அத்தியாயம் – 12
பரிபூரண சமுதாயம் :
நான்கு ஆன்மீகப் பிரிவுகள்
பதம் 7.12.1 : நாரதமுனி கூறினார்: ஒரு மாணவன் தன் புலன்களை முழுமையாக அடக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவன் ஆன்மீக குருவிடம் அடக்கமாகவும் உறுதியான நட்புக் கொண்ட ஒரு மனோபாவத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். பிரம்மச்சாரி சிறந்த விரதம் பூண்டு தன் குருவின் நன்மைக்காகவே குருகுலத்தில் வாழ வேண்டும்.

பதம் 7.12.2 : இரவு பகல் ஆகிய இரு சந்தி வேளைகளிலும், அதாவது காலையிலும் மாலையிலும் அவன் ஆன்மீக குரு, அக்னி, சூரிய தேவன், மற்றும் பகவான் விஷ்ணு ஆகியோரின் சிந்தனையில் முழுமையாக ஆழ்ந்து, காயத்திரி மந்திரத்தை உச்சரித்து அவர்களை வழிபட வேண்டும்.

பதம் 7.12.3 : மாணவன் ஆன்மீக குருவால் அழைக்கப்பட்டவனாய் வேத மந்திரங்களை ஒழுங்காகக் கற்றறிய வேண்டும். தினமும் தன் கல்வியைத் துவங்கும் முன்பாகவும், அதன் முடிவிலும் சீடன் மரியாதையுடன் தனது ஆன்மீக குருவிற்கு வணக்கம் செலுத்த வேண்டும்.

பதம் 7.12.4 : பிரம்மச்சாரி தர்ப்பைப் புல்லைக் கையில் ஏந்தி, மான் தோலை ஆடையாக அணிந்து, புல்லாலான அரைக் கச்சையை தினமும் அணிந்திருக்க வேண்டும். அவன் ஜடாமுடி தரித்து, தண்டமும், கமண்டலமும் ஏந்தியவனாய், சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது போல் ஒரு பூணூலையும் அணிந்திருக்க வேண்டும்.

பதம் 7.12.5 : அந்த பிரம்மச்சாரி காலையிலும் மாலையிலும் வெளியே சென்று யாசித்து, கிடைத்ததை எல்லாம் தனது ஆன்மீக குருவிடம் ஒப்படைத்து விட வேண்டும். உணவருந்தும்படி ஆன்மீக குருவால் உத்தரவிடப்பட்டால் மட்டுமே அவன் உணவை உட்கொள்ள வேண்டும்; ஆன்மீக குரு அவ்வாறு உத்தரவு இடவில்லையென்றால் சிலசமயம் அவன் உபவாசம் இருக்க வேண்டியிருக்கும்.

பதம் 7.12.6 : பிரம்மச்சாரியானவன் நன்நடத்தை உள்ளவனாகவும், அடக்கமாகவும், தேவைக்கு அதிகமாக சாப்பிடாதவனாகவும், சேகரித்தவனாகவும் இருக்க வேண்டும். அவன் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும், சாமர்த்தியசாலியாகவும், குரு மற்றும் சாஸ்திரங்களின் உபதேசங்களில் முழு நம்பிக்கைக் கொண்டவனாகவும் இருக்க வேண்டும். இவ்வாறாக அவன் தன் புலன்களை முழுமையாகக் கட்டுப்படுத்தி, பெண்களுடனும், பெண்களால் அடக்கி ஆளப்படுபவர்களுடனும் தேவையான அளவுக்கு மட்டுமே சகவாசம் வைத்துக் கொள்ள வேண்டும்.

பதம் 7.12.7 : பிரம்மச்சாரி ஒருவன், அல்லது கிருஹஸ்த ஆசிரமத்தை (இல்லற வாழ்வை) ஏற்றுக் கொள்ளாத ஒருவன், பெண்களுடன் பேசுவதையோ அல்லது பெண்களைப் பற்றி பேசுவதையோ கண்டிப்பாக தவிர்த்துவிட வேண்டும். புலன்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்பதால், துறவு வாழ்வை மேற்கொண்ட ஒரு சந்நியாசியின் மனதைக்கூட பெண்களால் சஞ்சலப்படுத்திவிட இயலும்.

பதம் 7.12.8 : ஆன்மீக குருவின் மனைவி இளமையானவளாக இருந்தால், அவள் பாசமுள்ள ஒரு தாய்போல் தன் கேசத்தைச் சீவிவிடுவதற்கும், எண்ணெய் தேய்த்துத் தன் உடலை உருவிவிடுவதற்கும், தன்னை நீராட்டுவதற்கும் இளமையான ஒரு பிரம்மச்சாரி அனுமதிக்கக் கூடாது.

பதம் 7.12.9 : பெண் நெருப்புக்கு ஒப்பிடப்படுகிறாள். ஆண் வெண்ணெய் பாத்திரத்திற்கு ஒப்பிடப்படுகிறான். ஆகவே ஓர் தனிமையான ஓரிடத்தில் தன் சொந்த மகளுடன் சகவாசம் கொள்வதைக் கூட தவிர்க்க வேண்டும். அவ்வாறே, பிற பெண்களுடனான சகவாசத்தையும் அவன் தவிர்க்க வேண்டும். ஒருவன் முக்கியமான காரணத்திற்காக மட்டுமே பெண்களுடன் சகவாசம் கொள்ள வேண்டும். இல்லாவிடில் கூடாது.

பதம் 7.12.10 : ஒரு ஜீவராசி முழுமையான தன்னுணர்வைப் பெறாதவரை, மூல உடலின் மற்றும் புலன்களின் ஒரு பிரதிபலிப்பு மட்டுமேயான தன்னுடைய உடலே தான் என்ற தவறான அபிப்பிராயத்திலிருந்து அவன் விடுபடாதவரை, இருமை என்ற எண்ணத்திலிந்து அவனால் விடுபட முடியாது. இவ்வாறாக அவனது புத்தி தடுமாற்றத்தின் காரணத்தால் அவனது வீழ்ச்சிக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

பதம் 7.12.11 : சட்டதிட்டங்கள் அனைத்துமே குடும்பஸ்தர்களுக்கும், துறவிகளான சந்நியாசிகளுக்கும் சமமாகப் பொருந்துகின்றன. ஆனால் ஒரு கிருஹஸ்தனுக்கு, சந்ததியை விருத்தி செய்வதற்கு அனுகூலமான காலத்தில், உடலுறவில் ஈடுபடுவதற்கு ஆன்மீக குருவால் அனுமதி அளிக்கப்படுகிறது.

பதம் 7.12.12 : பிரம்மச்சரிய விரதம் பூண்டுள்ள பிரம்மச்சாரிகளோ அல்லது கிருஹஸ்தர்களோ கீழ்க்கண்ட செயல்களில் ஈடுபடக் கூடாது: முகத்திற்குப் பவுடரோ அல்லது கண்களுக்கு மையோ இட்டுக் கொள்ளக் கூடாது. எண்ணெய்யால் தலையையோ, உடலையோ கைகளால் உருவிவிடக்கூடாது. ஒரு பெண்ணைப் பார்க்கவோ, பெண்ணின் படத்தை வரையவோ, மாமிசம் உண்ணவோ, மது அருந்தவோ கூடாது. மேலும் மலர் மாலைகளால் உடலை அலங்கரித்தல், உடலில் வாசனைத் தைலங்களைப் பூசிக் கொள்ளுதல், ஆபரணங்களால் உடலை அலங்கரித்துக் கொள்ளுதல் முதலியவைகளைக் கூட அவர்கள் விட்டு விட வேண்டும்.

பதங்கள் 7.12.13 – 7.12.14 : இருபிறப்பெய்திய பிராமணன், க்ஷத்திரியன் அல்லது வைசியனொருவன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கேற்ப, ஆன்மீக குருவின் பராமரிப்பின் கீழ் குருகுலத்தில் வசிக்க வேண்டும். பிறகு அவன் தனது கல்வித் திறனுக்கேற்ப, எல்லா வேத இலக்கியங்களையும், அவற்றுடன் புராணங்களையும், உபநிஷதங்களையும் கற்றறிய வேண்டும். மாணவன் அல்லது சீடனொருவன் சாத்தியமானால் தன் குருவால் கேட்கப்படும் குரு தட்சிணையைக் கொடுக்க வேண்டும். பிறகு அந்த சீடன் குருவின் உத்தரவைப் பின்பற்றி, குருகுலத்திலிருந்து வெளியேறி, மற்ற ஆசிரமங்களுள் ஒன்றை, அதாவது கிருஹஸ்த ஆசிரமம், வானப்பிரஸ்த ஆசிரமம் அல்லது சந்நியாச ஆசிரமம் ஆகியவற்றுள் தான் விரும்பிய ஓர் ஆசிரமத்தை அவன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பதம் 7.12.15 : நெருப்பிலும், ஆன்மீக குருவிலும், தன்னிலும், அனைத்து ஜீவராசிகளிலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் பரமபுருஷராகிய பகவான் விஷ்ணு ஒரே சமயத்தில் புகுந்தும் புகாமலும் இருக்கிறார் என்பதை ஒருவன் உணர வேண்டும். அவர் அனைத்தையும் முழுமையாக ஆள்பவராக உள்ளும் புறமும் இருக்கிறார்.

பதம் 7.12.16 : ஒருவன் பிரம்மச்சாரியாகவோ, கிருஹஸ்தனாகவோ, வானப்பிரஸ்தனாகவோ அல்லது சந்நியாசியாகவோ இருந்தாலும், இவ்வாறு பயிற்சி செய்வதன்மூலம், பரமபுருஷரின் எங்கும் நிறைந்துள்ள தன்மையை எப்பொழுதும் அவன் உணர்ந்திருக்க வேண்டும். ஏனெனில் இந்த முறையினால் பூரண உண்மையைப் புரிந்து கொள்வது சாத்தியமாகும்.

பதம் 7.12.17 : அரசே, குடும்ப வாழ்விலிருந்து ஓய்வு பெற்ற ஒரு வானப்பிரஸ்தனின் தகுதிமுறைகளை இப்பொழுது நான் விவரிக்கிறேன். வானப்பிரஸ்த வாழ்வுக்குரிய விதிமுறைகளை உறுதியாகப் பின்பற்றுவதன் மூலம், ஒருவனால் சுலபமாக மஹர்லோகம் என்ற உயர்கிரக அமைப்பிற்கு ஏற்றம் பெற முடியும்.

பதம் 7.12.18 : வானப்பிரஸ்த வாழ்விலுள்ள ஒருவன் நிலத்தை உழுது அதில் உற்பத்தியாகும், தானியங்களை உண்ணக் கூடாது. நிலத்தை உழாமலேயே விளைந்துள்ள தானியங்களை அவன் உண்ணலாம். ஆனால் அத்தகைய தானியங்கள் முற்றிலும் பழுத்தவையாக இருக்க வேண்டும். மேலும் நெருப்பில் சமைத்த தானியங்களையும் அவன் உண்ணக்கூடாது. உண்மையில், சூரிய ஒளியால் பழுத்துள்ள பழங்களை மட்டுமே அவன் உண்ண வேண்டும்.

பதம் 7.12.19 : ஒரு வானப்பிரஸ்தன் வனத்தில் இயற்கையாக விளைந்த தானியங்களையும், பழங்களையும் கொண்டு பலகாரங்கள் செய்து அதை யாகத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அவன் புதிய தானியங்களைப் பெறும் சமயத்தில், பழைய தானியங்களின் இருப்பை அகற்றிவிட வேண்டும்.

பதம் 7.12.20 : ஒரு வானப்பிரஸ்தன், வேள்வித் தீயை பாதுகாப்பதற்காக மட்டுமே கூரைவேய்ந்த ஒரு குடிசையை அமைத்துக் கொள்ளவோ அல்லது ஒரு மலைக் குகைக்குள் புகலிடம் கொள்ளவோ, அனுமதிக்கப்படுகிறான். ஆனால் அவன் நீடித்த பனியிலும், காற்றிலும், நெருப்பிலும், மழையிலும், சூரிய ஒளியிலும் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

பதம் 7.12.21 : வானப்பிரஸ்தன் ஜடாமுடி தரித்து, அவனது உடலிலுள்ள முடி, நகங்கள், மீசை, ஆகியவற்றை வளரவிட வேண்டும். தன் உடலிலுள்ள அழுக்கை அவன் சுத்தம் செய்யக் கூடாது. அவன் மரவுரி தரித்து கமண்டலமும், மான் தோலும், தண்டமும் வைத்துக் கொண்டு, நெருப்பைப் போன்ற வர்ணமுடைய ஆடைகளை உபயோகிக்க வேண்டும்.

பதம் 7.12.22 : ஆழ்ந்த சிந்தனையுடன் ஒரு வானப்பிரஸ்தன் காட்டில் பன்னிரண்டு வருடங்களோ, எட்டு வருடங்களோ, நான்கு வருடங்களோ, இரண்டு வருடங்களோ அல்லது குறைந்த பட்சம் ஒரு வருடமேயாவது வாழவேண்டும். தான் அளவுக்கதிகமான தவத்தினால் தொல்லைக்கோ, துன்பத்திற்கோ ஆளாகதபடி அவன் நடந்து கொள்ள வேண்டும்.

பதம் 7.12.23 : நோய் அல்லது முதுமையின் காரணத்தால், ஆன்மீக உணர்வில் முன்னேறுவதற்குரிய அல்லது வேதங்களைக் கற்பதற்குரிய தன் கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலையிலுள்ள ஒருவன், எந்த உணவையும் உட்கொள்ளாமல் உபவாசம் இருக்கப் பழக வேண்டும்.

பதம் 7.12.24 : அவன் மூலப் பொருளான நெருப்பைத் தன்னில் சரியாக நிலைக்கச் செய்து, உடலே தான் அல்லது உடல் தன்னுடையது என்ற தேகாபிமானத்தை விட்டுவிட வேண்டும். பிறகு ஜட உடலை அவன் படிப்படியாக பஞ்ச பூதங்களுடன் (மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) கலக்கச் செய்து விட வேண்டும்.

பதம் 7.12.25 : நிதான புத்தியும், முழு அறிவும் உள்ள தன்னுணர்வு பெற்ற ஒருவன், உடலின் வெவ்வேறு பகுதிகளை அவற்றின் மூல பிறப்பிடங்களுடன் கலக்கச் செய்துவிட வேண்டும். உடலிலுள்ள துவாரங்கள் ஆகாயத்தினால் விளைவிக்கப்படுகின்றன. சுவாசமானது காற்றினால் விளைவிக்கப்படுகிறது. உடலின் வெப்பமானது நெருப்பினால் விளைவிக்கப்படுகிறது. மேலும் விந்து, இரத்தம், சளி ஆகியவை நீரினால் விளைவிக்கப்படுகின்றன. தோல், தசை, எலும்பு போன்ற கெட்டியான பொருட்கள் மண்ணினால் விளைவிக்கப்படுகின்றன. இவ்வாறாக உடலின் எல்லாப் பகுதிகளும் வெவ்வேறு மூலப்பொருட்களால் விளைவிக்கப்படுகின்றன. அவற்றை மீண்டும் அந்தந்த மூலப் பொருட்களுடனேயே கலந்து விடச் செய்ய வேண்டும்.

பதங்கள் 7.12.26 -7.12.28 : அதன்பிறகு, பேச்சுப் பொருளையும், பேசும் புலனையும் (நாக்கு) நெருப்பிடமும்; தொழில் திறமையையும், இரு கைகளையும் தேவேந்திரனிடமும்; அசையும் சக்தியையும், கால்களையும் பகவான் விஷ்ணுவிடமும்; புலன் சுகத்தையும், பாலுறுப்புகளையும் பிரஜாபதிகளிடமும் ஒப்படைத்துவிட வேண்டும். மலக்குடலையும், மலத்தை வெளியேற்றும் குடலையும் அவற்றின் சரியான இருப்பிடமாகிய ம்ருத்யுவிடம் ஒப்படைத்துவிட வேண்டும். கேட்கும் கருவியை அதன் ஒலி அதிர்வுடன் திக்தேவதைகளிடம் அர்ப்பணித்துவிட வேண்டும். ஸ்பரிச கருவியை அதன் ஸ்பரிச பொருட்களோடு வாயுவிடம் அர்ப்பணித்துவிட வேண்டும். உருவத்தை, உருவத்தைப் பார்க்கும் சக்தியுடன் சூரியனிடம் அர்ப்பணித்துவிட வேண்டும். நாக்கை வருண தேவருடன் நீரிடமும்; முகம் சக்தியை இரு அஸ்வினி குமார தேவர்களுடன் மண்ணிடமும் அர்ப்பணித்துவிட வேண்டும்.

பதங்கள் 7.12.29 – 7.12.30 : மனதை எல்லா பெளதிக ஆசைகளுடன் சந்திரதேவனில் மூழ்கடித்துவிட வேண்டும். புத்தியை புத்தியால் அறியப்படும் விஷயங்களுடன் பிரம்மதேவரில் அமிழ்த்திவிட வேண்டும். ஜட இயற்கைக் குணங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதும், “நான் இந்த உடல். இந்த உடலோடு சம்பந்தப்பட்டுள்ள அனைத்தும் என்னுடையவை” என்று நினைக்கத் தூண்டுவதுமான பொய் அகங்காரத்தை, பௌதிக செயல்களுடன், பொய் அகங்காரத்தின் அதிதேவதையான ருத்திரனில் இரண்டறக் கலந்துவிட வேண்டும். பெளதிக உணர்வைச் சிந்தனையின் நோக்கத்துடன் தனிப்பட்ட ஜீவராசியில் கலந்துவிட வேண்டும். ஜட இயற்கைக் குணங்களின் கீழ் செயற்படும் தேவர்களை நெறிகெட்ட ஜீவராசியுடன் பரமபுருஷரில் ஐக்கியப்படுத்திவிட வேண்டும். பூமியை நீரிலும், நீரைச் சூரியனின் பிரகாசத்திலும், இப்பிரகாசத்தைக் காற்றிலும், காற்றை ஆகாயத்திலும், ஆகாயத்தைப் பொய் அகங்காரத்திலும், பொய் அகங்காரத்தை மொத்த பெளதிக சக்தியிலும், மொத்த பௌதிக சக்தியை தோற்றத்திற்கு வராத பகுதிப் பொருளிலும் (பௌதிக சக்தியின் ப்ரதான அம்சம்), இறுதியாக பெளதிக தோற்றத்தின் பகுதிப் பொருள் அம்சத்தைப் பரமாத்மாவிலும் ஐக்கியப்படுத்திவிட வேண்டும்.

பதம் 7.12.31 : இவ்வாறு எல்லா பௌதிக பொருட்களும் அவற்றிற்குரிய பௌதிக மூலப்பொருட்களில் இரண்டறக் கலந்ததும், முற்றிலும் ஆன்மீகமயமான ஜீவராசிகள் குணத்தில் பரமனுடன் ஒன்றுபட்டவையாக இருப்பதால், விறகு எரிந்து சாம்பலானதும் அதை எரித்த நெருப்பு ஓய்ந்து விடுவது போல், பௌதிக வாழ்விலிருந்து அந்த ஜீவராசிகள் ஓய்ந்து விட வேண்டும். பௌதிக உடலானது அதன் பல்வேறு பௌதிக மூலப் பொருட்களுடன் கலக்கப்பட்டதும், ஆன்மீக ஆத்மா மட்டுமே எஞ்சியிருக்கிறது. இந்த ஆன்மீக ஆத்மா பிரம்மனாகும். இது குணத்தில் பரப்பிரம்மனுக்குச் சமமானதாகும்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare