அத்தியாயம் – 7
கர்பத்தில் பிரகலாதர் கற்றது
பதம் 7.7.1 : நாரத முனிவர் கூறினார்: பிரகலாத மகாராஜன் அசுர குடும்பத்தில் பிறந்தவராக இருந்தும், மிகச் சிறந்த ஒரு பக்தராக விளங்கினார். தமது பள்ளித் தோழர்களாகிய அசுர புத்திரர்களால் இவ்வாறு கேள்வி கேட்கப்பட்ட அவர், என்னால் பேசப்பட்ட வார்த்தைகளை நினைத்து, பின்வருமாறு அவர்களிடம் கூறலானார்.

பதம் 7.7.2 : பிரகலாத மகாராஜன் கூறினார்: எனது தந்தையான இரண்யகசிபு கடுந்தவங்களைப் புரிய மந்தராச்சல மலைக்குச் சென்ற பொழுது, அவரில்லாத அச்சமயத்தில் இந்திரன் முதலான தேவர்கள் எல்லா அசுரர்களையும் போரில் வென்றுவிட கடும் முயற்சியை மேற்கொண்டனர்.

பதம் 7.7.3 : அந்தோ, எப்படி ஒரு பாம்பு சிற்றெறும்புகளுக்கு இரையாகிறதோ, அப்படியே எல்லா விதமான மக்களையும் எப்பொழுதும் கொடுமைப்படுத்தி தொல்லைகளைக் கொடுத்து வந்த இரண்யகசிபு இப்பொழுது தன் சொந்த பாவ விளைவுகளினால் தோற்கடிக்கப்பட்டான்” என்று கூறிய இந்திரன் முதலான தேவர்கள், அசுரர்களுடன் யுத்தம் செய்ய ஆயத்தம் ஆனார்கள்.

பதங்கள் 7.7.4 – 7.7.5 : அசுரர்களின் பெருந் தலைவர்கள் ஒருவர்பின் ஒருவராக கொல்லப்பட்டு, தேவர்கள் என்றுமில்லாத பெருமுயற்சியை போரில் காட்டுவதைக் கண்ட அசுரர்கள் எல்லாத் திசைகளிலும் சிதறியோட ஆரம்பித்தனர். தங்களுடைய உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அசுரர்கள் தங்கள் வீடுகள், மனைவிகள், குழந்தைகள், மிருகங்கள், வீட்டுக்குரிய பொருட்கள் அனைத்தையும் விட்டுவிட்டு, இவை எதையுமே கவனிக்காமல், தப்பினால் போதுமென்று ஓட்டம் பிடித்தனர்.

பதம் 7.7.6 : வெற்றி பெற்ற தேவர்கள், அசுர வேந்தனான இரண்யகசிபுவின் அரண்மனையைச் சூரையாடி, அதிலிருந்த அனைத்தையும் அழித்தனர். பிறகு சுவர்க்க ராஜனான இந்திரன், அரசியான என் தாயைச் சிறைப்பிடித்தார்.

பதம் 7.7.7 : அவன் அவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட பொழுது, பயத்தினால் அவள், கழுகிடம் சிக்கிய ஒரு குரரிப் பறவைபோல் கதறினாள். அப்பொழுது எதிர்பாராமல் அங்கு வர நேர்ந்த சிறந்த முனிவரான நாரதர் அவளுடைய அந்த நிலையைக் கண்டார்.

பதம் 7.7.8 : நாரதமுனி கூறினார்: தேவராஜனே, இந்திரா, இவள் குற்றமற்றவள் இவளை இரக்கமின்றி இவ்வாறு நீ கவர்ந்து செல்வது தகுதியன்று, பெருமை படைத்தவனே, பதிவிரதையான இவள் வேறொருவனின் மனைவியாவாள். உடனே இவளை நீ விட்டுவிட வேண்டும்.

பதம் 7.7.9 : இந்திரன் கூறினார்: இரண்யகசிபுவின் மனைவியான இவளுடைய கர்பத்தில் அப்பெரும் அசுரனின் வீரியம் இருக்கிறது. ஆகவே இவள் பிரசவிக்கும் வரை என் பாதுகாப்பிலேயே இருக்கட்டும். அதன்பிறகு இவளை நாங்கள் விட்டு விடுகிறோம்.

பதம் 7.7.10 : நாரத முனி பதிலளித்தார்: இப்பெண்ணின் கருவில் வளரும் குழந்தை குற்றமோ, பாவமோ இல்லாதது. உண்மையில், இவன் ஒரு பரம பக்தனும், பரமபுருஷரின் சக்திமிக்க சேவகனுமாவான். ஆகவே இவனை உன்னால் கொல்ல முடியாது.

பதம் 7.7.11 : சிறந்த முனீவரான நாரதர் இவ்வாறு கூறியதும், இந்திரன் நாரதரின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து உடனே என் தாயை விட்டுவிட்டார். நான் பகவானுடைய பக்தன் என்ற காரணத்தினால், எல்லா தேவர்களும் அவளை வலம் வந்தபின் அவர்களுடைய சுவர்க்க லோகங்களுக்கு திரும்பிச் சென்றனர்.

பதம் 7.7.12 : பிரகலாத மகாராஜன் தொடர்ந்து கூறினார்: பிறகு சிறந்த முனிவரான நாரதர் என் தாயாரைத் தமது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று, அவளுக்குத் தேறுதல் அளித்து, “குழந்தாய், உன் கணவன் வரும்வரை நீ இங்கேயே இருக்கலாம்” என்று கூறினார்.

பதம் 7.7.13 : தேவரிஷி நாரதரின் உபதேசங்களை ஏற்றுக் கொண்ட என் தாய், தைத்ய ராஜனான என் தந்தை தனது கடுந்தவங்களை முடித்துக் கொண்டு திரும்பி வரும்வரையில், எந்த திசையிலிருந்து வரும் பயத்திற்கும் அஞ்சாமல் அவரது பாதுகாப்பிலேயே தங்கியிருந்தாள்.

பதம் 7.7.14 : கருவுற்றிருந்த என் தாய், கருவிலுள்ள சிசுவின் பாதுகாப்பை விரும்பியதுடன், தன் கணவன் வந்த பிறகு பிரசவிக்கவேண்டும் என்றும் விரும்பினாள். இவ்வாறாக அவள் நாரத முனிவரின் ஆசிரமத்தில் தங்கி, அவருக்கு மிகுந்த பக்தியுடன் பணிவிடை செய்து வந்தாள்.

பதம் 7.7.15 : நாரத முனிவர் கர்பத்திலிருந்த எனக்கும், அவருக்குப் பணிவிடை செய்வதில் ஈடுபட்டிருந்த என் தாய்க்கும் உபதேசம் செய்தார். உன்னத நிலையிலுள்ள அவர் வீழ்ந்த ஆத்மாக்களிடம் இயல்பாவே மிகவும் கருணையுடையவர் என்பதால், அவர் சமயத்தைப் பற்றியும், உன்னத அறிவைப் பற்றியும் உபதேசம் செய்தார். அவ்வுபதேசங்கள் எல்லா பௌதிக களங்கத்திலிருந்து விடுப்பட்டவையாகும்.

பதம் 7.7.16 : நீண்ட காலம் கடந்து விட்ட காரணத்தாலும், என் தாய் பெண் என்ற முறையில் குறைந்த அறிவுடையவள் என்பதாலும், அவ்வுபதேசங்களை எல்லாம் மறந்து போனாள். ஆனால் மாமுனிவரான நாரதர் என்னை ஆசிர்வதித்ததால் அவற்றை என்னால் மறக்க இயலவில்லை.

பதம் 7.7.17 : பிரகலாத மகாராஜன் தொடர்ந்து கூறினார்: அன்புத் தோழர்களே, என் வார்த்தைகளில் நீங்கள் நம்பிக்கை வைப்பீர்களானால், சிறுவர்களாகிய உங்களாலும் என்னைப் போல் உன்னத அறிவைப் புரிந்து கொண்டு, ஜடம் என்றால் என்ன, ஆன்மீகம் என்றால் என்ன என்பதை அறிய முடியும்.

பதம் 7.7.18 : ஒரு மரத்திலுள்ள பழங்களும், மலர்களும் காலப்போக்கில் தோற்றம், இருப்பு, வளர்ச்சி, உருமாற்றம், நலிவு மற்றும் அழிவு ஆகிய ஆறுவித மாற்றங்களுக்கு உட்படுகின்றன. அதுபோலவே வெவ்வேறு சூழ்நிலைகளின் கீழ் ஜீவாத்மாவினால் அடையப்படும் பௌதிக உடலும் அதே போன்ற மாற்றங்களுக்கு உட்படுகிறது. ஆனால் ஜீவாத்மாவிற்கு இத்தகைய மாற்றங்கள் இல்லை.

பதங்கள் 7.7.19 – 7.7.20 : “ஆத்மா” என்பது பரமபுருஷரை அல்லது ஜீவராசிகளைக் குறிப்பிடுகிறது. அவ்விரண்டுமே பிறப்பு, இறப்பிலிருந்தும், அழிவிலிருந்தும், பெளதிக களங்கத்திலிருந்தும் விடுப்பட்டவையும், ஆன்மீகமானவையும் ஆகும். அவை தனித்தன்மை உடையவையும், புற உடலை அறிந்தவையும், அனைத்திற்கும் ஆதாரமும் அல்லது புகலிடமும் ஆகும். அவை பெளதிக மாற்றத்திற்கு உட்படாதவை, சுயப்பிரகாசம் உடையவை, எல்லாக் காரணங்களுக்கும் காரணமானவை, எங்கும் நிறைந்திருப்பவை. அவற்றிற்கு ஜட உடலுடன் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே அவை எப்பொழுதும் மூடப்படாமல் இருக்கின்றன. இந்த தெய்வீக குணங்களைப் பெற்றுள்ள ஒருவன் உண்மையில் கற்றறிந்தவனாக இருப்பானாயின், “நான் இந்த ஜட உடல், இந்த உடலுடன் சம்பந்தப்பட்டுள்ள அனைத்தும் என்னுடையவை” என்று மாயையான தேகாபிமானத்தை அவன் விட்டுவிட வேண்டும்.

பதம் 7.7.21 : திறமையுள்ள ஒரு பூகோள சாஸ்திரியால் தங்கம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, வெவ்வேறு முறைகளினால் தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை எடுக்க முடிகிறது. அதுபோலவே, எப்படி உடலுக்குள் ஆன்மீக பொறி இருக்கிறது என்பதை ஆன்மீகத்தில் முன்னேறிய ஒருவனால் அறிய முடிகிறது. இவ்வாறாக ஆத்ம ஞானத்தை விருத்தி செய்வதன் மூலம் ஆன்மீக வாழ்வின் பூரணத்துவத்தை அவனால் அடைய முடிகிறது. ஆனால் எப்படி திறமையற்ற ஒருவனால் தங்கம் இருக்கும் இடத்தை அறிய முடியாதோ, அப்படியே ஆத்ம ஞானத்தை வளர்த்துக் கொள்ளாத ஒரு மூடனால், எப்படி ஆன்மீக ஆத்மாவானது உடலுக்குள் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாது.

பதம் 7.7.22 : பகவானுடைய எட்டு பௌதிக சக்திகள், ஜட இயற்கையின் முக்குணங்கள், பதினாறு மாற்றங்கள் (பதினொரு புலன்கள் மற்றும் மண், நீர் போன்ற பஞ்ச பூதங்கள்) ஆகிய இவை அனைத்திற்குள்ளும் ஒரே ஆத்மா சாட்சியாக விளங்குகிறான். எனவேதான் தனிப்பட்ட ஆத்மா இந்த பௌதிக மூலப்பொருட்களினால் பந்தப்படுத்தப்படுகிறான் என்று சிறந்த ஆச்சாரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

பதம் 7.7.23 : ஒவ்வொரு தனிப்பட்ட ஆத்மாவிற்கும் இருவகையான உடல்கள் உள்ளன. ஒன்று, பஞ்ச பூதங்களாலான ஸ்தூல உடல், மற்றது மூன்று சூட்சும மூலப் பொருட்களாலான சூட்சும உடல், இவ்வுடல்களுக்குள் ஆன்மீக ஆத்மா இருக்கிறது. “இது இல்லை, இது இல்லை” என்ற ஆய்வின் மூலம் ஒருவன் ஆத்மாவைக் கண்டறிய வேண்டும். இவ்விதமாக ஒருவன் ஆன்மிகத்தை ஜடத்திலிருந்து பிரித்தறிய வேண்டும்.

பதம் 7.7.24 : படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றுடன் ஆத்மாவிற்கு உள்ள சம்பந்தத்தையும், படைத்தல், காத்தல், அழித்தலுக்கு உட்பட்டுள்ள அனைத்திலிருந்தும் ஆத்மா எப்படி வேறுபட்டுள்ளது என்பதையும் ஆராய்ந்து அறிவதன் மூலமாகத் தூய்மையடைந்த மனங்களுடன், நிபுணர்களும், நிதான புத்தியுள்ளவர்களுமான மனிதர்கள் ஆன்மீக ஆத்மாவைத் தேட வேண்டும்.

பதம் 7.7.25 : விழிப்பு நிலை, கனவு நிலை, ஆழ்ந்த உறக்க நிலை ஆகிய மூன்று நிலைகளில் புத்தியானது உணரப்படுகிறது. இம்மூன்றையும் உணர்பவர் ஆதிபுருஷரென்றும், ஆண்டவனென்றும், பரமபுருஷரென்றும் கருதப்பட வேண்டும்.

பதம் 7.7.26 : காற்றினால் சுமந்து செல்லப்படும் வாசனைகளின் மூலமாக காற்றின் இருப்பை ஒருவனால் புரிந்து கொள்ள முடியும். அதுபோலவே, பரம புருஷருடைய வழிகாட்டலின் கீழ், புத்தியின் இந்த மூன்று பிரிவுகளின் மூலம் ஒருவனால் ஜீவாத்மாவைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இம்மூன்று பிரிவுகளே ஆத்மா அல்ல; அவை முக்குணங்களால் ஆனவையும், செயல்களிலிருந்து பிறந்தவையுமாகும்.

பதம் 7.7.27 : மாசுடைய புத்தியின் மூலமாக ஒருவன் பௌதிக குணங்களுக்கு அடிமைப்பட்டவனாகி பௌதிக வாழ்வினால் அவன் பந்தப்படுத்தப்படுகிறான். ஒருவன் பொய்யாகத் துன்புறும் கனவு நிலையைப் போல், அறியாமையால் விளைந்த பௌதிக வாழ்வைத் தேவையற்றதாகவும், நிலையற்றதாகவும் கருத வேண்டும்.

பதம் 7.7.28 : ஆகவே என் அன்புத் தோழர்களே, அசுர குமாரர்களே, கிருஷ்ண உணர்வை ஏற்றுக் கொள்வதே உங்களுடைய கடமையாகும். ஜட இயற்கைக் குணங்களால் செயற்கையாக உண்டாக்கப்பட்ட கருமங்களின் விதையை கிருஷ்ண உணர்வினால் எரித்து விட முடியும். மேலும் அதனால் விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் ஆகிய நிலைகளிலுள்ள அறிவின் ஓட்டத்தையும் தடுத்துவிட முடியும். அதாவது, கிருஷ்ண உணர்வை ஏற்றுக் கொள்ளும் பொழுது, ஒருவனது அறியாமை உடனே மறைந்து விடுகிறது.

பதம் 7.7.29 : பௌதிக வாழ்விலிருந்து விடுபடுவதற்குச் சிபாரிசு செய்யப்பட்டுள்ள வெவ்வேறு முறைகளில், பரமபுருஷரால் நேரடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விவரிக்கப்பட்ட முறை மிகச் சிறந்ததாக கருதப்பட வேண்டும். கடமைகளை சரிவரச் செய்வதே அந்த முறையாகும். அதனால் பரமபுருஷரிடம் உள்ள அன்பு விருத்தியடைகிறது,

பதங்கள் 7.7.30 – 7.7.31 : ஒருவன் உண்மையான ஆன்மீக குருவை ஏற்றுக் கொண்டு மிகுந்த பக்தியுடனும், நம்பிக்கையுடனும் அவருக்குத் தொண்டு புரிய வேண்டும். தன்னிடமுள்ள உடைமைகள் அனைத்தையும் ஆன்மீக குருவிற்கு அர்பணித்து விட வேண்டும். பிறகு பக்தர்கள் மற்றும் சாதுக்களின் சகவாசத்தில் ஒருவன் சிரத்தையுடன் பகவானின் மகிமைகளைக் கேட்கும், அவரது உன்னத குணங்களையும், செயல்களையும் துதித்துப் போற்றியும், எப்பொழுதும் பகவானின் தாமரைப் பாதங்களை தியானித்தும் அவரைப் பூஜிக்க வேண்டும். மேலும் சாஸ்திரம் மற்றும் குருவின் கட்டளைகளுக்கேற்ப, பகவானின் விக்கிரத்தையும் ஒருவன் வழிபட வேண்டும்.

பதம் 7.7.32 : ஒருவன் பரமபுருஷரை, ஒவ்வொருவருடைய இதயத்திலும் குடியிருக்கும் பரமாத்மாவாக எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறாக ஒவ்வொரு ஜீவராசியின் நிலைக்கும் அல்லது தோற்றத்திற்கும் ஏற்ப, ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒருவன் மரியாதை செலுத்த வேண்டும்.

பதம் 7.7.33 : (மேலே குறிப்பிட்டது போல்) இச்செயல்களின் மூலம், காமம், கோபம், பேராசை, மாயை, வெறி, பொறாமை முதலான எதிரிகளின் ஆதிக்கத்தை வேரறுத்த நிலையில் பகவானுக்கு ஒருவனால் சேவை செய்ய முடியும். இவ்விதமாக பரமபுருஷருக்குச் செய்யும் அன்புத் தொண்டடெனும் படித்தரத்தை நிச்சயமாக ஒருவன் அடைகிறான்.

பதம் 7.7.34 : பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ள ஒருவன் நிச்சயமாக தன் புலன்களை அடக்கியவனாகி, முக்தி பெற்றவனாகிறான். இத்தகைய முக்தி பெற்ற தூய பக்தரொருவர், பகவானுடைய உன்னதமான அவதார லீலைகளை பற்ற கேட்கும்பொழுது, மெய்சிலிர்த்து, கண்களில் நீர் பெருக, ஆத்மானு பூதியினால் சிலசமயம் வெளிப்படையாக ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும் அழுகிறார். இவ்விதமாக உன்னதமான ஆனந்தப் பரவச நிலையை அவர் வெளிப்படுத்துகின்றார்.

பதம் 7.7.35 : ஒரு பக்தன் பேய் பிடித்ததுபோல் ஆகும்பொழுது, பகவான் குணங்களைப் பற்றி உரக்க பாடிக்கொண்டு சிரிக்கிறான். சிலசமயம், தியானம் செய்ய அமர்கிறான். அப்பொழுது ஒவ்வொரு ஜீவராசியையும் பகவானின் ஒரு பக்தனாகக் கருதி, ஒவ்வொரு ஜீவராசிக்கும் மரியாதை செலுத்துகிறான். இவ்வாறாக அவன் எப்பொழுதும் பெருமூச்சு விட்டபடி, சமூக மரியாதையைப் பொருட்படுத்தால் ஒரு பித்தனைப் போல், “ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண என்றும், ‘ எம்பெருமானே’ என்றும், “லோக நாயகரே என்றும் உரக்கப் பாடுகிறான்.

பதம் 7.7.36 : அந்த பக்தன் பகவானுடைய லீலைகளைப் பற்றியே சதா நினைத்துக் கொண்டிருப்பதாலும், அவனுடைய மனமும் உடலும் ஆன்மீகமாக மாற்றப்பட்டதாலும், அவன் எல்லா பௌதிக மாசுகளிலிருந்தும் விடுபட்டவனாகிறான். அவனுடைய ஆழ்ந்த பக்தித் தொண்டின் காரணத்தால், அவனது அறியாமையும், பௌதிக உணர்வும், எல்லா வகையான பௌதிக ஆசைகளும் பூரணமாக எரிந்து சாம்பலாகி விடுகின்றன. இந்த நிலையில்தான் பகவானுடைய தாமரைப் பாதங்களின் புகலிடத்தை ஒருவனால் அடைய முடிகிறது.

பதம் 7.7.37 : பிறப்பு, இறப்பின் தொடர்ச்சியே வாழ்வின் உண்மையான பிரச்சினை. அது, மேலும் கீழும் தொடர்ந்து உருளும் ஒரு சக்கரத்தைப் போன்றதாகும். ஆனால் பரமபுருஷருடன் ஒருவன் தொடர்பு கொள்ளும்பொழுது, இச்சக்கரம் முற்றிலும் நின்றுவிடுகிறது. அதாவது, பக்தித் தொண்டில் தொடர்ந்து ஈடுபடுவதால் உணரப்படும் உன்னத ஆனந்தத்தினால், ஒருவன் பௌதிக வாழ்விலிருந்து முற்றிலும் விடுபடுகிறான். கற்றோர் இதை அறிவர். ஆகவே எனதருமைத் தோழர்களே, அசுர குமாரர்களே, எல்வோருடைய இதயங்களிலும் இருக்கும் பரமாத்மாவை தியானிப்பதையும், வழிபடுவதையும் உடனே துவங்குங்கள்.

பதம் 7.7.38 : நண்பர்களே, அகரகுமாரர்களே, பரமபுருஷர் அவரது பரமாத்மா அம்சத்தில் அனைத்து ஜீவராசிகளின் இதயங்களிலும் எப்பொழுதும் வாசம் செய்கிறார். உண்மையில், அவர் அனைத்து ஜீவன்களுக்கும் நண்பரும், அவர்களது நலம் விரும்பியுமாவார். மேலும் பகவானை வழிபடுவதில் எந்த சிரமமும் இல்லை. அப்படியானால் மக்கள் ஏன் அவரது பக்தித் தொண்டில் ஈடுபடாமல் இருக்கிறார்கள்? அவர்கள் ஏன் புலன் நுகர்விற்குரிய செயற்கையான பொருள்களைத் தேவையின்றி உற்பத்தி செய்வதில் அதிக விருப்பம் கொண்டுள்ளனர்?

பதம் 7.7.39 : ஒருவனுடைய செல்வம், அழகிய மனைவி, பெண் நண்பர்கள், மகன்கள், புதல்விகள், வீடு, வீட்டு மிருகங்களான பசுக்கள், யானைகள், குதிரைகள் போன்றவை, பொக்கிஷம், பொருளாதார முன்னேற்றம், புலன் நுகர்வு ஆகியவையும், இந்த பௌதிக ஐசுவரியங்களை எல்லாம் அனுபவிக்கக் கூடிய ஒருவனது வாழ்நாளும் கூட நிச்சயமாக தற்காலிகமானதும், நிலையற்றதுமாகும். மனித வாழ்வு நிலையற்றது என்பதால், தான் நித்தியமானவன் என்பதைப் புரிந்து கொண்ட புத்தியுள்ள மனிதனுக்கு, இந்த பௌதிக ஐசுவரிங்களால் என்ன நன்மையை அளிக்க முடியும்?

பதம் 7.7.40 : சிறந்த வேள்விகளைச் செய்யும் ஒருவனால் தன்னை சுவர்க்க லோகங்களுக்கு உயர்த்திக் கொள்ளமுடியும் என்பது வேத இலக்கியத்திலிருந்து அறியப்படுகிறது. ஆனால் சுவர்க்கலோக வாழ்வானது மண்ணுலக வாழ்வை விட ஆயிரக்கணக்கான மடங்கு அதிக வசதியுடையது என்றாலும், சுவர்க்கலோகங்கள் புனிதமானவையல்ல (நிர்மலம்), அல்லது பௌதிக வாழ்வின் வாசனையிலிருந்து விடுபட்டவையல்ல. சுவர்க்கலோகங்களும் தற்காலிகமானவையே என்பதால் அவை வாழ்வின் இலட்சியமல்ல, ஆனால் பரமபுருஷரை மாசுடையவராகக் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. இதனால் வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ளது போல், உங்களுடைய சொந்த நன்மைக்காகவும், தன்னுணர்வுக்காகவும் நீங்கள் மிகுந்த பக்தியுடன் பகவானை வழிபட வேண்டும்.

பதம் 7.7.41 : தன்னைச் சிறந்த அறிவாளியென்று நினைத்துக் கொண்டிருக்கும் பௌதிகவாதி, தன் பொருளதார முன்னேற்றத்திற்காகவே தொடர்ந்து செயற்படுகிறான். ஆனால் வேதங்களில் கூறப்பட்டுள்ள போல், இப்பிறவியிலும், அடுத்ததிலும் மீண்டும் மீண்டும் பௌதிக செயல்களினால் அவன் ஏமாற்றமடைகிறான். உண்மையில், தன் விருப்பத்திற்கெதிரான பலன்களையே அவன் அடைகிறான்.

பதம் 7.7.42 : இந்த ஜட உலகிலுள்ள ஒவ்வொரு பௌதிவாதியும் மகிழ்ச்சியடையவும், தன் துன்பத்தைக் குறைத்துக் கொள்ளவும் விரும்பி அதற்கேற்ப செயற்படுகிறான். உண்மையில், மகிழ்ச்சியடைய முயற்சி செய்யாதவரை ஒருவன் மகிழ்ச்சியுடன் இருக்கிறான். ஆனால் அந்த முயற்சியைத் துவங்கியவுடனேயே, அவனது துன்பச் சூழ்நிலை துவங்குகிறது.

பதம் 7.7.43 : ஒரு ஜீவராசி தன் உடலின் சௌகரியத்தை விரும்பிப் பல திட்டங்களைத் தீட்டுகிறான். ஆனால் உண்மையில் உடலானது பிறருடைய சொத்தாகும். அழியக்கூடிய உடலானது ஜீவராசியைத் தழுவிக் கொண்டு, பிறகு அவனை உதாசீனப்படுத்தி விடுகிறது என்பதுவே உண்மை.

பதம் 7.7.44 : உடல் இறுதியில் மலமாக அல்லது மண்ணாக மாறப்போகிறது என்பதால், அந்த உடலுடன் சம்பந்தப்பட்டுள்ள மனைவி, மக்கள், வசிப்பிடம், செல்வம், உறவினர்கள், சேவகர்கள், நண்பர்கள், இராஜ்யங்கள், பொக்கிஷங்கள், மிருகங்கள், மந்திரிகள் போன்றவைகளில் என்ன அர்த்தம் உள்ளது? இவையும் தற்காலிகமானவையே. இதைப்பற்றி மேலும் கூறுவதற்கு என்ன உள்ளது?

பதம் 7.7.45 : உடல் இருக்கும்வரை இப்பொருட்களெல்லாம் மிகவும் பிரியமாகவும், நெருக்கமாகவும் இருக்கின்றன. ஆனால் உடல் அழிக்கப்பட்டவுடனேயே, உடலோடு சம்பந்தப்பட்ட அனைத்தும் முடிந்து விடுகின்றன. ஆகவே உண்மையில், அவற்றுடன் ஒருவனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அறியாமையால் தான் அவற்றை மதிப்புடையவையாக ஒருவன் ஏற்றுக் கொள்கிறான். நித்திய ஆனந்தம் என்ற கடலுடன் ஒப்பிடும்பொழுது, அவை மிகவும் அற்பமானவையாகும். நித்திய ஜீவனுக்கு இத்தகைய அற்பமான உறவுகளால் என்ன பயன்?

பதம் 7.7.46 : அன்புத் தோழர்களே, அசுர குமாரர்களே, ஜீவராசியானவன் தனது முந்திய கருமங்களுக்கேற்ப வெவ்வேறு வகையான உடல்களைப் பெறுகிறான். இவ்விதமாக அவன் கருவில் புகுத்தப்பட்டது முதற்கொண்டு, வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் துன்பத்தையே அனுபவிப்பதை நாம் காண்கிறோம். ஆகவே கடின உழைப்பிலும், துன்பத்திலும் முடிவுறும் கருமங்களால் ஜீவராசிக்குக் கிடைக்கும் உண்மையான நன்மையென்ன என்பதை நன்கு ஆலோசித்தபின் எனக்குக் கூறுங்கள்.

பதம் 7.7.47 : முந்திய கருமங்களின் பலனாக தற்போதைய உடலைப் பெற்றுள்ள ஜீவராசியால், இப்பிறவியிலேயே தன் செயல்களின் விளைவுகளையெல்லாம் முடித்துக் கொள்ள முடியும். இதனால் பௌதிக உடல்களின் பந்தத்திலிருந்த அவன் விடுபட்டு விடுவான் என்பது இதன் பொருளல்ல. ஜீவராசியானவன் ஒருவகையான உடலைப் பெறுகிறான். அவ்வுடலைக் கொண்டு செயலாற்றுவதன் மூலம் மற்றொரு உடலை அவன் உற்பத்தி செய்கிறான். இவ்வாறாக அறியாமையின் காரணத்தால், தொடர்ந்து பிறவிச் சக்கரத்தின் மூலமாக, அவன் ஒருடலிலிருந்து மற்றொரு உடலுக்காக மாறிக் கொண்டே போகிறான்.

பதம் 7.7.48 : ஆன்மீக வாழ்வின் முன்னேற்றக் கொள்கையான தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகிய நான்கும் பரமபுருஷரின் விருப்பத்தையே சார்ந்துள்ளன. ஆகவே, அன்புத் தோழர்களே, பக்தர்களின் அடிச் சுவடுகளைப் பின்பற்றுங்கள். ஆசையின்றி பரமபுருஷரின் ஏற்பாட்டையே முழுமையாக நம்பி, பக்தித் தொண்டினால் பரமாத்மாவாகிய அவரை வழிபடுங்கள்.

பதம் 7.7.49 : பரமபுருஷராகிய பகவான் ஸ்ரீ ஹரியே அனைத்து ஜீவராசிகளின் ஆத்மாவும், பரமாத்மாவும் ஆவார், ஆத்மாவையும், ஜட உடலையும் பொறுத்தவரை ஒவ்வொரு ஜீவராசியும் பகவானுடைய சக்தியின் ஒரு தோற்றமேயாகும். எனவே பகவான் நமக்கு மிகப் பிரியமானவரும், பரம ஆளுனருமாவார்.

பதம் 7.7.50 : தேவரோ, அசுரரோ, மனிதரோ, யக்ஷரோ, கந்தர்வரோ அல்லது இப்பிரபஞ்சத்திலுள்ள வேறெவரோ, முக்தியளிப்பவரான முகுந்தனின் தாமரைப் பாதங்களுக்குச் சேவை செய்வாரானால், உண்மையில் அவர் எங்களைப் போலவே (பிரகலாதர் முதலான மகாஜனங்கள்), மிகவும் மங்களகரமான வாழ்வு நிலையில் இருப்பவராகிறார்.

பதங்கள் 7.7.51 – 7.7.52 : என்னருமைத் தோழர்களே, அசுர குமாரர்களே, நீங்கள் சிறந்த பிராமணர்களாகவோ, தேவர்களாகவோ, சிறந்த முனிவர்களாகவோ அல்லது நன்னடத்தையிலும், பரந்த கல்வியிலும் சிறந்தவராகவோ ஆவதன் மூலம் பரமபுருஷரை மகிழ்விக்க முடியாது. மேலே கூறிய எந்த தகுதியினாலும் பகவானின் மகிழ்ச்சியைத் தூண்ட முடியாது. அல்லது தான தர்மங்களாலும், தவத்தினாலும், யாகத்தினாலும், தூய்மையினாலும் அல்லது விரதங்களாலும் கூட பகவானை மகிழ்விக்க முடியாது. பகவானிடம் ஒருவன் உறுதியான தூய பக்தி கொண்டிருந்தால் மட்டுமே அவர் மகிழ்ச்சியடைகிறார். இதய பூர்வமான பக்தித் தொண்டில்லாத அனைத்தும் வெறும் போலி நாடகமேயாகும்.

பதம் 7.7.53 : எனதருமைத் தோழர்களே, அசுர குமாரர்களே, ஆகையால் தன்னுயிரைப் போலவே பிற உயிரைக் கருதி, அனைத்து ஜீவராசிகளின் பரமாத்மாவாக எங்கும் நிறைந்திருக்கும் பரமபுருஷரை மகிழ்ச்சிப்படுத்துவதற்கு, நீங்கள் பக்தித்தொண்டை மேற்கொள்ள வேண்டும்.

பதம் 7.7.54 : அருமைத் தோழர்களே, அசுர குமாரர்களே, நீங்களும் (யக்ஷர்கள், இராட்சஸர்கள்) அறிவற்ற பெண்கள், சூத்திரர்கள், இடையர்கள், பறவைகள், கீழான மிருகங்கள், பாவமுள்ள ஜீவராசிகள் உட்பட அனைவரும் உங்களுடைய ஆதியான நித்திய ஆன்மீக வாழ்வை உயிர்ப்பித்துக் கொண்டு, பக்தியோகக் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதாலேயே நித்தியமாக வாழ முடியும்.

பதம் 7.7.55 : எல்லாக் காரணங்களுக்கும் காரணமான கோவிந்தனின் தாமரைப் பாதங்களுக்குத் தொண்டு செய்வதும், எங்கும் அவரையே காண்பதுவுமே, இவ்வுலகில் வாழ்வின் ஒரே இலட்சியமாகும். எல்லா வேத நூல்களிலும் விவரிக்கப்படுவதுபோல், இது ஒன்றே மனித வாழ்வின் இறுதி இலக்காகும்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare