அத்தியாயம் – 2
கஜேந்திரனின் ஆபத்தான நிலை
பதம் 8.2.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: எனக்குப் பிரியமான ராஜனே, திரிகூடம் என்று அழைக்கப்படும் மிகப் பெரிய மலை ஒன்றுள்ளது. அது பத்தாயிரம் யோஜனங்கள் (எண்பதாயிரம் மைல்கள்) உயரம் கொண்டதாகும். பாற்கடலால் சூழப்பட்டு இருந்ததால், அது மிகவும் அழகாக அமைந்திருந்தது.

பதங்கள் 8.2.2 – 8.2.3 : மலையின் நீளமும், அகலமும் ஒரே அளவு கொண்டவையாகும் (எண்பதாயிரம் மைல்கள்). இரும்பு, வெள்ளி மற்றும் தங்கம் ஆகியவற்றாலான அவற்றின் மூன்று முக்கியமான சிகரங்கள் எல்லாத் திசைகளையும், ஆகாயத்தையும் அழகுபடுத்தின. மலையில் மற்ற சிகரங்களும் உள்ளன. அவை இரத்தினங்களாலும், உலோகங்களாலும் நிரப்பப்பட்டு இருப்பதுடன், அழகிய மரங்களாலும், கொடிகளாலும் மற்றும் புதர்ச் செடிகளாலும் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. மலைமீதுள்ள நீர்வீழ்ச்சிகள் இன்பமூட்டும் ஓசைகளை எழுப்புகின்றன. இவ்வாறாக அந்த மலை, அனைத்து திசைகளின் அழகையும் அதிகரிக்கின்றது.

பதம் 8.2.4 : மலை அடிவாரத்திலுள்ள பூமி பாலலைகளால் எப்பொழுதும் கழுவப்படுகிறது. இது எட்டு திசைகளிலும் (வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் அவற்றிற்கு இடையிலுள்ள திசைகள்) மலையைச் சுற்றிலும் மரகதக் கற்களை உற்பத்தி செய்கிறது.

பதம் 8.2.5 : உயர் கிரகங்களின் வாசிகளான சித்தர்கள், சாரணர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், சர்ப்பங்கள், கின்னரர்கள் மற்றும் அப்ஸரர்கள் கேளிக்கைகளில் ஈடுபடுவதற்காக அம்மலைக்குச் செல்கின்றனர். இவ்வாறாக மலைக் குகைகள் அனைத்தும் சுவர்க்கலோக வாசிகளால் நிரப்பப்பட்டுள்ளன.

பதம் 8.2.6 : குகைகளில் பாடிக்கொண்டிருக்கும் சுவர்க்க வாசிகளின் எதிரொலிக்கும் வாத்தியங்களால், அங்குள்ள சிங்கங்கள், மற்றொரு சிங்கம் தான் அவ்வாறு கர்ஜிக்கிறது என்றெண்ணின. தங்களுடைய பலத்தில் மிகவும் கர்வம் கொண்டிருந்ததால், அவை சகிக்க முடியாத பகையுடன் கர்ஜனை செய்தன.

பதம் 8.2.7 : திரிகூட மலை அடிவாரத்திலுள்ள பள்ளத்தாக்குகள் பலவகைப்பட்ட வனவிலங்குகளால் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளன மேலும் தேவர்களால் பராமரிக்கப்படும் தோட்டங்களில் உள்ள மரங்களில் பலவகையான பறவைகள் இனிய குரல்களுடன் கீச்சிடுகின்றன.

பதம் 8.2.8 : திரிகூட மலையில் பல ஏரிகளும், நதிகளும் உள்ளன. இவற்றின் கரைகள் நுண்மணல்களை ஒத்த சிறு இரத்தினங்களால் மூடப்பட்டு உள்ளன. அவை பளிங்கு போன்ற தெளிந்த நீர் கொண்டவையாகும். மேலும் தேவ மங்கைகள் அதில் நீராடும்பொழுது, அவர்களுடைய உடல்களின் நறுமணம் நீரையும், தென்றல்காற்றையும் வாசனைப்படுத்துகின்றது. இவ்வாறாக சுற்றுப்புறம் அழகுபடுத்தப்படுகின்றது.

பதங்கள் 8.2.9 – 8.2.13 : திரிகூட மலையின் ஒரு பள்ளத்தாக்கில் ருதுமத் என்று அழைக்கப்படும் ஒரு தோட்டம் இருந்தது. அத்தோட்டம் மிகச்சிறந்த பக்தரான வருணனுக்குச் சொந்தமானதாகவும், தேவ மங்கையர்களின் உல்லாசமான பொழுது போக்குக்குரிய ஓரிடமாகவும் இருந்தது. மலர்களும், பழங்களும் எல்லாப் பருவ காலங்களிலும் அங்கு விளைந்தன. அவற்றுக்கிடையில் மந்தாரங்கள், பாரிஜாதங்கள், பாடலங்கள், அசோகங்கள், சம்பகங்கள், சூதங்கள், பியாலங்கள், பனசங்கள், மாம்பழங்கள், ஆம்ராதகம், கிரமுகம், தென்னை, பேரீச்சம் மற்றும் மாதுளம் ஆகிய மரங்களும் இருந்தன. மேலும் பனை மதுக, பனை தமால, அஸன, அர்ஜுன, அரிஷ்ட, உடும்பர, பலக்ஷ, ஆல, கிம்சுக மற்றும் சந்தன மரங்களும் இருந்தன. மேலும் பிசுமர்தங்களும், கோவிதாரங்களும், ஸரலங்களும், மற்றும் ஸுர-தாருகள், திராட்சைகள், கரும்பு, வாழைப்பழங்கள், நாவல், பதரீக்கள், அக்ஷங்கள், அபயங்கள் மற்றும் ஆமலகீகளும் கூட அங்கு இருந்தன.

பதங்கள் 8.2.14 – 8.2.19 : அத்தோட்டத்தில் மிகப்பெரிய ஏரி ஒன்று இருந்தது. அது பிரகாசிக்கும் பொன்னிறமான தாமரை மலர்களாலும், மேலும் குமுதம், கஹ்லார, உத்பலம் மற்றும் சதபத்ரம் ஆகிய மலர்களாலும் நிரப்பப்பட்டதாக இருந்தது. இவையனைத்தும் மலைக்கு பெரும் அழகைச் சேர்த்தன. அங்கு பில்வ, கபித்த, ஜம்பீர மற்றும் பல்லாதக மரங்களும்கூட இருந்தன. மதிமயங்கிக் கிடந்த தேனீக்கள் தேனை அருந்தி ரீங்காரம் செய்தன. இவற்றுடன் சேர்ந்து பறவைகளும் கீச்சிட்டன. இப்பறவைகளின் பாடல்கள் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தன. அந்த ஏரி அன்னப்பறவைகள், காரண்டவ கொக்கு, சக்ராவாக பறவைகள், மேலும் நீர்க் கோழிகள், தாத்யூஹங்கள், கோயஷ்டிகள் மற்றும் பிற முணுமுணுக்கும் பறவைக் கூட்டங்களாலும் நிரப்பப்பட்டு இருந்தது. மீன்கள் மற்றும் ஆமைகளின் கிளர்ச்சியடையச் செய்யும் அசைவுகளால், நீர் தாமரை மலர்களிலிருந்து உதிர்ந்த மகரந்தத் தூள்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏரி கதம்ப மலர்கள், வேதஸ மலர்கள், மற்றும் நல, நீப, வஞ்சுலக, குந்த, குருபக, அசோக, சிரீஷ, கூடஜ, இங்குத, குப்ஜக, ஸ்வர்ண-யூதீ, நாக, புன்னாக, ஜாதீ, மல்லிகை, சதபத்ரம், ஜாலகா, மாதவீ-லதா ஆகிய மலர்களால் சூழப்பட்டு இருந்தது. ஏரிக்கரைகளும் கூட எல்லாப் பருவகாலங்களிலும் மலர்களையும், பழங்களையும் ஈனும் பலவகையான மரங்களால் மிகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இவ்வாறாக அந்த மலை முழுவதும் அழகாக அலங்கரிக்கப்பட்ட நிலையில் இருந்தது.

பதம் 8.2.20 : திரிகூட மலையின் காடுகளில் வசித்து வந்த யானைகளின் தலைவன், அதன் பெண் யானைகளுடன் ஒருமுறை அந்த ஏரியை நோக்கியவாறு அலைந்து திரிந்தது. அது பல மரம், செடி, கொடிகள் மற்றும் புதர்கள் ஆகியவற்றின் முட்களையும் பொருட்படுத்தாமல் அவற்றை உடைத்தெறிந்தது.

பதம் 8.2.21 : அந்த யானையின் மோப்பத்தை உணர்ந்ததாலேயே, மற்றெல்லா யானைகளும், புலிகளும் மற்றும் பிற கொடிய மிருகங்களான சிங்கம், காண்டாமிருகம், மிகப் பெரிய பாம்புகள் ஆகியவையும், கருப்பு, வெள்ளை நிறங்களைக் கொண்ட ஸர்பங்களும் பயத்தால் ஓட்டம் பிடித்தன. சமரீ மானும் கூட ஓட்டம் பிடித்தது.

பதம் 8.2.22 : இந்த யானையின் தயவால், நரிகள், ஓநாய்கள், எருமைகள், கரடிகள், பன்றிகள், கோபுச்சங்கள், முள்ளம் பன்றிகள், குரங்குகள், முயல்கள், மற்ற மான்கள் போன்ற மிருகங்களும், பல்வேறு சிறிய மிருகங்களும் காட்டின் வேறொரு இடத்தில் சுற்றித்திரிந்தன. அதனிடம் அவை அச்சம் கொண்டிருக்கவில்லை.

பதங்கள் 8.2.23 – 8.2.24 : பெண் யானைகள் உட்பட, மந்தையின் மற்ற யானைகளால் சூழப்பட்டவாறும், கன்றுகளால் பின்தொடரப்பட்டவாறும், யானைகளின் தலைவனான கஜபதி, அதன் உடலின் பளுவால் திரிகூட மலையையே நடுங்கச் செய்தது. அதன் உடல் வியர்த்துப் போய், அதன் வாயிலிருந்து திரவம் சொட்டியது. மேலும் அதன் பார்வை போதையின் மயக்கத்திற்கு உட்பட்டிருந்தது, தேனை அருந்திய தேனீக்களால் அது சேவிக்கப்பட்டது. மேலும் ஏரியிலிருந்து தென்றல் காற்றால் ஏந்திவரப்பட்ட தாமரைப் பூக்களின் மகரந்தப் பொடிகளை தூரத்திலிருந்தே அதனால் முகர முடிந்தது. இவ்வாறாக தாகத்தால் பெருந்துன்பத்திற்கு ஆளான அதன் சகாக்களால் சூழப்பட்டவாறு விரைவில் ஏரிக் கரையை அது அடைந்தது.

பதம் 8.2.25 : யானைகளின் அரசன் ஏரியினுள் இறங்கி, நன்றாகக் குளித்து, அதன் சோர்விலிருந்து விடுபட்டது. பிறகு, அதனுடைய தும்பிக்கையின் உதவியுடன், தாமரை மற்றும் அல்லி மலர்களின் தூள்களால் கலக்கப்பட்டிருந்த குளிர்ந்த, தெளிந்த, அமிர்தம் போன்ற நீரை பூரண திருப்தி அடையும்வரை அது குடித்தது.

பதம் 8.2.26 : ஆன்மீக அறிவு இல்லாதவனும், தனது குடும்ப அங்கத்தினரிடம் அதிக பற்றுடையவனுமான ஒரு மனிதனைப் போலவே, கிருஷ்ணரின் மாயா சக்தியால் வசீகரிக்கப்பட்ட அந்த யானை, அதன் மனைவிகளையும், கன்றுகளையும் குளிப்பாட்டி, நீரை அருந்தச் செய்தது. அது தனது தும்பிக்கையால் ஏரியிலிருந்து நீரை உறிஞ்சி அவற்றின் மீது தெளித்தது. இம்முயற்சியில் சம்பந்தப்பட்டுள்ள கடினமான உழைப்பை அது பொருட்படுத்தவில்லை.

பதம் 8.2.27 : ராஜனே, விதியின் ஏற்பாட்டால், பலம் வாய்ந்த முதலையொன்று யானைமீது கோபம் கொண்டு நீருக்குள் யானையின் காலைக் கவ்விக் கொண்டது. சந்தேகமின்றி யானை பலசாலிதான். விதியால் அனுப்பப்பட்ட இந்த அபாயத்திலிருந்து விடுபட அது தன்னால் இயன்றவரை முயன்றது.

பதம் 8.2.28 : அதன்பிறகு, கஜேந்திரனின் அந்த ஆபத்து சூழ்நிலையைக் கண்ட அதன் மனைவிகள், மிகமிக வருத்தமடைந்து பிளிறத் துவங்கின. மற்ற யானைகள் கஜேந்திரனுக்கு உதவ விரும்பின. ஆனால் முதலையின் பெரும் பலத்தின் காரணத்தால், பின்புறத்திலிருந்து பற்றி இழுப்பதன் மூலம் அதை அவைகளால் காப்பாற்ற முடியவில்லை.

பதம் 8.2.29 : ராஜனே, இவ்விதமாக யானையும், முதலையும் ஆயிரம் ஆண்டுகளாக நீருக்குள்ளேயும், நீருக்கு வெளியேயும் ஒன்றையொன்று இழுத்தவாறு சண்டை செய்தன, சண்டையைக் கண்ணுற்ற தேவர்கள் மிகவும் ஆச்சரியம் அடைந்தனர்.

பதம் 8.2.30 : அதன்பிறகு, பல நீண்ட ஆண்டுகளாக நீரினுள் இழுக்கப்பட்டு சண்டை செய்ததால், யானையின் மனோ, உடல் மற்றும் புலன் பலங்கள் குறைந்தன. மாறாக நீர்வாழ் பிராணியான முதலையின் உற்சாகம், உடல்பலம் மற்றும் இந்திரியபலம் ஆகியவை அதிகரித்தன.

பதம் 8.2.31 : விதிப்பயனாய் தான் முதலையின் பிடிக்குள் அகப்பட்டுக் கிடப்பதைக் கண்ட யானைகளின் அரசன், தான் உடலைப் பெற்றிருந்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலையால் நிராதரவாக இருந்தாலும், தன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியாததாலும், கொல்லப்படுவோமோ என்ற பெரும் பயத்திற்கு அது ஆளானது. இதன் விளைவாக, நீண்ட காலமாக சிந்தனையில் ஆழ்ந்து, இறுதியில் பின்வரும் முடிவுக்கு வந்தது.

பதம் 8.2.32 : என்னுடைய நண்பர்களும், உறவினர்களுமான மற்ற யானைகளால் என்னை இந்த அபாயத்திலிருந்து காப்பாற்ற முடியவில்லை. பின் என் மனைவிகளைப் பற்றி என்ன சொல்வது? அவைகளால் எதுவும் செய்ய முடியாது. விதிப்பயனால்தான் நான் இந்த முதலையின் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறேன். ஆகவே மகாபுருஷர்கள் உட்பட அனைவருக்கும் புகலிடம் அளிப்பவரான முழுமுதற் கடவுளிடம் நான் புகலிடம் கொள்வேனாக.

பதம் 8.2.33 : முழுமுதற் கடவுள் நிச்சயமாக அனைவராலும் அறிந்து கொள்ளப்பட்டுள்ளவர் அல்ல. ஆனால் அவர் மிகவும் சக்தி வாய்ந்தவரும், செல்வாக்கு உடையவருமாவார். நித்திய காலமெனும் சர்ப்பம் பயத்தை விளைவிக்கும் சக்தி கொண்டதும், முடிவின்றி அனைவரையும் துரத்திக் கொண்டு வருவதும், அனைவரையும் விழுங்கிவிடத் தயாராக இருப்பதுவுமாகும். ஆகவே, இச்சர்ப்பத்தைக் கண்டு அஞ்சுபவன் பகவானிடம் புகலிடம் கொள்வானாயின், பகவான் அவனுக்கு அபயம் அளிக்கிறார். ஏனெனில், மரணம் கூட பகவானைக் கண்டு அஞ்சி ஓட்டம் பிடிக்கிறது. ஆகவே மிகவும் சக்திவாய்ந்த பரம அதிகாரியும், அனைவருக்கும் உண்மையான புகலிடம் அளிப்பவருமான அவரிடம் நான் சரணாகதி அடைகிறேன்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare