I. ஜகந்நாத புரி திருக்கோயில்

3. ஶ்ரீ ஜகந்நாதர் கோவில் புரியில் உள்ள பிற முக்கிய தலங்கள்
m. கருட ஸ்தம்பம்

கருட ஸ்தம்பம் – பூரி ஜகந்நாதர் கோவில்

நோக்கங்கள்

நோக்கம் 1: ஜகந்நாதர் கோவிலில் அமைந்துள்ள கருட ஸ்தம்பத்தின் இருப்பிடம், முக்கியத்துவம் மற்றும் தனிச்சிறப்புகளைப் புரிந்துகொள்ளுதல்.

நோக்கம் 2: கருடரை பகவான் நாராயணரின் திவ்ய வாகனமாகவும், பகவான் ஜகந்நாதரை கைகூப்பி வணங்கும் திருக்கோலத்தில் விளங்குபவராகவும் அறிந்துகொள்ளுதல்.

நோக்கம் 3: கருட ஸ்தம்பத்தை பகவான் ஜகந்நாதருடன் பக்தி மற்றும் சரணாகதியின் மூலம் நெருக்கத்தை உணர்த்தும் அடையாளமாகப் போற்றுதல்.

நோக்கம் 4: ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் பகவான் ஜகந்நாதரிடம் கொண்டிருந்த பணிவு, சரணாகதி மற்றும் ஆழ்ந்த பக்தியைப் போற்றுதல்.

நோக்கம் 5: உண்மையான தரிசனம் என்பது நம் கண்களால் பகவானைக் காண்பது மட்டுமல்ல; பகவானின் கருணைமிக்க திருக்கடாட்சத்தைப் பெறுவதென்பதைப் போற்றுதல்.

நோக்கம் 6: கருட ஸ்தம்பம் மற்றும் அருண ஸ்தம்பம் ஆகியவற்றின் அமைவிடம் மற்றும் நோக்கத்தின் அடிப்படையில் அவற்றை வேறுபடுத்தி அறிதல்.

அறிமுகம்

நோக்கம் 1: ஜகந்நாதர் கோவிலில் அமைந்துள்ள கருட ஸ்தம்பத்தின் இருப்பிடம், முக்கியத்துவம் மற்றும் தனிச்சிறப்புகளைப் புரிந்துகொள்ளுதல்.

பூரி ஜகந்நாதர், பகவான் விஷ்ணு மற்றும் பகவான் கிருஷ்ணரின் திருவுருவமாகக் கருதப்படுகிறார். எனவே, அவருடைய திவ்ய வாகனமான கருடருக்காக அமைக்கப்பட்ட கருட ஸ்தம்பம் (வாகன ஸ்தம்பம்), ஜகந்நாதர் சந்நிதிக்கு முன்பாக, நாட்டிய மண்டபத்தின் (நாட மண்டபம்) கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

கருட ஸ்தம்பம் என்பது ஆகம மரபின்படி அமைக்கப்பட்ட கோவில்களின் தனிச்சிறப்பான அம்சமாகும். வட இந்தியக் கோவில்களில் இத்தகைய அமைப்பை பொதுவாகக் காண முடியாது. பூரி ஜகந்நாதர் கோவிலில் கருட ஸ்தம்பம் அமைந்திருப்பது ஸ்ரீ ராமானுஜாச்சாரியாரின் தாக்கத்தையும் ஆகம மரபின் செல்வாக்கையும் எடுத்துக்காட்டுகிறது.

ஜகந்நாதர் கோவிலுக்குச் செல்லும் யாத்திரை, கருட ஸ்தம்பத்தைத் தொட்டு அல்லது தழுவி வணங்காமல் முழுமையடையாது என்று பக்தர்கள் நம்புகின்றனர். கருட ஸ்தம்பம் மிகவும் புனிதமானதாகவும், பக்தர்களுக்கு உயர்ந்த சமய முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. இதற்கு கோவில் சேவகர்களால் தினமும் சிறப்பு வழிபாடுகளும் சடங்குகளும் நடைபெறுகின்றன.

இருப்பிடம்

நோக்கம் 2: கருடரை பகவான் நாராயணரின் திவ்ய வாகனமாகவும், பகவான் ஜகந்நாதரை கைகூப்பி வணங்கும் அவரது திருக்கோலத்தையும் அறிந்துகொள்ளுதல்.

ஜகந்நாதர் கோவில் நான்கு முக்கியப் பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை:

  • போக மண்டபம் (பிரசாதம் தயாரித்து சமர்ப்பிக்கும் மண்டபம்)
  • நாட்டிய மண்டபம் (நடனம் மற்றும் இசைக்கான மண்டபம்)
  • ஜகமோகன மண்டபம் (முக மண்டபம்)
  • தேஉளா (மூல சந்நிதி)

நாட்டிய மண்டபத்தில் கருட ஸ்தம்பம் எனப்படும் புனிதத் தூண் அமைந்துள்ளது. அதன் உச்சியில், பகவான் நாராயணரின் திவ்ய வாகனமான கருடாழ்வார், கைகூப்பி பகவான் ஜகந்நாதரை வணங்கும் திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

இந்த கருட ஸ்தம்பம், ரத்ன வேதி (ரத்ன சிம்மாசனம்) இருக்கும் உயரத்திற்கு இணையாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கருடாழ்வார், பகவான் ஜகந்நாதரின் திருவடிகளை எப்போதும் தரிசிக்கும் நிலையில் உள்ளார். இந்த இடத்திலிருந்து பகவான் ஜகந்நாதர், பலபத்ரர் மற்றும் தேவி சுபத்ரா ஆகிய மூவரையும் ஒரே நேரத்தில் தரிசிக்க முடியும்.

கருட ஸ்தம்பத்தைத் தழுவுவதன் பக்தி முக்கியத்துவம்

நோக்கம் 3: கருட ஸ்தம்பத்தை பகவான் ஜகந்நாதருடன் பக்தி மற்றும் சரணாகதியின் மூலம் நெருக்கத்தை உணர்த்தும் அடையாளமாகப் போற்றுதல்.

பக்தர்கள் கருட ஸ்தம்பத்தைத் தழுவி, பகவான் ஜகந்நாதருக்கு தங்கள் பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றனர். ரத யாத்திரைக்கு முந்தைய நாளில் மட்டுமே பகவானை நேரடியாகத் தழுவும் வாய்ப்பு கிடைக்கிறது. மற்ற நாட்களில் பக்தர்கள் அதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, அவர்கள் பகவானின் திவ்ய வாகனமான கருடரின் ஸ்தம்பத்தைத் தழுவி, பகவானையே தழுவிய ஆனந்தத்தை அனுபவிக்கின்றனர். பூரி யாத்திரையின் சிறப்பு, பகவானை தொலைவில் இருந்து வணங்குவதில் மட்டுமல்ல; அவரைத் தழுவும் உணர்வைப் பெறுவதிலும் உள்ளது.

இந்த கருட ஸ்தம்பத்தைத் தழுவுவதற்கு உடல் நலனுடன் தொடர்புடைய பாரம்பரிய நம்பிக்கைகளும் உள்ளன. இந்த ஸ்தம்பத்தைத் தொட்டால் குணப்படுத்த முடியாத நோய்களிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், கருடருக்கு திருமஞ்சனம் நடைபெறும் போது, பக்தர்கள் இந்த ஸ்தம்பத்தின் அடியில் அமர்ந்து தரிசனம் செய்கின்றனர். கருடரின் திருமஞ்சனத் தீர்த்தத்தின் ஒரு துளி தம்மீது விழுந்தால்கூட, பல பிறவிகளாகச் சேர்ந்து வந்த பாவங்கள் நீங்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

இந்த காரணங்களால் பக்தர்கள் கருட ஸ்தம்பத்தைத் தழுவி, தங்கள் தோள்களை அதில் சாய்த்து, பாவங்களும் நோய்களும் நீங்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றனர். அதே நேரத்தில், பகவான் ஜகந்நாதரையே தழுவுகிறோம் என்ற ஆன்மிக உணர்வையும் அவர்கள் அனுபவிக்கின்றனர்.

கருட ஸ்தம்பமும் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவும்

நோக்கம் 4: பகவான் ஜகந்நாதரிடம் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு கொண்டிருந்த பணிவு, சரணாகதி மற்றும் ஆழ்ந்த பக்தியைப் போற்றுதல்.

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு முதன்முறையாக பகவான் ஜகந்நாதரை தரிசிக்க பூரி ஜகந்நாதர் கோவிலுக்கு வந்தபோது, பக்திப் பரவசத்தில் வேகமாக உள்ளே சென்று, பகவானை தரிசித்தவுடன் மயங்கி விழுந்தார். கோவில் சேவகர்கள் அவரது மகத்துவத்தை அறியாததால் அவரை வெளியே அனுப்பிவிட்டனர். பின்னர் தாங்கள் செய்த தவறை உணர்ந்து, பகவானுக்கு அணிவிக்கப்பட்ட மாலையால் அவரை மரியாதையுடன் வரவேற்றனர்.

இந்த நிகழ்விற்குப் பிறகு, “நான் பகவான் ஜகந்நாதரின் பெரிய பக்தன் என்று எண்ணிக்கொண்டிருந்தும், பகவான் எனக்கு இப்படிச் செய்தார்” என்று நினைத்து, ஸ்ரீ சைதன்ய மகாபிரபு மிகவும் மனம் வருந்தினார். அதன்பின், அவர் கருவறைக்குள் செல்லாமல், கருட ஸ்தம்பத்தின் பின்னால் நின்று தனது பிரபுவை தரிசிக்க முடிவு செய்தார்.

அதன் பின்னர், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு கருவறைக்குள் செல்லாமல், எப்போதும் கருட ஸ்தம்பத்தின் பின்னால் நின்றே பகவான் ஜகந்நாதர், பலபத்ரர் மற்றும் தேவி சுபத்ரா ஆகிய மூவரையும் தரிசித்தார். ஒவ்வொரு முறையும் பகவானை தரிசிக்கும்போது, அவரது ஆழ்ந்த பக்தியினால் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. கருட ஸ்தம்பத்தின் பின்னால், அதைச் சுற்றி ஒரு சிறிய பள்ளம் உள்ளது. ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் கண்ணீர் அந்தப் பள்ளத்தை அடிக்கடி நிரப்பியதாக நம்பப்படுகிறது.

இந்த இடத்தில்தான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு வழக்கமாக பகவான் ஜகந்நாதரிடம் தனது பிரார்த்தனைகளைச் சமர்ப்பித்தார். போக மண்டபத்தின் நுழைவாயிலில் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் விரல் ரேகைகள் காணப்படுகின்றன. அவரது பரம பக்தியால் போக மண்டபத்தின் கல் சுவர் மென்மையாகி, அதில் அவரது விரல் ரேகைகள் பதிந்தன என்பது பாரம்பரிய நம்பிக்கையாகும்.

கருட ஸ்தம்பமும் ஸ்ரீல பிரபுபாதரும்

நோக்கம் 5: உண்மையான தரிசனம் என்பது நம் கண்களால் பகவானைக் காண்பது மட்டுமல்ல; பகவானின் கருணைமிக்க திருக்கடாட்சத்தைப் பெறுவதென்பதைப் போற்றுதல்.

கருட ஸ்தம்பத்தின் பின்னால் நின்று தரிசனம் செய்வது குறித்து ஸ்ரீல பிரபுபாதரின் உபதேசம்:

ஸ்ரீல பிரபுபாதர், பக்தர்கள் கருட ஸ்தம்பத்தின் பின்னால் நின்று, பணிவு நிறைந்த மன நிலையுடன் பகவான் ஜகந்நாதரை தரிசிக்க வேண்டும் என்று உபதேசித்தார்.

பகவான் ஜகந்நாதர் நாம் காணவேண்டிய ஒரு பொருள் அல்ல; மாறாக, தமது பக்தர்களைக் கருணையுடன் காணும் பரம சாட்சி என்று அவர் விளக்கினார்.

ஒருவர் “நானே அனுபவிப்பவன்” என்ற அகந்தையை விட்டுவிட்டு, அன்பான சேவை மனப்பான்மையுடன் (சேவோன்முக பாவம்) பகவானை அணுகும்போது, பகவான் ஜகந்நாதர் தம்மைத் தாமே அவருக்கு வெளிப்படுத்துகிறார்.

எனவே, கருட ஸ்தம்பம் பக்தர்களுக்கு நினைவூட்டுவது என்னவென்றால், நமது பெளதிகக் கண்களால் பகவானைக் காண முயற்சிப்பதைவிட, பகவானின் கருணைமிக்க திருக்கடாட்சத்தைப் பெற வேண்டும் என்பதே உண்மையான தரிசனமாகும்.

கருட ஸ்தம்பம் மற்றும் அருண ஸ்தம்பம்

நோக்கம் 6: கருட ஸ்தம்பம் மற்றும் அருண ஸ்தம்பம் ஆகியவற்றின் அமைவிடம் மற்றும் நோக்கத்தின் அடிப்படையில் அவற்றை வேறுபடுத்தி அறிதல்.

பக்தர்களும் யாத்திரிகர்களும் கருட ஸ்தம்பத்தையும் அருண ஸ்தம்பத்தையும் அடிக்கடி ஒன்றாகக் குழப்புகின்றனர்.

  • கருட ஸ்தம்பம் ஜகந்நாதர் கோவிலின் உள்ளே, நட மண்டபத்தில் அமைந்துள்ளது. இது பகவான் விஷ்ணுவின் தெய்வீக வாகனமான கருடருக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனிதத் தூணாகும். இது ஜகந்நாதர் கோவிலின் அசல் கட்டிட அமைப்பின் ஒரு பகுதியாகவே கட்டப்பட்டது.
  • அருண ஸ்தம்பம் கோவில் வளாகத்திற்கு வெளியே, கிழக்குப் பகுதியில் உள்ள சிங்கத்வாரம் (சிங்க வாசல்) முன்பாக அமைந்துள்ளது. 25 அடி உயரமுள்ள இந்த ஒற்றைக்கல் தூண் முதலில் கோணார்க் சூரியர் கோவிலில் நிறுவப்பட்டது. பின்னர் கி.பி. 18ஆம் நூற்றாண்டில் அங்கிருந்து பூரி ஜகந்நாதர் கோவிலுக்கு மாற்றி நிறுவப்பட்டது. இது சூரிய பகவானின் தேரோட்டியான அருணனுடன் தொடர்புடையது.

கோவில் வளாகத்திற்கு வெளியே உள்ள அருண ஸ்தம்பம்

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare