழங்கிய ஆச்சாரியராக அவர் சிறப்பாக நினைவுகூறப்படுகிறார். அவரது ஆன்மிக வழிகாட்டுதலும் போதனைகளும் குஞ்ஜா மடத்தின் பக்தி மரபை மேலும் வலுப்படுத்தின.

5. ஸ்ரீல பலதேவ வித்யாபூஷண பிரபுபாதர்

ஸ்ரீல பலதேவ வித்யாபூஷண பிரபுபாதர், கௌடிய வைஷ்ணவ மரபின் புகழ்பெற்ற தத்துவஞானியும் வேதாந்த அறிஞரும் ஆவார். அவர் குஞ்ஜா மடத்தில் ஸ்ரீல ராதா தாமோதர கோஸ்வாமியிடம் தீட்சை பெற்றார்.

பின்னர், அவர் பிரம்ம சூத்திரத்திற்கு கோவிந்த பாஷ்யம் என்ற அதிகாரப்பூர்வமான விளக்கவுரையை இயற்றினார். இந்த மகத்தான நூலின் மூலம், கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயத்தின் வேதாந்தத் தத்துவத்தை நிலைநிறுத்தி, அதன் சித்தாந்தப் பெருமையைப் பாதுகாத்தார்.

குஞ்ஜா மடத்துடன் பாரம்பரியமாக தொடர்புடைய மற்ற மகான்களில் ஸ்ரீ நித்யானந்த பிரபு, ஸ்வரூப தாமோதர கோஸ்வாமி, ராமானந்த ராயர், சார்வபௌம பட்டாச்சாரியர் மற்றும் பல கௌடிய வைஷ்ணவ ஆச்சாரியர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் அனைவரும் ஹரிநாம சங்கீர்த்தனத்தையும், ஸ்ரீ கிருஷ்ண பக்தியையும் பரப்புவதில் அளப்பரிய பங்களிப்பை ஆற்றியுள்ளனர்.

நோக்கம் 3: கௌடிய வைஷ்ணவ மரபில் குஞ்ஜா மடத்துடன் தொடர்புடைய புனித லீலைகள், வரலாற்று நிகழ்வுகள் மற்றும் நிலைத்திருக்கும் பக்தி பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுதல்.

இத்தலத்துடன் தொடர்புடைய திவ்ய லீலைகள்

குஞ்ஜா மடம், கௌடிய வைஷ்ணவ மரபுடன் தொடர்புடைய பல புனித நினைவுகளையும் திவ்ய லீலைகளையும் பாதுகாத்து வரும் புனிதத் தலமாகும்.

ஜெகநாதபுரியில் மகாபிரபுவின் முதல் தங்குமிடம்

ஸ்ரீ ஜகந்நாதரின் திவ்ய தரிசனத்தை பரவசமான பக்தி நிலையில் பெற்ற பிறகு, ஸ்ரீ சைதன்ய மகாபிரபு புரியில் முதன்முதலாக குஞ்ஜா மடத்தில் தங்கினார். இதனால், புரியில் அவர் நிகழ்த்திய விரிவான திவ்ய லீலைகளின் தொடக்க இடமாக இம்மடம் பக்தர்களால் போற்றப்படுகிறது.

இன்றும், ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் புரி லீலைகள் ஆரம்பமான புனிதத் தலமாக குஞ்ஜா மடம் பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் மரியாதையுடனும் தரிசிக்கப்படுகிறது.

ரசிகானந்த பிரபு மற்றும் ரதயாத்திரை அதிசயம்

குஞ்ஜா மடத்துடன் தொடர்புடைய மிகவும் புகழ்பெற்ற மரபுகளில் ஒன்று ரதயாத்திரை அதிசயம் ஆகும். ஒரு வருடம் ரதயாத்திரையின்போது, ஸ்ரீ ஜகந்நாதரின் திருத்தேர் பல முயற்சிகள் செய்தும் நகரவில்லை. அப்போது ஸ்ரீ ரசிகானந்த பிரபு மனமுருகி பிரார்த்தனை செய்து, தேரைத் தொட்டவுடன் அது உடனே நகரத் தொடங்கியது.

இந்த அதிசயத்தை நேரில் கண்ட புரி மன்னர், மகிழ்ச்சியடைந்து, பின்னாளில் குஞ்ஜா மடமாக விளங்கிய மலர்த் தோட்டத்தை ஸ்ரீ ரசிகானந்த பிரபுவிற்கு பரிசாக வழங்கினார்.

ஸ்ரீ ஸ்ரீ ராதா–ரசிக ராயரின் பிரதிஷ்டை

ஸ்ரீ ரசிகானந்த பிரபு, தாம் ஆராதித்து வந்த ஸ்ரீ பட கிருஷ்ணர் விக்ரஹத்தை இம்மடத்தில் பிரதிஷ்டை செய்தார். பின்னர் அந்தத் தெய்வம் ஸ்ரீ ஸ்ரீ ராதா–ரசிக ராயர் எனப் போற்றப்பட்டது. இந்த பிரதிஷ்டையால், குஞ்ஜா மடம் ஸ்ரீ ஸ்ரீ ராதா–கிருஷ்ணர் ஆராதனையின் முக்கிய மையமாக உயர்ந்தது.

ஸ்ரீ ஷ்யாமானந்த பிரபுவின் பஜன லீலைகள்

ஸ்ரீ ஷ்யாமானந்த பிரபு, குஞ்ஜா மடத்தின் அமைதியான சூழலில் பல ஆண்டுகள் ஆழ்ந்த தியானம், பஜன் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ராதா–கிருஷ்ணரின் திவ்ய லீலைகளை நினைவுகூறும் ஸ்மரணத்தில் ஈடுபட்டார். அவரது உயர்ந்த பக்தி சாதனைகளால் இப்பகுதி முழுவதும் புனிதமடைந்தது.

ஸ்ரீல பலதேவ வித்யாபூஷண பிரபுபாதரின் தீட்சை

குஞ்ஜா மடத்தில், ஸ்ரீல ராதா தாமோதர கோஸ்வாமியால் ஸ்ரீல பலதேவ வித்யாபூஷண பிரபுபாதருக்கு வழங்கப்பட்ட தீட்சை, கௌடிய வைஷ்ணவ வரலாற்றில் மிக முக்கியமான ஆன்மிக நிகழ்வாகக் கருதப்படுகிறது. இங்கு பெற்ற குருவருளும் ஆசீர்வாதமும், பின்னர் அவர் வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிந்த பாஷ்யம் என்ற பிரம்ம சூத்திர விளக்கவுரையை இயற்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது.

இன்றளவும் தொடரும் பக்தி மரபு

குஞ்ஜா மடம் இன்றும் ஹரிநாம சங்கீர்த்தனம், சாஸ்திரப் பயிற்சி மற்றும் விவாதம், பஜன், கீர்த்தனம், ஆன்மிகச் சத்சங்கங்கள் ஆகியவை நடைபெறும் உயிர்ப்புள்ள ஆன்மிக மையமாகத் திகழ்கிறது. மகத்தான ஆச்சாரியர்கள் நிறுவிய பக்தி மரபையும் ஆன்மிகச் சூழலையும் இம்மடம் இன்றுவரை பாதுகாத்து வருகிறது.

நோக்கம் 4: கௌடிய வைஷ்ணவ வழிபாடு மற்றும் பண்பாட்டின் மையமாக விளங்கும் குஞ்ஜா மடத்தின் இருப்பிடம், கட்டிட அமைப்பு மற்றும் தொடர்ச்சியான ஆன்மிக முக்கியத்துவத்தை விளக்குதல்.

இடம் / கட்டிட அமைப்பு / முக்கியத்துவம்

குஞ்ஜா மடம், ஸ்ரீதாம் புரியின் கணமல்லா சாஹி பகுதியில், ஸ்ரீ ஜகந்நாதர் திருக்கோவிலும் பட தண்டா (பெரிய ரதவீதி) அருகிலும் அமைந்துள்ளது. இம்மடம் முதலில் புல்தோட்டாஎன அழைக்கப்பட்ட மலர்த் தோட்டத்திற்குள் அமைந்திருந்தது. பின்னர் அது கௌடிய வைஷ்ணவ மரபின் புனித மடமாக வளர்ச்சி பெற்றது.

இம்மடத்தின் கட்டிட அமைப்பு, ஒடிசாவின் தொன்மையான மடங்களின் பாரம்பரியக் கட்டிடக்கலையைப் பின்பற்றுகிறது. மட வளாகத்தில் பாரம்பரிய நுழைவாயில், மைய முற்றம், பிரார்த்தனை மற்றும் ஹரிநாம சங்கீர்த்தன மண்டபம், துறவிகளும் யாத்திரிகர்களும் தங்குவதற்கான அறைகள், மேலும் பிரதான மூலவர்களின் சன்னதி ஆகியவை அமைந்துள்ளன.

இதன் கட்டிட வடிவமைப்பு எளிமையையும் ஆன்மிகப் பயன்பாட்டையும் பிரதிபலிப்பதோடு, விருந்தாவனத்தின் அமைதியான குஞ்ஜம் (புனிதச் சோலை) போன்ற பக்தி நிறைந்த சூழலைப் பாதுகாத்து வருகிறது.

இன்றளவும் குஞ்ஜா மடம், வழிபாடு, சாஸ்திரக் கல்வி, யாத்திரை, ஹரிநாம சங்கீர்த்தனம் மற்றும் கௌடிய வைஷ்ணவ பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் முக்கியமான ஆன்மிக மையமாகச் வருகிறது.

நோக்கம் 5: கௌடிய வைஷ்ணவ மரபில் குஞ்ஜா மடத்தின் பிரதான மூலவர்களையும், அங்கு பின்பற்றப்படும் புனித வழிபாட்டு மரபுகளையும் எடுத்துக்காட்டுதல்.

மூலவர்கள்

ஸ்ரீ ஸ்ரீ ராதா–ரசிக ராயர்

குஞ்ஜா மடத்தின் பிரதான மூலவர்கள் ஸ்ரீ ஸ்ரீ ராதா–ரசிக ராயர் ஆவார்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இந்தத் திருவிக்ரஹம் முதலில் ஸ்ரீ ரசிகானந்த பிரபுவால் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆராதிக்கப்பட்டது. அப்போது இவ்விக்ரஹம் ஸ்ரீ பட கிருஷ்ணர் அல்லது ரசிக ராயர் என்ற பெயர்களால் அன்புடன் போற்றப்பட்டது.

திவ்ய தம்பதிகளான ஸ்ரீ ஸ்ரீ ராதா–ரசிக ராயருடன், பீடத்தில் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, லட்டு கோபால், புனித சாளக்கிராம சிலைகள், மேலும் ஸ்ரீ ஷ்யாமானந்த பிரபு, ஸ்ரீ ரசிகானந்த பிரபு மற்றும் ஸ்ரீல பலதேவ வித்யாபூஷண பிரபுபாதர் ஆகிய கௌடிய வைஷ்ணவ ஆச்சாரியர்களின் திருவிக்ரஹங்களும் பக்தியுடன் ஆராதிக்கப்படுகின்றன.

குஞ்ஜா மடம், பாரம்பரியமாக ஸ்ரீ ஸ்ரீ ராதா–கிருஷ்ணர், ஸ்ரீ ஸ்ரீ கௌர–நிதாய், மற்றும் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு ஆகியோரின் ஆராதனை சிறப்பாக நடைபெறும் கௌடிய வைஷ்ணவ மரபின் முக்கியமான புனித மடங்களில் ஒன்றாக விளங்குகிறது.

நோக்கம் 6: குஞ்ஜா மடத்தின் ஆன்மிக மகத்துவத்தையும் பாரம்பரியத்தையும் உறுதிப்படுத்தும் சாஸ்திர மற்றும் வரலாற்று ஆதாரங்களை எடுத்துக்காட்டுதல்.

சாஸ்திரக் குறிப்புகள்

குஞ்ஜா மடத்தின் ஆன்மிக மகத்துவமும் வரலாற்றுப் பாரம்பரியமும், பல கௌடிய வைஷ்ணவ சாஸ்திரங்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள் மற்றும் வரலாற்றுப் பதிவுகளால் உறுதிப்படுத்தப்படுகின்றன.

ஸ்ரீ ரசிக மங்களம், கோபீஜன வல்லப தாஸரால் இயற்றப்பட்ட நூலாகும். இதில் ஸ்ரீ ரசிகானந்த பிரபுவின் வாழ்க்கை, அவர் நிகழ்த்திய திவ்ய லீலைகள், குறிப்பாக ரதயாத்திரைத் தேரின் அதிசயம் மற்றும் புரி மன்னர் புல்தோட்டாவை அவருக்கு வழங்கிய நிகழ்வு ஆகியவை விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.

பக்தி ரத்நாகரம் மற்றும் ஸ்ரீ ஷ்யாமானந்த பிரகாசம் ஆகிய நூல்கள், ஸ்ரீ ஷ்யாமானந்த பிரபு மற்றும் அவரது சீடர்களின் ஆன்மிகப் பணிகளை விவரிக்கின்றன. மேலும், ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் போதனைகளைப் பரப்பிய முக்கிய மையங்களில் ஒன்றாக குஞ்ஜா மடத்தை அடையாளப் படுத்துகின்றன.

ஸ்ரீல பலதேவ வித்யாபூஷண பிரபுபாதரின் பரம்பரை வாழ்க்கை வரலாற்று நூல்கள், அவர் குஞ்ஜா மடத்தில் ஸ்ரீல ராதா தாமோதர கோஸ்வாமியிடம் தீட்சை பெற்றதை பதிவு செய்கின்றன. மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிந்த பாஷ்யம் என்ற வேதாந்த விளக்கவுரையின் உருவாக்கத்துடன் குஞ்ஜா மடத்தின் தொடர்பையும் எடுத்துரைக்கின்றன.

நோக்கம் 7: குஞ்ஜா மடத்தின் இருப்பிடத்தையும், புரி ஸ்ரீ ஜகந்நாதர் திருக்கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள அதன் சிறப்பையும் அறிதல்.

இருப்பிடம்

குஞ்ஜா மடம், ஒடிசா மாநிலம், புரி நகரின் கணமல்லா சாஹி பகுதியில் அமைந்துள்ளது. இது ஸ்ரீ ஜகந்நாதர் திருக்கோவிலிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளதால், பக்தர்கள் நடைப்பயணமாகவோ ‌அல்லது உள்ளூர் போக்குவரத்து வசதிகள் மூலமாகவோ எளிதில் சென்றடையலாம். குஞ்ஜா மடம், புரி யாத்திரையில் தரிசிக்க வேண்டிய முக்கியமான கௌடிய வைஷ்ணவ புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare