III. கௌடிய வைஷ்ணவ ஆச்சாரியர்கள்

1. ஸ்ரீல பக்திவிநோத தாக்கூர்

ஸ்ரீல பக்திவினோத தாகூர் — ஏழாவது கோஸ்வாமி

நோக்கங்கள்

நோக்கம் 1: ஸ்ரீல பக்திவினோத தாகூரைப் பற்றியும், கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு அவர் ஆற்றிய முக்கிய பங்களிப்புகளைப் பற்றியும் அறிந்துகொள்வது.

நோக்கம் 2: ஸ்ரீல பக்திவினோத தாகூரின் ஆரம்பகால வாழ்க்கை, கல்வி மற்றும் ஆன்மீக ஈடுபாட்டைப் பற்றி அறிந்துகொள்வது.

நோக்கம் 3: ஸ்ரீல பக்திவினோத தாகூர் குடும்ப வாழ்க்கை, அரசுப் பணி மற்றும் ஆன்மீக சாதனைகளை எவ்வாறு சமநிலைப்படுத்தினார் என்பதைப் புரிந்துகொள்வது.

நோக்கம் 4: ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் தூய உபதேசங்களை மீண்டும் நிலைநாட்டி, அவற்றைப் பிரசாரம் செய்வதில் ஸ்ரீல பக்திவினோத தாகூரின் பங்கைப் புரிந்துகொள்வது.

நோக்கம் 5: ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் அவதார ஸ்தலமான ஸ்ரீ யோகபீடத்தை ஸ்ரீல பக்திவினோத தாகூர் எவ்வாறு கண்டறிந்து மீண்டும் நிலைநாட்டினார் என்பதை அறிந்துகொள்வது.

நோக்கம் 6: நாமஹட்டா, அவரது நூல்கள் மற்றும் பிரசாரப் பணிகள் மூலம் ஸ்ரீல பக்திவினோத தாகூர் ஆற்றிய பங்களிப்புகளைப் பற்றி அறிந்துகொள்வது.

நோக்கம் 7: ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரை ஆன்மீகப் பணிக்குத் தயார்படுத்தி, எதிர்கால பிரசார இயக்கத்தை வலுப்படுத்துவதில் ஸ்ரீல பக்திவினோத தாகூரின் பங்கைப் புரிந்துகொள்வது.

ஸ்ரீல பக்திவினோத பிரணாம்

நமோ பக்திவினோதாய ஸச்சிதானந்த நாமினே
கெளர சக்தி ஸ்வரூபாய ரூபானுக வராய தே

பொருள்
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் திவ்ய சக்தியாகவும், ஸ்ரீல ரூப கோஸ்வாமியின் உயர்ந்த வழியைப் பின்பற்றுபவராகவும் விளங்கும் ஸச்சிதானந்த பக்திவினோதருக்கு எனது மரியாதையான வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.

நோக்கம் 1: ஸ்ரீல பக்திவினோத தாகூரைப் பற்றியும், கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு அவர் ஆற்றிய முக்கிய பங்களிப்புகளைப் பற்றியும் அறிந்துகொள்வது.

அறிமுகம்

ஸ்ரீல ஸச்சிதானந்த பக்திவினோத தாகூர், சில சமயங்களில் “ஏழாவது கோஸ்வாமி” என்று அழைக்கப்படுகிறார். அவர் பிரம்ம-மத்வ-கௌடிய சம்பிரதாயத்திற்கு அளவிட முடியாத பங்களிப்பைச் செய்தார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் தூய உபதேசங்கள் மறைக்கப்பட்டு, அங்கீகரிக்கப்படாத பிரிவுகளால் வைஷ்ணவம் தவறாக எடுத்துக்காட்டப்பட்ட காலத்தில், தூய பக்தித் தொண்டை மீண்டும் உயிர்ப்பித்து நிலைநாட்ட அவர் அயராது உழைத்தார்.

அவர் ஆங்கிலம், வங்காளம், இந்தி, ஒரியா மற்றும் சமஸ்கிருத மொழிகளில் அறிவுடைய மதிப்பிற்குரிய அறிஞராகவும், மாஜிஸ்திரேட்டாகவும் விளங்கினார். தனது எழுத்துக்கள், பிரசாரம் மற்றும் வைஷ்ணவ இலக்கியங்களின் வெளியீடுகள் மூலம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் உபதேசங்களை மீண்டும் நிலைநாட்டுவதில் மிக முக்கியப் பங்காற்றினார்.கிருஷ்ண லீலையில் ஸ்ரீல பக்திவினோத தாகூர், கமலமஞ்சரி ஆவார்.

நோக்கம் 2: ஸ்ரீல பக்திவினோத தாகூரின் ஆரம்பகால வாழ்க்கை, கல்வி மற்றும் ஆன்மீக ஈடுபாட்டைப் புரிந்துகொள்வது.

பிறப்பு மற்றும் ஆரம்பகால வாழ்க்கை

ஸ்ரீல பக்திவினோத தாகூரின் இயற்பெயர் கேதார்நாத் தத்தா. அவர் 1838 செப்டம்பர் 2-ஆம் தேதி, நதியா மாவட்டத்திலுள்ள பீர்நகரில் பிறந்தார். அவரது பெற்றோர் ஸ்ரீ ஆனந்த சந்திர தத்தா மற்றும் ஜகத் மோகினி தேவி ஆவர்.

சிறுவயதிலிருந்தே கேதார்நாத் புத்திக்கூர்மையும், எதையும் அறிந்துகொள்ளும் ஆர்வமும், ஆன்மீக ஈடுபாடும் கொண்டவராக இருந்தார். ராமாயணம், மஹாபாரதம் மற்றும் பகவான் கிருஷ்ணர், பகவான் ராமரின் லீலைகளைப் பற்றிய கதைகளைக் கேட்பதில் அவருக்கு மிகுந்த விருப்பம் இருந்தது. பத்து வயதிலேயே இரண்டு முக்கியமான கேள்விகள் அவரது மனதை ஆழமாகச் சிந்திக்க வைத்தன:

“இந்த உலகம் என்றால் என்ன?” “நாம் யார்?” இந்த ஆன்மீகத் தேடல் அவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.

கல்வி மற்றும் இளமைப் பருவம்

கேதார்நாத் வங்காளம் மற்றும் ஆங்கில மொழிகளில் கல்வி கற்றார். பின்னர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். தனது புத்திக்கூர்மை, தத்துவ அறிவு, விவாதத் திறமை மற்றும் சிறந்த பேச்சாற்றலுக்காக அவர் அறியப்பட்டார்.

அந்தக் காலத்தில் பல அறிவுஜீவிகள் பிரம்ம சமாஜத்தின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தபோதிலும், கேதார்நாத் பரம புருஷ பகவானை ஒரு தனிப்பட்ட ஆளுமையாகவும், அவருடன் அன்பான உறவை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்ற புரிதலையும் உறுதியாகக் கொண்டிருந்தார்.

நோக்கம் 3: ஸ்ரீல பக்திவினோத தாகூர் குடும்ப வாழ்க்கை, அரசுப் பணி மற்றும் ஆன்மீக சாதனைகளை எவ்வாறு சமநிலைப்படுத்தினார் என்பதைப் புரிந்துகொள்வது.

குடும்ப வாழ்க்கையும் அரசுப் பணியும்

தந்தையின் மறைவிற்குப் பிறகு, குடும்பத்தின் பொருளாதார நிலை மிகவும் கடினமானது. நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் மறைவு மற்றும் அவரது முதல் மனைவி சயாமணி தேவியின் மறைவு உட்பட பல தனிப்பட்ட துன்பங்களை அவர் சந்தித்தார்.

பின்னர் அவர் ஸ்ரீமதி பகவதி தேவியை திருமணம் செய்துகொண்டார். பக்திவினோத தாகூர் பல்வேறு அரசுப் பதவிகளில் பணியாற்றி, இறுதியில் துணை மாஜிஸ்திரேட் மற்றும் துணை கலெக்டராக சேவை செய்தார். குடும்பம் மற்றும் பணியில் அதிக பொறுப்புகள் இருந்தபோதிலும், அவர் தனது ஆன்மீக சாதனைகள், சாஸ்திரப் படிப்பு, ஆன்மீக நூல்கள் எழுதுதல் மற்றும் பிரசாரம் ஆகியவற்றைத் தொடர்ந்து மேற்கொண்டார்.

ஒரு சிறந்த கிருஹஸ்த ஆச்சாரியர்

குடும்பம் மற்றும் பணியில் பெரிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டிருந்தாலும், தீவிரமான ஆன்மீக வாழ்க்கையை மேற்கொள்ள முடியும் என்பதை பக்திவினோத தாகூர் தனது வாழ்க்கையின் மூலம் எடுத்துக்காட்டினார். அவரது ஒழுக்கமான தினசரி வாழ்க்கையில் பின்வருபவை இடம்பெற்றிருந்தன:

  • ஜபம் செய்தல்
  • சாஸ்திரங்களைப் படித்தல்
  • ஆன்மீக நூல்களை எழுதுதல்
  • அரசுப் பணிகளைச் செய்தல்
  • கடிதப் பரிமாற்றம் செய்தல்
  • சமஸ்கிருத சாஸ்திரங்களை வங்காள மொழியில் மொழிபெயர்த்தல்
  • எளிய பிரசாதத்தை ஏற்றுக்கொள்ளுதல்

ஸ்ரீல பிரபுபாதர், பக்திவினோத தாகூரை ஒரு சிறந்த குரு மற்றும் ஆச்சாரியர் என்று குறிப்பிட்டார். மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்த ஒரு கிருஹஸ்தராகவும், பொறுப்புமிக்க மாஜிஸ்திரேட்டாகவும் இருந்தபோதிலும், அவர் மிக உயர்ந்த தரத்திலான பக்தி வாழ்க்கையைப் பின்பற்றினார்.

நோக்கம் 4: ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் தூய உபதேசங்களை மீண்டும் நிலைநாட்டி, அவற்றைப் பிரசாரம் செய்வதில் ஸ்ரீல பக்திவினோத தாகூரின் பங்கைப் புரிந்துகொள்வது.

ஆன்மீக விழிப்புணர்வு

தினாஜ்பூரில் துணை மாஜிஸ்திரேட்டாகப் பணியாற்றியபோது, பக்திவினோத தாகூர் உயர்ந்த வைஷ்ணவர்களுடன் தொடர்புகொண்டு, ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் மற்றும் கிருஷ்ண தத்துவத்தை விளக்கும் பிற சாஸ்திரங்களை ஆழமாகப் படித்தார். இந்தப் படிப்புகளின் மூலம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் மீதான அவரது பக்தி மிகவும் உறுதியாக நிலைபெற்றது.

அவர் சத்-சித்-ஆனந்த-பிரேமாலங்கார என்ற நூலை இயற்றினார். மேலும், உண்மையான ஆன்மீகம் மதப்பிரிவுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் மற்றும் மோதல்களுக்கு அப்பாற்பட்டது என்பதை விளக்கும் ஒரு முக்கிய உரையை வழங்கினார். இதுவே பின்னர் புகழ்பெற்ற “தி பாகவத்: இட்ஸ் ஃபிலாசஃபி, இட்ஸ் எதிக்ஸ் அண்ட் இட்ஸ் தியாலஜி. (The Bhagavat: Its Philosophy, Its Ethics and Its Theology)” என்ற படைப்பாக வெளிவந்தது.

ஜகந்நாத புரியில் சேவை

புரிக்கு பணிமாற்றம் செய்யப்பட்ட பிறகு, பக்திவினோத தாகூர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு மற்றும் அவரது பார்ஷதர்களுடன் தொடர்புடைய புனித ஸ்தலங்களுக்குச் சென்றார். அவர் கௌர கிஷோர் தாஸ் பாபாஜி மற்றும் ஸ்வரூப தாஸ் பாபாஜி போன்ற உயர்ந்த வைஷ்ணவர்களுடன் தொடர்புகொண்டு, முக்கியமான வைஷ்ணவ சாஸ்திரங்களைப் படித்தார்.

ஒவ்வொரு நாளும் அவர் ஜகந்நாதர் கோவிலுக்கு அருகில் அமர்ந்து ஸ்ரீமத் பாகவதத்தை பாராயணம் செய்வார். மேலும் தோட்ட கோபிநாதர், ஹரிதாஸ் தாகூரின் சமாதி மற்றும் கம்பீரா போன்ற புனித ஸ்தலங்களில் கிருஷ்ண கதைகளைப் பற்றி கலந்துரையாடுவதிலும் நேரத்தைச் செலவிட்டார்.

பிசக் செனைத் தண்டித்தல்

புரியில் இருந்தபோது, தன்னை மஹாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறிக்கொண்டு, தனது யோக சக்திகளால் மக்களைத் தவறாக வழிநடத்திய பிசக் சென் என்ற போலி ஆன்மீகவாதியை பக்திவினோத தாகூர் எதிர்கொண்டார். மாஜிஸ்திரேட்டாக இருந்த பக்திவினோத தாகூரிடம் இந்த வழக்கின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. பல கடுமையான சிரமங்களையும், உடல்நலக் குறைவையும் சந்தித்தபோதிலும், அவர் அச்சமின்றி பிசக் சென்னை கைது செய்து விசாரணையை நடத்தினார்.

இறுதியில், பிசக் சென்னுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம், உண்மையான சமயக் கொள்கைகளை போலித்தனத்திலிருந்தும் ஏமாற்றத்திலிருந்தும் பாதுகாப்பதில் பக்திவினோத தாகூர் கொண்டிருந்த துணிச்சலையும் உறுதியையும் வெளிப்படுத்தியது.

பஜன குடீர் (பக்தி குடி)

1902-ஆம் ஆண்டு, ஸ்ரீல பக்திவினோத தாகூர், ஸ்ரீல ஹரிதாஸ் தாகூரின் சமாதிக்கு அருகில் “பக்தி குடி” (Bhakti Kuthi) என்ற பஜன குடீரைக் கட்டத் தொடங்கினார். ஸ்ரீல பக்திவினோத தாகூரின் முன்னிலையில், ஸ்ரீல சரஸ்வதி தாகூர் பக்தி குடியில் கூடியிருந்தவர்களுக்கு ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தை தொடர்ந்து வாசித்து விளக்குவது வழக்கம். இந்தக் காலத்தில், சரஸ்வதி தாகூர் “வைஷ்ணவ மஞ்சூஷா” (Vaisnava Manjusa) என்ற வைஷ்ணவ கலைக்களஞ்சியத்திற்கான தகவல்களைச் சேகரிப்பதில் கடுமையாக உழைத்தார்.

பயணங்களும் பிரசாரமும்

பக்திவினோத தாகூர் புனித யாத்திரைகளுக்காகவும் பிரசாரத்திற்காகவும் பல இடங்களுக்குப் பயணம் செய்தார். அவர் பிருந்தாவனம், ராதா குண்டம், கோவர்த்தனம், மதுரா, பிரயாகை, அயோத்தி மற்றும் வாரணாசி ஆகிய புனித ஸ்தலங்களுக்குச் சென்றார். பிருந்தாவனத்திற்குச் சென்றபோது, அவர் ஸ்ரீல ஜகந்நாத தாஸ் பாபாஜி மஹாராஜரை சந்தித்தார்.

தனது பிரசாரம், எழுத்துப் பணிகள் மற்றும் வைஷ்ணவ இலக்கியங்களின் வெளியீடுகள் மூலம், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் தூய உபதேசங்களை மீண்டும் நிலைநாட்டுவதற்காக பக்திவினோத தாகூர் அயராது உழைத்தார்.

நோக்கம் 5: ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் அவதார ஸ்தலமான ஸ்ரீ யோகபீடத்தை ஸ்ரீல பக்திவினோத தாகூர் எவ்வாறு கண்டறிந்து மீண்டும் நிலைநாட்டினார் என்பதை அறிந்துகொள்வது.

ஸ்ரீ யோகபீடத்தைக் கண்டுபிடித்தல்

தனது 49-வது வயதில், பக்திவினோத தாகூர் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று, பஜனை செய்வதற்காக பிருந்தாவனத்திற்குச் செல்ல எண்ணினார். அப்போது ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவரது கனவில் தோன்றி, முதலில் நவத்வீபத்தில் அவர் செய்ய வேண்டிய முக்கியமான சேவை ஒன்று இருப்பதாக உணர்த்தினார். பின்னர் பக்திவினோத தாகூர் கிருஷ்ணநகரின் துணை மாஜிஸ்திரேட்டாக பணியாற்றத் தொடங்கி, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் உண்மையான அவதார ஸ்தலம் எது என்பதை மிகக் கவனமாக ஆராயத் தொடங்கினார்.

ஒருநாள், மொட்டை மாடியில் திருநாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தபோது, மாயாபூர் பகுதியிலிருந்து ஓர் அசாதாரணமான தெய்வீக ஒளி வெளிப்படுவதை அவர் கண்டார்.

அவர் பழைய கையெழுத்துப் பிரதிகள், அங்கீகரிக்கப்பட்ட சாஸ்திரங்கள் மற்றும் பழங்கால வரைபடங்களை ஆராய்ந்தார். மேலும், அந்தப் பகுதியில் வாழ்ந்த வயதானவர்களிடமும் விசாரித்தார். இவ்வாறு கவனமாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் மூலம், அந்த இடமே மறைந்துபோயிருந்த ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் அவதார ஸ்தலமான மாயாபூரிலுள்ள ஸ்ரீ யோகபீடம் என்ற முடிவுக்கு வந்தார்.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் அவதார ஸ்தலம்
— மாயாபூரில் உள்ள ஸ்ரீ யோகபீடம்

ஜகந்நாத தாஸ் பாபாஜி யோகபீடத்தை உறுதிப்படுத்துதல்

பக்திவினோத தாகூர் தனது சிக்ஷா குருவான ஸ்ரீல ஜகந்நாத தாஸ் பாபாஜி மஹாராஜரிடம், அந்த இடத்தை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். ஜகந்நாத தாஸ் பாபாஜி மிகவும் வயதானவராக இருந்தார். அவரால் சரியாக நடக்கவோ பார்க்கவோ முடியாததால், பொதுவாக அவர் ஒரு கூடையில் வைத்துத் தூக்கிச் செல்லப்படுவார்.

ஆனால், அவரை யோகபீடத்திற்கு அழைத்து வந்தபோது, அவர் திடீரென்று தனது கூடையிலிருந்து எழுந்து குதித்து, கௌராங்கரின் மீதான பரவசமான அன்பில் நடனமாடத் தொடங்கினார். அப்போது அவர் கூறினார்:

“ஏய் தோ நிமாய் ஜன்மபூமி!”
——“இதுவே நிமாயின் அவதார ஸ்தலம்!”

அவரது பரவசமான இந்த வெளிப்பாடு, பக்திவினோத தாகூரின் கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தியது.

1893-ஆம் ஆண்டு, பக்திவினோத தாகூர் பழமையான யோகபீட ஸ்தலத்தை மீண்டும் நிலைநாட்டினார். அவர் ஜகந்நாத தாஸ் பாபாஜியை “வைஷ்ணவ சார்வபௌமர்” — அதாவது “வைஷ்ணவர்களின் தலைமைத் தளபதி” என்று கௌரவித்தார்.

நோக்கம் 6: நாமஹட்டா, அவரது நூல்கள் மற்றும் பிரசாரப் பணிகள் மூலம் ஸ்ரீல பக்திவினோத தாகூர் ஆற்றிய பங்களிப்புகளைப் பற்றி அறிந்துகொள்வது.

நாமஹட்டாவை நிறுவுதல்

1891-ஆம் ஆண்டு, பக்திவினோத தாகூர் கோத்ருமத்வீபத்திலுள்ள சுரபி குஞ்ஜத்தில் தங்கியிருந்தபோது, “திருநாமத்தின் சந்தை” என்று பொருள்படும் நாமஹட்டாவை நிறுவினார். ஹரிநாமத்தையும் கிருஷ்ண உணர்வையும் பரப்புவதற்காக அவர் 500-க்கும் மேற்பட்ட நாமஹட்டா சங்கங்களை நிறுவினார்.

இவ்வளவு பெரிய சாதனைகளைச் செய்திருந்தபோதிலும், பக்திவினோத தாகூர் மிகுந்த பணிவுடன் தன்னை “நாமஹட்டா சந்தையின் துப்புரவுத் தொழிலாளி” என்று கூறிக்கொண்டார்.குடும்பம் மற்றும் தொழில் சார்ந்த பொறுப்புகளை நிறைவேற்றிக்கொண்டே, பக்தர்கள் எவ்வாறு கிருஷ்ண உணர்வைப் பரப்ப முடியும் என்பதை நாமஹட்டா எடுத்துக்காட்டியது.

நாமஹட்டா — மாயாபூர்

கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு ஆற்றிய பங்களிப்பு

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் தூய உபதேசங்களையும் அவரது பிரசார இயக்கத்தையும் மீண்டும் உயிர்ப்பித்து நிலைநாட்டுவதில் பக்திவினோத தாகூர் மிக முக்கியமான பங்கு வகித்தார். அவரது முக்கிய பங்களிப்புகள்:

  • ஸ்ரீ யோகபீடத்தை மீண்டும் கண்டுபிடித்து நிலைநாட்டுதல்
  • நாமஹட்டா இயக்கத்தை நிறுவுதல்
  • வைஷ்ணவ இலக்கியங்களை எழுதி வெளியிடுதல்
  • தூய பக்தித் தொண்டைப் பிரசாரம் செய்தல்
  • கௌடிய வைஷ்ணவ தத்துவத்தைத் தெளிவாக எடுத்துரைத்தல்
  • குடும்பம் மற்றும் தொழில் சார்ந்த பொறுப்புகளை நிறைவேற்றிக்கொண்டே, சிறந்த பக்தி வாழ்க்கையை வாழ்ந்து காட்டுதல்

அவரது பணிகள், பிற்காலத்தில் கௌடிய வைஷ்ணவ இயக்கம் பெருமளவில் விரிவடைவதற்கு முக்கியமான அடித்தளத்தை அமைத்தன.

நாமஹட்டாவின் பயன்கள்

நாமஹட்டா:

  • கோவில்களிலிருந்து தொலைவில் வாழ்ந்தாலும், பக்தர்களுடன் தொடர்ந்து தொடர்புகொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
  • வேலை மற்றும் குடும்பப் பொறுப்புகளில் ஈடுபட்டிருக்கும் கிருஹஸ்தர்கள் ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற உதவுகிறது.
  • கோவில்களின் விரிவாக்கமாகச் செயல்பட்டு, அனைவரையும் சென்றடைந்து இணைத்துக்கொள்கிறது.
  • ஆன்மீக ஆர்வமுள்ளவர்களை ஹரிநாம தீக்ஷையுடன் இணைக்க உதவுகிறது.
  • ஆன்மீக நூல்களைப் பெற்றவர்கள் மற்றும் புதிதாக வருபவர்களுக்கு வரவேற்பான இடத்தை வழங்குகிறது.
  • கோவில் நிதியைப் பயன்படுத்தாமல் பிரசாரம் செய்வதற்கான வசதியை ஏற்படுத்துகிறது.
  • இளைஞர்கள் மற்றும் பெண்கள் உட்பட பிரசாரகர்கள் பிரசாரப் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

நோக்கம் 7: ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரை ஆன்மீகப் பணிக்குத் தயார்படுத்தி, எதிர்கால பிரசார இயக்கத்தை வலுப்படுத்துவதில் ஸ்ரீல பக்திவினோத தாகூரின் பங்கைப் புரிந்துகொள்வது.

ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர்

பக்திவினோத தாகூர் தனது மகனான பிமல பிரசாத தத்தாவை, பின்னாளில் ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் என்று அறியப்பட்டவரை, தகுந்த ஆன்மீக உபதேசங்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி மிகவும் கவனமாகப் பயிற்றுவித்தார்.

பின்னர் ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் ஒரு புரட்சிகரமான ஆச்சாரியராகவும், கௌடிய மடத்தின் நிறுவனராகவும் விளங்கி, ஸ்ரீல பக்திவினோத தாகூர் மீண்டும் உயிர்ப்பித்த பிரசார இயக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றார்.

ஸ்ரீல பக்திவினோத தாகூர் ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூருக்கு வெளிப்படுத்திய மனோபீஷ்டம்

1914-ஆம் ஆண்டு, தனது மறைவிற்கு சில வாரங்களுக்கு முன்பு, ஸ்ரீல பக்திவினோத தாகூர் தனது மனோபீஷ்டத்தை ஸ்ரீ சித்தாந்த சரஸ்வதியிடம் வெளிப்படுத்தினார். தெய்வ வர்ணாஸ்ரமத்தை நிலைநாட்டுதல், சுத்த பக்தியைப் பிரசாரம் செய்தல், ஸ்ரீதாம மாயாபூரை மேம்படுத்துதல் மற்றும் வைஷ்ணவ நூல்களை வெளியிடுதல் ஆகியவற்றை அவர் அறிவுறுத்தினார்:

உயர்ந்த குலத்தில் பிறந்தோம் என்ற பெருமை கொண்ட உலகியல் மனிதர்களால் உண்மையான உயர்ந்த நிலையை அடைய முடியாது. எனவே, தூய வைஷ்ணவர்கள் தங்களுடைய பாவங்களினால் தாழ்ந்த குடும்பங்களில் பிறந்தார்கள் என்று கூறி அவர்களைத் தாக்குகிறார்கள். இவ்வாறு அவர்கள் அபராதங்களைச் செய்கிறார்கள். இந்த நிலையைச் சரிசெய்வதற்கான வழி தெய்வ-வர்ணாஸ்ரம-தர்மத்தை நிலைநாட்டுவதாகும். நீ அதைச் செய்யத் தொடங்கியுள்ளாய். இதுவே வைஷ்ணவர்களுக்கு செய்யும் உண்மையான சேவை என்பதை அறிந்துகொள்.

சுத்த-பக்தி-சித்தாந்த பிரசாரம் இல்லாத காரணத்தால், ஸஹஜியா, அதிவாடி போன்ற போலி சம்பிரதாயங்களின் பலவிதமான தவறான கொள்கைகளும் உபதேசங்களும் பக்தி என்று அழைக்கப்படுகின்றன. பக்தி சித்தாந்தத்தைப் பிரசாரம் செய்வதாலும், முறையான ஆசாரத்தைப் பின்பற்றுவதாலும், பக்திக்கு எதிரான இந்தக் கருத்துக்களை எப்போதும் முறியடிக்க வேண்டும்.

ஸ்ரீதாம நவத்வீப பரிக்ரமாவை விரைவில் தொடங்க முயற்சி செய். அதன் மூலம் உலகிலுள்ள அனைவரும் கிருஷ்ண பக்தியைப் பெற முடியும்.

ஸ்ரீ மாயாபூருக்கான சேவை நிரந்தரமாக நிலைநாட்டப்பட்டு, ஒவ்வொரு நாளும் மேலும் சிறப்பாக வளர்வதற்கு விடாமுயற்சியுடன் செயல்படு. ஸ்ரீ மாயாபூருக்கான உண்மையான சேவை என்பது தனிமையில் செய்யப்படும் நிர்ஜன பஜனம் அல்ல. மாறாக, அச்சகத்தை நிறுவி, பக்தி நூல்களையும் நாமஹட்டாவையும் பிரசாரம் செய்வதே உண்மையான சேவை. உனக்காக நிர்ஜன பஜனத்தை மேற்கொண்டு, அதன் மூலம் பிரசாரத்திற்கும் ஸ்ரீ மாயாபூர் சேவைக்கும் தடையாக இருக்காதே.

நான் இவ்வுலகில் இல்லாதபோது, உனக்கு மிகவும் பிரியமான ஸ்ரீ மாயாபூர் தாமத்திற்கு சேவை செய்வதில் கவனம் செலுத்து. இதுவே உனக்கு நான் அளிக்கும் விசேஷமான அறிவுரை. பக்தியை அடைய இயலாத உலகியல் மனிதர்களின் அறிவுரைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதே. ஆனால் இதை அவர்களிடம் நேரடியாகவோ மறைமுகமாகவோ தெரியப்படுத்தாதே.

ஸ்ரீமத் பாகவதம், ஷட்-ஸந்தர்பம் மற்றும் வேதாந்த தர்ஷனம் போன்ற நூல்களின் முக்கியத்துவத்தைப் பிரசாரம் செய்ய வேண்டும் என்பது எனது விசேஷமான விருப்பமாக இருந்தது. இப்போது அந்தப் பொறுப்பை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஸ்ரீ மாயாபூரில் ஓர் கல்வி நிறுவனத்தை தொடங்கினால், ஸ்ரீ மாயாபூர் செழிப்படையும். உனது சொந்த புலனின்பத்திற்காக அறிவையோ பணத்தையோ சேர்க்க முயற்சி செய்யாதே. அவை கிருஷ்ணரின் சேவைக்காக மட்டுமே பெறப்பட வேண்டும். பணத்திற்காகவோ தனிப்பட்ட நலனுக்காகவோ ஒருபோதும் தவறான சகவாசத்தை ஏற்றுக்கொள்ளாதே.

‘Prabhupada Saraswati Thakura’ (பக்கம் 18) (பிரபுபாதா ஸரஸ்வதி தாகூரா )நூலில், இந்த அறிவுரைகள் ஸ்ரீல பக்திவினோத தாகூர் ஒரு கடிதத்தின் மூலம் வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 1926 ஏப்ரல் 1 தேதியிட்ட ஒரு கடிதத்தில் (Patrāvali 2, பக்கங்கள் 50–52),( பத்ராவளி) ஶ்ரீ சித்தாந்த சரஸ்வதி இந்த அறிவுரைகள் வாய்மொழியாக வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

(“Sri Bhaktisiddhanta Vaibhava”, Volume One, HH Bhakti Vikasa Swami, “Early Days of the Mission”, “ஸ்ரீ பக்திசித்தாந்த வைபவ”, வால்யூம் ஒன், ஹெச். ஹெச். பக்தி விகாஸ ஸ்வாமி, “எர்லி டேஸ் ஆஃப் த மிஷன்” பக்கங்கள் 63–65)

பக்திவினோத தாகூரின் முன்னறிவிப்பு

ஒருநாள் இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் நாட்டின் வீதிகளில் மிருதங்கம் மற்றும் கரதாளங்களுடன் திருநாமங்களைப் பாடுவார்கள் என்றும், வங்காள பக்தர்களுடன் இணைந்து ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் சங்கீர்த்தன இயக்கத்தில் பங்கேற்பார்கள் என்றும் பக்திவினோத தாகூர் தொலைநோக்குடன் கண்டார்.

மேலும், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் உபதேசங்களை உலகம் முழுவதும் பரப்பக்கூடிய ஒரு மஹானான ஆளுமை தோன்றுவார் என்றும் அவர் முன்னறிவித்தார்.

இறுதி லீலைகள்

தனது இறுதிக் காலங்களில், பக்திவினோத தாகூர் பகவானின் நித்திய லீலைகளை தியானிப்பதில் மேலும் மேலும் ஆழ்ந்து ஈடுபட்டார். 1914 ஜூன் 23-ஆம் தேதி, கொல்கத்தாவில் உள்ள பக்தி பவனில் தனது இவ்வுலக லீலைகளை நிறைவு செய்து, பகவானின் நித்திய லீலைகளில் பிரவேசித்தார். பின்னர் அவரது திருமேனி ஸ்வானந்த சுகத குஞ்ஜத்தில் சமாதி செய்யப்பட்டது.

இறுதியாக,

“ஏழாவது கோஸ்வாமி” என்று அறியப்படும் ஸ்ரீல பக்திவினோத தாகூர், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் தூய உபதேசங்களை மீண்டும் உயிர்ப்பித்த சிறந்த ஆச்சாரியர்களில் ஒருவராவார்.

அவர் ஒரு கிருஹஸ்தராகவும், தந்தையாகவும், அறிஞராகவும், அரசு மாஜிஸ்திரேட்டாகவும் இருந்தபோதிலும், ஹரிநாமம், சாஸ்திரப் படிப்பு, ஆன்மீக நூல்கள் எழுதுதல் மற்றும் பிரசாரம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒழுக்கமான ஆன்மீக வாழ்க்கையை மேற்கொண்டார்.

  • ஸ்ரீ யோகபீடத்தைக் கண்டுபிடித்து மீண்டும் நிலைநாட்டியது,
  • நாமஹட்டாவை நிறுவியது,
  • வைஷ்ணவ இலக்கியங்களை எழுதி வெளியிட்டது,
  • பிரசாரப் பணிகளை மேற்கொண்டது மற்றும்
  • ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரைப் பயிற்றுவித்தது

ஆகிய அவரது சேவைகள், பிற்காலத்தில் கௌடிய வைஷ்ணவ இயக்கம் உலகம் முழுவதும் பரவுவதற்கு முக்கியமான அடித்தளத்தை அமைத்தன.

அவரது வாழ்க்கை, குடும்பப் பொறுப்புகள், தொழில் சார்ந்த கடமைகள் மற்றும் ஆன்மீக வாழ்க்கை ஆகிய அனைத்தையும் ஒன்றிணைத்து ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் சேவையில் ஈடுபடுத்த முடியும் என்பதை நமக்குக் கற்றுத் தருகிறது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare