1. ராதா குண்டம் & ஷ்யாம குண்டம்

நோக்கங்கள்:

நோக்கம் 1: ராதா குண்டம் ஷ்யாம குண்டம் ஆகியவை விரஜ பூமியின் பரம புனிதமான இடங்களாகக் கருதப்படும் காரணங்களை அறிதல்.

நோக்கம் 2:  இக்குண்டங்களின் இருப்பிடம் மற்றும் பௌதிக அமைப்புகளை அறிதல்.

நோக்கம் 3: குண்டங்களின் புனித அம்சங்கள், வனங்கள் மற்றும் அவற்றின் தொடர்புடைய பக்தர்களைப் பற்றி விளக்குதல்.

நோக்கம் 4: இந்த குண்டங்கள் உருவாகக் காரணமான ஆன்மீகப் பின்னணி மற்றும் தெய்வீக லீலைகளைப் புரிந்து கொள்வது.

நோக்கம் 5: இக்குண்டங்கள், ஔரங்கசீப்பின் காலத்தில் தெய்வ விக்ரஹங்களைப் பாதுகாத்த வரலாற்றை வெளிக்கொணர்தல்.

நோக்கம் 6: ஸ்ரீ சைதன்ய மகாபிரபு மற்றும் கோஸ்வாமிகளால் செய்யப்பட்ட புனர் நிர்மாணம் மற்றும் புதுப்பிப்பு முயற்சிகளை அறிதல்.

நோக்கம் 7: பஹுலாஷ்டமி விழாவையும், அதனுடன் தொடர்புடைய ஆன்மீகச் சடங்குகளையும் புரிந்து கொள்ளல்.

நோக்கம் 8 : ராதா குண்டம் மற்றும் ஷ்யாம குண்டத்தில் பின்பற்றப்படும் ஆன்மீக நடைமுறைகள் மற்றும் முறையான ஆச்சாரங்களைப் புரிந்து கொள்ளல்.

நோக்கம் 9: ராதா குண்டம் மற்றும் ஷ்யாம குண்டம் ஆகியவற்றின் மகிமைகளைப் பற்றி புராண இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவை, மகான்கள் மற்றும் ஆச்சாரியர்கள் கூறியுள்ள விளக்கங்களை வெளிப்படுத்துதல்.

தெய்வீக காதலின் அடையாளமான புனித குளங்கள்

நோக்கம் 1: ராதா குண்டம் ஷ்யாம குண்டம் ஆகியவை விரஜ பூமியின் பரம புனிதமான இடங்களாகக் கருதப்படும் காரணங்களை அறிதல்.

ராதா குண்டம் மற்றும் ஷ்யாம குண்டம் ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் ஸ்ரீமதி ராதாராணியின் இலட்சக் கணக்கான பக்தர்களின் இதயங்களில் ஒரு மரியாதைக்குரிய இடத்தைப் பிடித்துள்ளன. இந்த புனித குளங்கள் மகத்தான மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மட்டுமல்ல, தெய்வீக அன்பு, நித்திய பக்தி மற்றும் ஆன்மீக உன்னதத்தின் சின்னமாகவும் உள்ளன. இந்த இரண்டு குளங்களும் ஸ்ரீமதி ராதாராணி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் ஆகிய இருவரின் மிகவும் இரகசியமான நீராடும் இடங்களாக இருந்ததால், அவை மூன்று உலகங்களுக்குள் மிகவும் புனிதமான இடங்களாகக் கருதப்படுகின்றன. ஸ்ரீமதி ராதாராணி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு இடையில் நடைபெறும் அஷ்ட-காளிய-நித்ய-லீலையின் (எட்டு மடங்கு தினசரி பொழுது லீலைகள்) முக்கிய தளங்களில் ஒன்றாக ராதா-குண்டம் இருந்தது. மேலும் அவர்கள் ராச-லீலை செய்த இடங்களில் ஒன்றாகும். நாராயண பட்டரால் நிறுவப்பட்ட ராதா குண்டத்தில், ராசலீலைகளை நினைவுகூரும் ஆறு ரச மண்டலங்கள் உள்ளன. ராதா குண்டம் வ்ரஜத்தின் முக்கியமான உபவனங்கள் அல்லது துணை வனங்களில் ஒன்றாகும் என்றும், ஸ்ரீ-வனம் என்றும் புராணங்கள் கூறுகின்றன. ஸ்ரீ என்பது ஸ்ரீமதி ராதாராணியின் மற்றொரு பெயராகும்.

நோக்கம் 2:  இக்குண்டங்களின் இருப்பிடம் மற்றும் பௌதிக அமைப்புகளை அறிதல்.

அமைவிடம்:

ராதா குண்டமும் ஷ்யாம குண்டமும் மதுராவிலிருந்து மேற்கே சுமார் 26 கிமீ (16 மைல்) தொலைவில் உள்ளன.

ஒவ்வொரு குண்டமும் சுமார் இருநூறு சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. ராதா குண்டம் மற்றும் ஷ்யாம குண்டங்களைப் பிரிக்கும் அழகான சுவர் ஒன்று உள்ளது. அந்த சுவர் வேலைப்பாடுகள் கொண்ட தூண்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரால் வேதங்களின் அடிப்படையில் விவரிக்கப்பட்டபடி, ஸ்ரீமதி ராதாராணி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் பளிங்கு கால்தடங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

நோக்கம் 3: குண்டங்களின் புனித அம்சங்கள், வனங்கள் மற்றும் அவற்றின் தொடர்புடைய பக்தர்களைப் பற்றி விளக்குதல்.

ராதா குண்டம் மற்றும் ஷ்யாம குண்டத்தின் புனித அம்சங்கள்

ராதா குண்டத்தின் நடுவில், காஞ்சன குண்டம் என்று அழைக்கப்படும் ஒரு சிறிய, மூடப்பட்ட பகுதி உள்ளது. இந்த குண்டம் ஸ்ரீமதி ராதாராணியும் அவரது தோழிகளும் தங்கள் வளையல்களால் தோண்டி உருவாக்கிய குளத்தைக் குறிக்கிறது.

ஸ்ரீ கிருஷ்ணர் அரிஸ்டாசுரனைக் கொன்ற இடத்தை , நினைவூட்டும் வகையில், கிருஷ்ணரின் கொள்ளுப் பேரன் வஜ்ரநாபர் பின்னர் ஷ்யாம குண்டத்தில் ஒரு குளியல் துறையை ஏற்படுத்தினார். . ஷ்யாம குண்டம் தண்ணீரில் நிரப்பப்படும்போது, இந்த பழங்கால குளம் பார்வையில் இருந்து மறைக்கப்படுகிறது. ஆனால் நீர் மட்டம் குறையும் நேரங்களில், மையத்தில் ஒரு சிறிய, ஆழமான சுவர் பகுதியைக் காணலாம் – இது வஜ்ரநாப குண்டம் என்று அழைக்கப்படுகிறது.

ஷ்யாம குண்டம் பாரம்பரியமாக அரிஸ்டா குண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. அதைச் சுற்றி மதுமங்கலா, சுபலா மற்றும் உஜ்வாலா முதலிய ஸ்ரீ கிருஷ்ணரின் மிக நெருக்கமான மற்றும் நம்பகமான மாடு மேய்க்கும் நண்பர்களின் சோலைகள் உள்ளன. இந்த சிறுவர்கள் ஸ்ரீ கிருஷ்ணர், தமது அன்புக்குரிய கோபியருடன் லீலைகளில் ஈடுபடுவதற்காக தங்கள் சோலை வனங்களை அன்புடன் வழங்கியுள்ளனர்.

சியாம குண்டத்தின் வடமேற்கு மூலையில், மானசபவனா படித்துறை என்று அழைக்கப்படும் சுபலாவின் சோலைவனம் உள்ளது. இது ஸ்ரீமதி ராதாராணியும் அவரது தோழிகளும் ஒவ்வொரு நாளும் ஆழ்ந்த பக்தியுடன் நீராடும் மிகவும் புனிதமான இடம். இங்குள்ள நீர் ஆன்மீக ரீதியாக அசாதாரணமாகக் கருதப்படுகிறது – இதில் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரை பாதங்களிலிருந்து பாயும் இனிமையான அமிர்தம் உள்ளது. மேலும் இந்த காரணத்திற்காக, இது ஸ்ரீமதி ராதாராணிக்கு ஸ்ரீ கிருஷ்ணரைப் போலவே பிரியமானது.

ராதா குண்டத்தைச் சுற்றி, எட்டு திசைகளிலும் ஸ்ரீமதி ராதாராணியின் எட்டு முக்கிய தோழிகளான லலிதா, விசாகா, சித்ரா, இந்துலேகா, சம்பகலதா, ரங்கா தேவி, துங்கவித்யா மற்றும் சுதேவி ஆகியோரின் அழகான சோலைவனங்கள் உள்ளன. ராதா குண்டத்தின் மையத்தில் ஸ்ரீ அனங்கமஞ்சரியின் புனித சோலை உள்ளது. அனங்க மஞ்சரி, ஸ்ரீமதி ராதாராணியின் தங்கையும் அவரது தெய்வீக லீலைகளில் மிகச்சிறந்த உதவியாளருமானவர்.

நோக்கம் 4: இந்த குண்டங்கள் உருவாகக் காரணமான ஆன்மீகப் பின்னணி மற்றும் தெய்வீக லீலைகளைப் புரிந்து கொள்வது.

ஆன்மீக முக்கியத்துவம்

பண்டைய வேதங்கள் மற்றும் பக்தி மரபுகளின்படி, துவாபர யுகத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் சம்பந்தப்பட்ட தெய்வீக லீலைகளின் போது, ஸ்ரீமதி ராதா ராணியே ராதா குண்டத்தை உருவாக்கினார்.

ஒரு சமயம், ஸ்ரீ கிருஷ்ணரைக் கொல்வதற்காக காளையின் வடிவில் வந்திருந்த ஒரு அசுரன், அரிஸ்டாசுரனை, ஸ்ரீ கிருஷ்ணர் வதம் செய்து முடித்தார். பிறகு, புனிதமாகக் கருதப்படும் ஒரு காளையைக் கொன்ற பாவத்தைச் செய்ததாகக் கூறி, ஸ்ரீமதி ராதாராணியும் அவரது சகிகளும், ஸ்ரீ கிருஷ்ணருடன் விளையாட்டாக பழக மறுத்துவிட்டனர்.

தம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ள, ஸ்ரீ கிருஷ்ணர் தமது குதிகாலால் ஒரு குண்டத்தை (குளத்தை) தோண்டி, அதை அனைத்து புனித நதிகளின் நீரால் நிரப்பினார். ஸ்ரீமதி ராதாராணி, தனது தெய்வீக நிலையை நிலைநிறுத்துவதற்காக, தனது நண்பர்களின் உதவியுடன், அருகிலேயே தனது சொந்த குண்டத்தை உருவாக்கினார். பின்னர் அது ஸ்ரீ கிருஷ்ணரின் குண்டத்திலிருந்து தண்ணீரால் நிரப்பப்பட்டது – இது ஸ்ரீமதி ராதாராணிக்கும் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் இடையிலான பிரிக்க முடியாத அன்பைக் குறிக்கிறது.

ராதா குண்டத்திலிருந்து ஒரு துளி நீர் கூட, மிக உயர்ந்த ஆன்மீக ஆசீர்வாதத்தை அளிக்கக் கூடியது.

நோக்கம் 5: இக்குண்டங்கள், ஔரங்கசீப்பின் காலத்தில் தெய்வ விக்ரஹங்களைப் பாதுகாத்த வரலாற்றை வெளிக்கொணர்தல்.

வரலாற்று முக்கியத்துவம்

ராதா-குண்டத்தில் விக்ரஹங்கள்:

1670 ஆம் ஆண்டு, முகலாய கொடுங்கோலன் ஔரங்கசீப் விருந்தாவனத்தின் மீது தாக்குதல் நடத்தி, அனைத்து கோயில்களையும் அழித்து, விக்கிரஹங்களையும் பங்கப்படுத்தத் திட்டமிட்டிருந்தான். அதிர்ஷ்டவசமாக, ராஜபுத்திர இளவரசர்களால் ஔரங்கசீப்பின் அரசவையில் பணியமர்த்தப்பட்ட ஒற்றர்கள் மூலம் முன்கூட்டியே எச்சரிக்கை பெறப்பட்டதால், கௌடிய கோஸ்வாமிகளின் அனைத்து முக்கிய விக்ரஹங்களும் விருந்தாவனத்திலிருந்து மாட்டு வண்டிகளில் கடத்தப்பட்டு ராதா குண்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. ஆரம்ப ஆபத்து நீங்கும் வரை விக்கிரஹங்கள் குண்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. விக்கிரஹங்கள் ராதா-குண்டத்தில் பல நாட்கள் இருந்தன. உள்ளூர்வாசிகள் அவற்றைத் தினமும் வழிபட்டனர். பின், காம்யவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அதன் பிறகு இறுதியாக, ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டன. கௌடிய கோஸ்வாமியின் விக்கிரஹங்கள் ராதா குண்டத்தை விட்டு வெளியேறிய பிறகு, உள்ளூர் வ்ரஜவாசிகளும் வைஷ்ணவர்களும் பெரும் பிரிவுத் துயரை உணர்ந்தனர். எனவே பிரதிபு-மூர்த்திகள் – அசலைப் போன்றதேயான வடிவமும், சக்திகளும் உடைய பிரதிமை விக்கிரஹங்கள் செய்யப்பட்டு, கோஸ்வாமிகள் நிர்மாணித்த கோயில்களில் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம், ராதா-குண்டத்தில் வசிப்பவர்கள் ராதா குண்டத்தை விட்டு வெளியேறாமல் ‘விருந்தாவனத்தின் ஏழு கோஸ்வாமி கோயில்களை’ தரிசனம் செய்ய ஏதுவானது.

நோக்கம் 6: ஸ்ரீ சைதன்ய மகாபிரபு மற்றும் கோஸ்வாமிகளால் செய்யப்பட்ட புனர் நிர்மாணம் மற்றும் புதுப்பிப்பு முயற்சிகளை அறிதல்.

குண்டங்களின் மறு கண்டுபிடிப்பு மற்றும் புதுப்பித்தல்

அந்த நேரத்தில் மதுராவின் மன்னராக இருந்த வஜ்ரநாப மகாராஜா, புனித குண்டங்களைத் தோண்டி, ராதா குண்டம் மற்றும் ஷ்யாம குண்டம் இரண்டையும் சுற்றி கல் சுவர்களை எழுப்பினார். துரதிர்ஷ்டவசமாக, அடுத்த ஐம்பது நூற்றாண்டுகளில் இந்தியாவில் தொடர்ந்து மாறிவரும் சமூக-அரசியல் சூழல் காரணமாகவும், நீண்ட காலம் ஆகி விட்டதாலும், இந்த இரண்டு புனித குண்டங்களும் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு, இறுதியில் முற்றிலும் மறைந்துவிட்டன.

16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், அவதரித்த, ‘ கௌர அவதாரமான’ ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, தனது உதவியாளர் பாலபத்ர பட்டாச்சாரியாவுடன், 1515-ஆம் ஆண்டில் விருந்தாவனத்தின் பன்னிரெண்டு புனித வனங்களைச் சுற்றி தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பரிக்ரமத்தின்போது, பல முக்கியமான இடங்களை மீண்டும் கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடித்தவற்றில் மிக முக்கியமானவை, ராதா குண்டம் மற்றும் ஷ்யாம குண்டம் என்ற புனித குளங்களாகும். இவை ஸ்ரீமதி ராதா ராணியின் மிக ரகசியமான நீராடும் இடங்களாகும்.

இந்தக் குளங்களின் புனிதத்தன்மையை உணர்ந்த ஸ்ரீ சைதன்ய மகாபிரபு,பின்னர் தமது மூத்த சீடர்களான ஆறு கோஸ்வாமிகளை, ராதா-குண்டத்தையும், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வ்ரஜ மண்டலத்தில் நிகழ்ந்த ஸ்ரீ கிருஷ்ணரின் ஆழ்நிலை லீலைகளுடன் தொடர்புடைய அனைத்து புனித இடங்களையும் புதுப்பிக்கும்படி கட்டளையிட்டார்.

மேற்கூறிய அறிவுறுத்தல்களின் அடிப்படையில், ஸ்ரீல ரகுநாத தாச கோஸ்வாமி ராதா குண்டத்தில் தங்கினார். அந்த நேரத்தில், ராதா குண்டமும் ஷ்யாம குண்டமும் 12 அடிக்கு 12 அடி அளவில் மட்டுமே இருந்தன.

சம்பண்ணா என்ற ஒரு பணக்காரர், பகவான் நாராயணருக்கு ஒரு பெரிய நன்கொடை அளிக்க பத்ரிநாத்துக்குச் சென்றார். ஸ்ரீ கிருஷ்ணர் அவர் கனவில் தோன்றி, அவரை ராதா குண்டத்திற்குச் சென்று, குண்டங்களைப் புதுப்பிக்க ஸ்ரீல ரகுநாத தாச கோஸ்வாமியிடம் பணத்தை அளிக்குமாறு கூறினார். சம்பண்ணா அக்கட்டளையை நிறைவேற்றினார்.

ஸ்ரீல ரகுநாத தாச கோஸ்வாமி மற்றும் ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி ஆகியோர் 1554 ஆம் ஆண்டு குண்டங்களின் விரிவாக்கத்தை மேற்பார்வையிட்டனர்.

நோக்கம் 7: பஹுலாஷ்டமி விழாவையும், அதனுடன் தொடர்புடைய ஆன்மீகச் சடங்குகளையும் புரிந்து கொள்ளல்.

பஹுலாஷ்டமி – ராதா குண்டம் மற்றும் ஷ்யாம குண்டம் தோன்றிய நாள்

ராதா குண்டம் தோன்றிய நாள் பஹுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. இது கார்த்திகை மாதத்தில் (அக்டோபர்-நவம்பர்) தேய்பிறை – கிருஷ்ண-பக்ஷ எட்டாவது நாளில் – அஷ்டமி திதி அன்று அனுசரிக்கப்படுகிறது. ராதா குண்டம் நள்ளிரவில் வெளிப்பட்டதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள், அந்த புனித இரவில், சரியாக நள்ளிரவில் தங்கள் நீராட்ட சடங்கைச் செய்யக் குழுமுகிறார்கள். இது அர்த்த-ராத்ரி- ஸ்நானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நள்ளிரவு நீராடல் தனித்துவமானது மற்றும் முழு உலகிலும் மிகவும் ஆன்மீக ரீதியாக சக்திவாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

நோக்கம் 8 : ராதா குண்டம் மற்றும் ஷ்யாம குண்டத்தில் பின்பற்றப்படும் ஆன்மீக நடைமுறைகள் மற்றும் முறையான ஆச்சாரங்களைப் புரிந்து கொள்ளல்.

ஆன்மீக நடைமுறைகள் மற்றும் முறையான ஆச்சாரங்கள்

பக்தர்கள் வெறுங்காலுடன், ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜெபித்தபடி, இரண்டு குண்டங்களையும் பரிக்ரமம் செய்கிறார்கள்.

குண்டத்தில் நீராடுவது ஆத்மாவைத் தூய்மைப்படுத்துகிறது மற்றும் பிரேம பக்தி (தூய்மையான, தன்னலமற்ற அன்பு ) அனுபவத்தை அளிக்கிறது. ராதா-குண்டம், ஸ்ரீமதி ராதாராணியின் திரவ வடிவமாகக் கருதப்படுகிறது. எனவே, வைணவ சாஸ்திரங்களின், முறையான ஆச்சாரத்தை ஒருவர் கடைப்பிடிக்க வேண்டும்.

மிகுந்த பயபக்தியுடன் குளிப்பது – முதலில் வலது கையால் தண்ணீரைத் தொட்டு, பின்னர் ஸ்ரீல ரகுநாத தாச கோஸ்வாமியைப் போல் பணிவோடு, நீரில் இறங்க வேண்டும்.

சிலர் குண்டங்களில் பாதம் படாமல், முழங்காலில் ஊர்ந்து செல்கிறார்கள். மேலும் சிலர் அபராதத்தை தவிர்க்க உள்ளே நுழையாமல் தங்கள் தலையில் தண்ணீரை ப்ரோக்ஷணம் செய்து கொள்கிறார்கள்.

நோக்கம் 9: ராதா குண்டம் மற்றும் ஷ்யாம குண்டம் ஆகியவற்றின் மகிமைகளைப் பற்றி புராண இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவை, மகான்கள் மற்றும் ஆச்சாரியர்கள் கூறியுள்ள விளக்கங்களை வெளிப்படுத்துதல்.

ராதா மற்றும் ஷ்யாம குண்டங்களின் மகிமைகள்

ஸ்ரீசைதன்ய மஹாபிரபு, ஸ்ரீல ரூபகோஸ்வாமி மற்றும் ஸ்ரீல ரகுநாத தாச கோஸ்வாமி உட்பட பல துறவிகள் மற்றும் ஆன்மீக ஆச்சாரியர்கள் ராதா குண்டத்தைத் தரிசனம் செய்து மகிமைப்படுத்தியுள்ளனர். உண்மையில், ஸ்ரீல ரகுநாத தாச கோஸ்வாமி தனது இறுதி காலத்தை, இந்தப் புனித குண்டத்தின் கரையில் தீவிர பஜனையில் கழித்தார்.

1. ஸ்ரீல ரகுநாத தாசகோஸ்வாமியின் போதனைகள்

“ராதா குண்டத்தில் ஒரு முறை குளிப்பதன் மூலம் ஒருவர் உடனடியாக கிருஷ்ணப் பிரேமையை அடைய முடியும்.”

“ராதா குண்டம் என்பது ஸ்ரீமதி ராதாராணியின் மகிழ்ச்சியான லீலைகளின் இடம். அங்கு நீராடும் அனைவரும் பகவான் மீதான பிரேம பக்தியை அடைய முடியும்.”

2. ஸ்ரீல கிருஷ்ணாதாச கவிராஜ கோஸ்வாமியின் போதனைகள்

பகவான் சைதன்யரின் வாழ்க்கை வரலாறான சைதன்ய சரிதாம்ருதத்திலிருந்து:

“ராதா குண்டத்தில் ஒரு முறை குளித்தால் கூட, ஸ்ரீமதி ராதாராணியின் பிரேமையை ஒத்த அன்பை ஸ்ரீ கிருஷ்ணர் மீது பெறுவர்.”

3. ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகள்

உபதேசாம்ருதம் (ஸ்லோகம் 11) என்ற நூலில் ஸ்ரீல பிரபுபாதர் எழுதுகிறார்:

“ராதா குண்டத்தில் ஒரு முறை குளிப்பதன் மூலம், ஒரு பக்தர் உடனடியாக கோபியர்களின் அன்பான மனநிலையில், ஸ்ரீ கிருஷ்ணர் மீது தூய அன்பை வளர்த்துக் கொள்வார்.”

4. ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தி தாகூரின் போதனைகள்

“ராதா குண்டமும் ஷ்யாம குண்டமும் ஸ்ரீமதி ராதாராணி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக அன்பின் நேரடி வடிவங்கள். இந்த குளங்களில் குளிப்பதென்பது அவர்களின் அன்பில் குளிப்பதைப் போன்றது. இங்கு குளிப்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.”

5. பத்ம புராணத்திலிருந்து

“கார்த்திகை மாதம் (அக்டோபர்-நவம்பர்) பஹுலாஷ்டமி நாளில் ராதா குண்டத்தில் குளித்தால், அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர்களாக மாறுவார்கள்.”

ராதா குண்டமும் ஷ்யாம குண்டமும் வெறும் புவியியல் சார்ந்த இடங்கள் மட்டுமல்ல; அவை ஆன்மீக நுழைவாயில்கள். ஸ்ரீமதி ராதாராணி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆழ்நிலை அன்பின்(தன்னலமற்ற, தெய்வீக மற்றும் நித்தியமான காதல்) தனித்துவமான பார்வையை அவை வழங்குகின்றன.

ஆன்மீக பாதையில் இருப்பவர்களுக்கு, இந்த குண்டங்களைப் பார்வையிடுவது வெறும் ஒரு யாத்திரை மட்டுமல்ல; அது பக்தியின் இதயத்திற்குள் ஒரு ஆழமான பயணமாகும்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare