பகவத் கீதை 9.5 – பாடத் தொகுப்பு
ஸ்லோகம்
ந ச மத்-ஸ்தானி பூதானி
பஷ்ய மே யோகம் ஐஶ்வரம்
பூத-ப்ருன் ந ச பூத-ஸ்தோ
மமாத்மா பூத-பாவன:
சொல் பொருள்
| சம்ஸ்கிருதம் | பொருள் |
| ந | ஒருபோதும் இல்லை |
| ச | மேலும் |
| மத்-ஸ்தானி | என்னுள் நிலைபெற்றவை |
| பூதானி | படைப்பு முழுவதும் |
| பஷ்ய | காண்பாயாக |
| மே | என் / என்னுடைய |
| யோகம் ஐஶ்வரம் | அறிய முடியாத தெய்வீக யோக சக்தி |
| பூத-ப்ருன் | எல்லா ஜீவன்களின் பாதுகாவலர் |
| பூத-ஸ்தோ | பிரபஞ்சத் தோற்றத்தில் |
| மம | என் / என்னுடைய |
| ஆத்மா | ஆத்மா / பரமாத்மா |
| பூத-பாவன | எல்லாத் தோற்றங்களின் மூலமான |
மொழிபெயர்ப்பு
இருப்பினும், படைக்கப்பட்டவை எல்லாம் என்னில் நிலை பெற்றிருக்கவில்லை. எனது யோகத்தின் ஐஸ்வர்யத்தைப் பார்! நானே எல்லா உயிரினங்களையும் காப்பவன் என்றபோதிலும், எங்கும் நிறைந்துள்ளவன் என்றபோதிலும், நான் இந்த பிரபஞ்சத் தோற்றத்தின் ஒரு பகுதி அல்ல, ஏனெனில் நானே படைப்பின் மூல காரணம்.
குறிக்கோள்
பகவான் கிருஷ்ணரின் அளவிட முடியாத தெய்வீக யோக மகிமையைப் புரிந்துகொள்வது — அவர் அனைத்தையும் தாங்கி, அனைத்திலும் விரிந்திருந்தும், அவற்றிலிருந்து விலகியவனாகவும்,அனைத்திற்கும் அப்பாற்பட்ட பரமாத்மாவாகவும் இருப்பதை உணர்வது.
நோக்கங்கள்
- உயிர்கள் கிருஷ்ணரில் நிலைத்திருக்கின்றன; அதே நேரத்தில் அவர் அவற்றில் இல்லை என்ற வெளிப்படையான முரண்பாட்டை உணர்வது.
- கிருஷ்ணர் கூறும் “தெய்வீக யோக மகிமை” என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வது.
- கிருஷ்ணர் எவ்வாறு அனைத்து உயிர்களையும் தாங்கி பாதுகாக்கிறார் என்பதை அறிதல்.
- படைப்பைத் தாண்டி, கிருஷ்ணர் எவ்வாறு பரமாத்மா நிலையிலிருக்கிறார் என்பதை உணர்தல்.
- பொருள்மயமான உலகத்துடன் கிருஷ்ணரின் தனித்துவமான உறவை மதித்து உணர்வது.
- கிருஷ்ணர் இந்தப் பிரபஞ்ச உருவாக்கத்தின் ஒரு பகுதியாக உள்ளாரா என்பதை அறிதல்.
அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் முறை
- பகவான் கிருஷ்ணரின் இயல்பை வெறும் யுக்தியால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது; அது பக்தியால் மட்டுமே உணரப்படுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- வாழ்வைப் பேணுபவராகிய கிருஷ்ணரை நினைத்துக்கொண்டு, தினமும் நன்றியுணர்வை வெளிப்படுத்த வேண்டும்.
- பகவான் கிருஷ்ணரின் உதாரணத்தைப் பின்பற்றி, உலகில் வாழ்ந்தாலும் அதில் சிக்கிக்கொள்ளாமல் பற்றின்மையை வளர்த்தல் வேண்டும்.
- கண்ணுக்குத் தெரிவதில்லை என்றாலும், நம்மை என்றும் தாங்கிக் கொள்கிறவர் கிருஷ்ணர் என்பதில் நம்பிக்கையை ஆழப்படுத்த வேண்டும்.
- அவரின் தெய்வீக யோக மகிமையை தியானித்து, பெரும் பக்திப்பண்பையும் மரியாதையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பகவான் கிருஷ்ணரின் அதிசய ஐஸ்வர்யம் என்னவெனில், அவர் அனைத்து படைப்பையும் தாங்கிப் பேணுபவரும், எல்லாவற்றையும் ஊடுருவி நிற்பவருமாக இருந்தாலும், முழுமையாகச் சுயாதீனராகவும் அனைத்திற்கும் அப்பாற்பட்ட பரமாத்மாவாகவும் திகழ்கிறார்.

