அத்தியாயம் – 12
ரகூகண மன்னருக்கும் மானுட பரதருக்கும்
இடையே நடந்த உரையாடல்
பதம் 5.12.1 : மன்னர் ரகூகணன் கூறினார்: ஒ, மேன்மைமிக்கவரே, முழுமுதற் கடவுளிடமிருந்து நீர் வேறானவர் அல்லர். உமது உண்மையான ஆத்மாவின் செல்வாக்கினால் சாத்திரங்களிலுள்ள அனைத்து முரண்பாடுகளும் நீக்கப்பட்டன. ஓர் அந்தணரின் நண்பன் என்னும் ஆடையினுள் நீர் உமது உன்னத ஆனந்த நிலையினை மறைத்துக் கொண்டிருக்கின்றீர். எனது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்குச் செலுத்துகின்றேன்.

பதம் 5.12.2 : ஒ, அந்தணரில் சிறந்தோனே, எனது உடல் அழுக்குகளினால் நிரப்பப்பட்டிருக்கிறது. எனது பார்வையோ கர்வம் என்னும் பாம்பினால் கடிக்கப்பட்டிருக்கிறது. எனது உலகியற் கருத்துக்களினால் நான் பிணியுற்றிருக்கிறேன். இது போன்ற காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருப்பவனுக்கு உமது அமிர்த உபதேசங்களே நன்மருந்தாகும். வெம்மை அடைந்துள்ள ஒருவருக்கு அவைதான் குளிர்ந்த நீராகும்.

பதம் 5.12.3 : ஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றி எனக்கு எப்படிப்பட்ட ஐயங்கள் இருந்தபோதிலும் அவற்றைப் பின்னர் உம்மிடம் தெளிவாக்கிக் கொள்கிறேன். அதற்கிடையே தன்னுணர்வு பெறுவதற்காக நீர் எனக்கு உபதேசித்த யோக உபதேசங்களின் உட்பொருளைப் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது. அருள்கூர்ந்து அவற்றை மீண்டும் எளிமையாக விளக்குவீராக. அப்போது தான் என்னால் புரிந்தகொள்ள முடியும். எனது மனம் அறியும் தாகமுடையதாக இருக்கிறது. இதனை நான் தெளிவாகப் புரிந்து கொள்ள விரும்புகிறேன்.

பதம் 5.12.4 : ஒ, யோகேஸ்வரனே, உடல் அங்கும் இங்கும் அலைவதினால் உண்டாகும் சிரமமானது நேரடி உணர்வினால் போற்றப்படுகிறது என்று கூறியிருக்கின்றீர். ஆனால் உண்மையில் சிரமம் என்பது கிடையாது. அது மேலோட்டமாக வெளிப்படுவதாகும். இது போன்ற கேள்வி பதில்களினால் முழுமெய்ப்பொருளைப் பற்றிய முடிவிற்கு ஒருவரும் வர முடியாது. உமது இக்கூற்றினால் எனது மனம் சிறிது குழப்பமடைந்திருக்கிறது.

பதங்கள் 5.12.5 – 5.12.6 : தன்னுணர்வு பெற்ற அந்தண பரதர் கூறினார்; பல்வேறு பௌதீகக் கலப்புக்கள் மற்றும் வரிசை முறை மாற்றங்களுக்கு மத்தியில் பல்வேறு வடிவங்களும் நிலத்தின் மாறுபாடுகளும் இருக்கின்றன. சில காரணங்களுக்காக, இவை பூமியின் மீது நகர்ந்து பல்லக்குத் தூக்கிகள் என்று அழைக்கப்படுகின்றனர். இவ்வாறு நகராத மாறுபாடுகள் கல் போன்ற ஸ்தூல பௌதீகப் பொருட்களாகும். எது எப்படியிருந்தாலும், பௌதீக உடலானது கல், மண், போன்றவற்றிலிருந்து பாதங்கள், கணுக்கால், கெண்டைக்கால், மூட்டுகள், தொடைகள், இடுப்பு, கழுத்து, தலை என்ற வடிவங்களில் உருவாக்கப்படுகின்றன. தோள்களின் மீது மரப்பல்லக்கு இருக்கிறது. பல்லக்கினுள் சௌவீர நாட்டின் மன்னர் இருக்கிறார். மன்னரின் உடல் மண்ணின் மற்றொரு மாற்றமாகும். அந்த உடலினுள் மேலாண்மை மிக்க நீர் இருக்கின்றீர். உம்மை சௌவீர நாட்டின் மன்னன் என்று தவறாகக் கருதுகின்றீர்.

பதம் 5.12.7 : கூலி ஏதும் பெற்றுக் கொள்ளாமல் உமது பல்லக்கைத் தூக்கும் இந்த அறியாத மனிதர்கள் உனது அநீதியின் காரணமாகத் துன்புறுகின்றனர் என்பது எவ்வாறேனும் உண்மையே ஆகும். அதிகாரத்தினால் அவர்களைப் பல்லக்கு சுமக்கச் செய்துள்ளீர். அவர்களது நிலை உண்மையில் துக்கத்திற்குரியதாகும். இது உனது அன்பில்லாத கொடிய தன்மையை நிரூபிக்கின்றது. இருந்தும் உனது பொய்யான கர்வத்தினால் பொதுமக்களை நாம்தான் பாதுகாக்கின்றோம் என்று நீ நினைக்கின்றாய். இது நகைப்புக்கிடமானதாகும். ஞானத்தில் மிகச் சிறந்த அறிஞர்கள் சபையில் வைத்துப் போற்ற முடியாத முட்டாள் நீ.

பதம் 5.12.8 : பூமியின் மேற்பரப்பில் வாழும் நாம் அனைவரும் பல்வேறு வடிவங்களில் உள்ள உயிர்கள் ஆவோம். நம்மில் சிலர் அசைகின்றவர்களாகவும், சிலர் அசைவற்றவர்களாகவும் இருக்கிறோம். நாம் அனைவரும் வாழ்க்கைக்கு வருகிறோம். சில காலம் வாழ்கிறோம். உடல் மீண்டும் மண்ணில் கலக்கும் போது அழிந்து போகிறோம். நாம் அனைவரும் மண்ணின் பல்வேறு மாற்றங்களேயாவோம். பல்வேறு உடல்களும் செயல்திறன்களும் மண்ணின் மாற்றங்களேயாகும். அவை பெயரளவிலேயே வெளிப்படுகின்றன. எல்லாம் மண்ணிலிருந்து தோன்றி, அழியும் போது மீண்டும் மண்ணிலேயே மறைகின்றன. அதாவது நாம் மண்ணாக இருக்கின்றோம். மண்ணாகவே மறைகின்றோம் என்றும் கூறலாம்.

பதம் 5.12.9 : பல்வகை வேறுபாடுகள் பூமியிலிருந்து தோன்றுகின்றன என்று கூறலாம். ஆனால் பிரபஞ்சம் தற்காலிக உண்மையாகத் தோன்றிய போதிலும் அது இறுதியில் உண்மையானது அன்று. நிலமானது உண்மையில் அணுக்கூறுகளின் கலப்பினால் அமைக்கப்பட்டதாகும். ஆனால் இக்கூறுகள் நிலையற்றவை. சில தத்துவவாதிகள் அவ்வாறு கூறியபோதிலும் பிரபஞ்சத் தோற்றத்திற்கு அணு காரணமல்ல, அணுக்களின் அடுக்கு வரிசை அல்லது கலப்பின் விளைவாக உலகில் பல்வகை வேறுபாடுகள் காணப்படுகின்றன என்பது உண்மையல்ல.

பதம் 5.12.10 : இப்பிரபஞ்சத்திற்கு உண்மையான இறுதித் தோற்றம் இல்லாததினால், இதனுள்ளிருக்கும் குள்ளம், வேறுபாடுகள், பருமன், மெலிவு, சிறிது, பெரிது, விளைவு, காரணம், உயிர், அடையாளங்கள் மற்றும் பொருள்கள் அனைத்தும் கற்பனையானவை எனலாம். இவையனைத்தும் மண் என்னும் பொருளிலிருந்து உருவான பாத்திரங்களேயாகும். ஆயினும் அவற்றுக்குப் பல்வேறு பெயர்கள் உள்ளன. பொருள், இயற்கை, முற்சார்பு, காலம், செயல் போன்றவற்றினால் இவ்வேறுபாடுகள் வெளிப்படுகின்றன. இவையனைத்தும் இயற்கையினால் உருவாக்கப்பட்ட இயந்திரத்தனமான வெளித்தோற்றங்களாகும்.

பதம் 5.12.11 : பிறகு, இறுதி, உண்மை என்பது என்ன? இருமையற்ற ஞானமே இறுதி உண்மையாகும். அதனுள் உலகியற் குணங்கள் எனும் மாசு இல்லை. அது நமக்கு விடுதலையளிக்கிறது. அது இரண்டில்லாத ஒன்றேயாகும். எங்கும் பரந்திருப்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது. ஞானத்தின் முதல் உணர்வு பிரம்மமேயாகும். அடுத்து யோகிகள் குறைவின்றி காண்பதற்கு முயலும் பரமாத்மாவினை உணர்வதாகும். இறுதியாக, பரம புருஷரை உணர்கின்ற பரமஞானத்தின் முழுவுணர்வாகும். கற்றறிந்த அறிஞர்கள் அனைவரும் வாசுதேவரை பிரம்மத்திற்கும், பரமாத்மாவிற்கும் மற்றும் பிறர்க்கும் ஆதாரமானவர் என்று விளக்குகின்றார்.

பதம் 5.12.12 : அன்பார்ந்த மன்னர் ரகூகணனே, ஒருவன் தனது உடல் முழுதும் ஒரு சிறந்த பக்தனின் தாமரைத் திருவடிகளிலுள்ள தூசியினைப் பூசிக்கொள்ளும் சந்தர்ப்பம் பெறாது முழு மெய்ப்பொருளை அறிந்து கொள்ள முடியாது. பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பதினாலோ, இல்லற வாழ்க்கையின் ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்றுவதினாலோ, வானப்பிரஸ்த வாழ்க்கைக்காக வீட்டைத் துறந்து செல்வதினாலோ, துறவறம் மேற்கொள்வதினாலோ, கடுமையான குளிரில் நீரில் மூழ்கி இருத்தல், கோடை வெம்மையில் நெருப்பின் மத்தியில் இருத்தல் போன்ற கடுமையானத் தவங்களை மேற்கொள்வதினாலோ ஒருவனால் முழு மெய்ப்பொருளை உணர்ந்து கொள்ள முடியாது. முழு மெய்ப்பொருளை அறிந்து கொள்வதற்கு பிற செயல்முறைகளும் உள்ளன. ஆயினும் ஒரு சிறந்த பக்தனின் கருணையைப் பெற்றவனுக்கே முழு மெய்ப்பொருள் வெளிப்படுகிறது.

பதம் 5.12.13 : இங்கே குறிப்பிடப்படும் தூய பக்தன் யாவர்? தூய பக்தர்களின் கூட்டத்தில் உலக விஷயங்களான அரசியல், சமூகவியல் பற்றிய கலந்துரையாடல் பற்றிய கேள்விக்கே இடமில்லை. தூய பக்தர்களின் கூட்டத்தில் முழுமுதற் கடவுளின் குணங்கள், வடிவங்கள், லீலைகள் பற்றிய கலந்துரையாடல் மட்டுமே இடம் பெறும். அவரே முழு கவனத்துடன் போற்றி வளர்க்கப்படுகிறார். தூய பக்தர்களின் கூட்டத்தில் இவற்றை மரியாதையுடன் தொடர்ந்து கேட்பதினால் முழு மெய்ப்பொருளுடன் இணைய வேண்டும் என்று விரும்புபவன் கூட அந்த எண்ணத்தைக் கைவிட்டு படிப்படியாக வாசுதேவரின் தொண்டில் பற்றுடையவனாகிறான்.

பதம் 5.12.14 : எனது முற்பிறப்பில் நான் பரத மன்னர் என்று அறியப்பட்டிருந்தேன். உலகப் பற்றிலிருந்து அனுபவரீதியாக முற்றிலும் விடுபட்டு மனநிறைவோடு இருந்தேன். வேதங்களைப் பற்றிய எனது அறிவும் இதற்குத் துணை நின்றது. மன நிறைவினை வேதங்களிலிருந்து நான் புரிந்து கொண்ட நேர்முக மறைமுக அனுபவங்களினால் பௌதீகச் செயல்களில் இருந்து முற்றிலும் பற்றறுத்த நிலையினை எய்தியிருந்தேன். நான் பகவானின் தொண்டில் முழுவதும் ஈடுபட்டிருந்தேன். ஆனால் எனது துரதிர்ஷ்டம் காரணமாக நான் ஒரு சிறிய மான் குட்டியிடம் மிகுந்த பாசமுடையவனாகிவிட்டேன். ஆனால் எனது ஆன்மீகக் கடமைகளை நான் புறக்கணித்தேன். மான் மீது நான் வைத்திருந்த மிகுந்த பாசத்தின் காரணமாக எனது அடுத்த பிறவியில் ஒரு மானின் உடலை நான் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.

பதம் 5.12.15 : எனது அன்பிற்குரிய வீர மன்னனே, பகவானுக்கு நான் முன்பு செய்த சீரிய தொண்டினால் ஒரு மானின் உடலில் இருந்தபோதிலும் எனது கடந்தகால வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் என்னால் நினைவு கூற முடிந்தது. கடந்து போன வீழ்ச்சியினைப் பற்றி நான் நன்கறிந்த காரணத்தினால் நான் எப்போதும் என்னை சாதாரண மனிதர்களின் தொடர்பிலிருந்து தனித்தே வைத்திருந்தேன். அவர்களது சீர்குலைந்த உலகத் தொடர்பிற்கு அஞ்சி நான் பிறர் கவனிக்காத வண்ணம் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கின்றேன்.

பதம் 5.12.16 : மேன்மை மிக்க சிறந்த பக்தர்களுடன் கொள்ளும் தொடர்பின் மூலம் அனைவரும் ஞானத்தின் நிறைவினை எய்தலாம். அந்த ஞான வாளினால் உலகத் தொடர்பின் மீதான மோகத்தினை துண்டு துண்டாக வெட்டிச் சாய்க்கலாம். பக்தர்களின் தொடர்பின் மூலம் கேட்டல் நினைத்தல் (ஸ்ரவணம் கீர்தனம்) என்பவற்றினால் பகவானின் தொண்டில் ஒருவன் ஈடுபடலாம். இவ்வாறு ஒருவன் செயலற்றிருக்கும் தனது கிருஷ்ண உணர்வினை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும் கிருஷ்ண உணர்வினை வளர்ப்பதில் ஈடுபாடு கொள்வதின் மூலம் இல்வாழ்க்கையிலேயே வீடுபேறு பெற்று முழுமுதற் கடவுளையும் அடையலாம்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare