அத்தியாயம் – 11
அணுவிலிருந்து தொடங்கும் காலக்கணிதம்
பதம் 3.11.1 : உலகப் பொருள்களின் இறுதிக் கூறு பிரிக்க முடியாதது என்பதோடு ஓர் உடலினுள் அது உருவாவதும் இல்லை. இதுவே அணு என்று அழைக்கப்படுகிறது. அனைத்து வடிவங்களும் அழிக்கப்பட்டப் பிறகும் அது எப்பொழுதும் கண்களுக்குப் புலனாகாத தனித்தன்மையுடையதாயிருக்கிறது. இவ்வணுக்களின் கூட்டினாலேயே இப்பூதவுடல் ஆனது. ஆயினும் இது சாதாரண மனிதனால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.

பதம் 3.11.2 : கண்ணுக்குப் புலனாகின்ற இந்த உலகின் உறுதி நிலையாக இருப்பவை அணுக்களேயாகும். பல்வேறு உடல்களை உருவாக்காது அவை தமது சுயரூபத்தில் இருக்கும்பொழுது அளவற்ற ஒருமையுடையனவென்று அழைக்கப்படுகின்றன. பூதவுடல்களைப் பொறுத்த வரையில் பல்வேறு வடிவங்கள் நிச்சயம் இருக்கின்றன. ஆனால் அணுக்கள் தாமே ஒரு முழுத் தோற்றத்தினை உருவாக்குகின்றன.

பதம் 3.11.3 : அணுக்களின் அணைப்பினால் ஆகிய உடல்களின் வளர்ச்சியினை அளப்பதின் மூலம் ஒருவன் காலத்தைக் கணக்கிடலாம். காலமே அனைத்துமான முழுமுதற் கடவுளான ஹரியின் சக்தியாக விளங்குகிறது. அவர் இந்தப் புற உலகின் பார்வைக்குப் புலனாகாதவராக இருந்த போதிலும் உலக அசைவுகள் அனைத்தையும் அவரே கட்டுப்டுத்துகிறார்.

பதம் 3.11.4 : அணுவினுடைய காலம் என்பது, அது பரவியுள்ள இடத்தின் அளவைப் பொருத்ததாகும். கண்ணுக்குப் புலப்படாத ஒட்டுமொத்த அணுக்கள் பரவியுள்ள அனைத்து இடங்களையும் கடந்ததே மகாகாலம் ஆகும்.

பதம் 3.11.5 : காலத்தின் பிரிவுகள் பின்வருமாறு கணக்கிடப்படுகின்றன. இரு அணுக்கள் சேர்த்து ஓர் இரட்டை அணுவாகிறது. இவ்விரட்டையணுக்கள் மூன்று சேர்ந்து அறுவணுவாகிறது. இவ்வறுவணுவானது ஜன்னல் திரையின் துளைகளின் வழியே வரும் சூரிய ஒளியில் காணப்படுவதாகும். இவ்வறுவணுவானது வானை நோக்கிச் செல்வதை ஒருவன் தெளிவாகக் காணலாம்.

பதம் 3.11.6 : மூன்று திரஸரேணுக்கள் சேர்வதற்கானக் காலம் த்ருடி
என்றழைக்கப்படுகிறது. இவ்வாறு நூறு த்ருடிகள் சேர்ந்து ஒரு வேதம் ஆகும். மூன்று வேதங்கள் ஒரு லவ ஆகும்.

பதம் 3.11.7 : மூன்று லவக்களின் கால அளவானது ஒரு நிமேஷம் ஆகும். மூன்று நிமேஷங்கள் இணைந்து வரும் கால அளவு ஒரு க்ஷணம் ஆகும். ஐந்து க்ஷணங்கள் இணைந்து ஒரு காஷ்டா ஆகிறது. பதினைந்து காஷ்டாக்கள் சேர்ந்தால் அது ஒரு லகுவாகும்.

பதம் 3.11.8 : பதினைந்து லகுக்கள் சேர்ந்து ஒரு நாடிகையை உருவாக்குகின்றன. இந்தாடிகையானது தண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இரு தண்டங்கள் சேர்ந்து ஒரு முகூர்த்தமாகும். ஆறு அல்லது ஏழு தண்டங்கள் சேர்ந்து மனிதர்கள் கணக்கிடும் ஒரு பகல் அல்லது ஓர் இரவில், நான்கில் ஒரு பகுதியினை உருவாக்குகின்றன.

பதம் 3.11.9 : ஒரு நாடிகை அல்லது ஒரு தண்டத்தினை அளப்பதற்கான பானையானது ஆறு பலம் (பதினான்கு அவுன்ஸ்) எடையில் தாமிரத்தினால் செய்யப்படுதல் வேண்டும். அப்பானையினுள் நான்கு மாஷ எடையும் நான்கு விரற்கடை (நான்கு அங்குலம்) நீளமும் கொண்ட ஒரு தங்கக் கம்பியை இணைத்துத் துளையிட்டு பானையில் நீர் நிரம்பி வழிவதற்கு ஆகக்கூடிய நேரமே தண்டம் என்றழைக்கப்படுகிறது.

பதம் 3.11.10 : நான்கு பிரஹரஸ்கள் உள்ளதாக கணக்கிடப்படுகின்றன. இதனை யாமம் என்றும் அழைத்தனர். இது மனிதர்களுக்கான பகலில் நான்கும் இரவில் நான்கும் ஆகும். இதுபோன்று பதினைந்து பகலும் பதினைந்து இரவும் சேர்ந்து இரண்டு வார காலம் ஆகும். இவ்வாறு ஒரு மாதத்தில் இரு இரண்டு வார காலங்கள் வெண்மையென்றும் (சுக்கில) கருமை என்றும் (கிருஷ்ண) இருக்கின்றன.

பதம் 3.11.11 : இவ்வாறு இரு இரண்டு வாரங்கள் சேர்ந்தது ஒரு மாதம் ஆகும். இம்மாதம் பித்ரு லோகத்தில் ஒரு முழு பகலும் ஒரு முழு இரவும் கொண்டதாகும். இது போன்ற இரண்டு மாதங்கள் கொண்டது ஒரு ருது அல்லது பருவம் ஆகும். சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்குப் பயணம் செய்யுங்காலம் ஆறு மாதங்கள் ஆகும்.

பதம் 3.11.12 : இவ்வாறு சூரியனின் உத்தராயனம் மற்றும் தக்ஷிணாயனம் என்றும் இரண்டும் சேர்ந்து தேவர்களுக்கு ஒர் இரவும் ஒரு பகலுமாகும். இதுவே மனிதர்களுக்கு ஒரு வருடமாகும். மனிதர்களுக்கு ஆயுட்காலம் நூறு வருடங்களாகும்.

பதம் 3.11.13 : பரம்பொருளின் கட்டளை என்னும் நித்திய காலத்தில் நம்மைப் பாதிக்கும் கிரகங்கள், நட்சத்திரங்கள், ஒளிக்கோளங்கள் மற்றும் அணுக்கள் போன்ற இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் தத்தமக்குரிய கோளப் பாதைகளில் சுழல்கின்றன.

பதம் 3.11.14 : வான மண்டலத்தில் உள்ள சூரியன், சந்திரன், விண்மீன் மற்றும் ஒளிக்கோளங்களுக்கு ஐந்து வெவ்வேறு வகையான பெயர்களுடைய தனித்தனிக் கோளப் பாதைகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றிற்கும் சொந்தமான ஸம்வத்ஸரங்களும் உள்ளன.

பதம் 3.11.15 : ஓ, விதுரரே, சூரியன் தனது அளவற்ற வெம்மையினாலும், ஒளியினாலும் அனைத்து உயிர்களுக்கும் புத்துணர்ச்சி தருகிறார். உலகப் பற்றின் மாயையிலிருந்து விடுவிப்பதற்காக அவர் உயிர்களின் வாழ்நாள் காலத்தைக் குறைக்கிறார். மேலும் தேவலோகத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் பாதையினை விரிவுபடுத்தவும் செய்கிறார். அவர் இவ்வாறு தனது கோளப் பாதையில் மிகுந்த விசையுடன் சுழல்கிறார். ஆகையினால் அனைவரும் அவரை ஐந்து வருடங்களுக்கொரு முறை உரிய வழிபாட்டுப் பொருட்களுடன் வணங்குவதில் மூலம் தமது மரியாதையினைச் செலுத்துதல் வேண்டும்.

பதம் 3.11.16 : விதுரர் கூறினார்: நான் இப்பொழுது, மண்ணுலகு, விண்ணுலகு மற்றும் தேவ லோகத்தைச் சேர்ந்த அனைவரின் ஆயுட்காலமும் என்னவென்று அறிந்து கொண்டேன். மேலும் எனக்கு கல்ப காலத்தையும் தாண்டி வாழும் சிறந்த கற்றறிந்த உயிர்களின் வாழ்நாள் காலத்தைப் பற்றி அருள் கூர்ந்து விளக்குவீராக.

பதம் 3.11.17 : ஓ.ஆன்மீக ஆற்றல் மிக்கவரே, முழுமுதற் கடவுளின் கட்டுப்படுத்தும் வடிவமாக விளங்கும் நித்திய காலத்தின் அசைவுகளை உம்மால் அறிந்து கொள்ளக்கூடும். நீர் தன்னுணர்வு பெற்றவராதலினால் உமது தெய்வீகப் பார்வையின் சக்தியினால் நீர் எதையும் காணமுடியும்.

பதம் 3.11.18 : மைத்ரேயர் கூறினார்: ஓ, விதுரரே, சதுர் யுகம் எனப்படுவது சத்ய யுகம், திரேதாயுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகம் என்றழைக்கப்படுகிறது. இந்நான்கு யுகங்களின் மொத்த வருடங்கள் பன்னிரெண்டாயிரம் தேவ வருடங்களுக்கு இணையானதாகும்.

பதம் 3.11.19 : சத்திய யுகமானது 4,800 தேவ வருடங்களுக்குச் சமமானதாகும்; திரேதாயுகம் என்பது 3,600 தேவ வருடங்களுக்குச் சமமாகும்; துவாபரயுகம் 2,400 தேவ வருடங்களுக்கும், கலியுகம் 1,200 தேவ வருடங்களுக்கும் இணையானவையாகும்.

பதம் 3.11.20 : இரண்டு யுகங்களின் முடிவிற்கும் ஆரம்பத்திற்கும் உள்ள இடைப்பட்டக் காலமானது பல நூறு வருடங்கள் என்று மேலே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை யுக – சந்தி என்று அழைப்பர் தேர்ந்த வானநூல் வல்லுநர்கள். இக்கால கட்டத்திலேயே, சமயத்தின் பல்வேறு அறநெறிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பதம் 3.11.21 : ஓ. விதுரரே, சத்திய யுகத்தில் மனித இனம் சமய அறநெறிகளை முறையாகக் காத்து வந்தது. ஆனால் பிற யுகங்களில் சமயத்திற்குப் புறம்பான அதர்மங்களை அனுமதித்ததினால் சமய தர்மத்தின் ஒரு பகுதி படிப்படியாகக் குறைந்தது.

பதம் 3.11.22 : இம்மூன்று லோகங்களுக்கும் மேலாக, (சொர்க்கம், மர்த்யம், மற்றும் பாதாளம்) நான்கு யுகங்களையும் ஆயிரத்தினால் பெருக்கி வரும் வருடங்கள் பிரம்ம லோகத்தில் ஒரு பகலாகும். இது போன்றக் காலமே பிரம்ம தேவருக்கு ஒர் இரவும் ஆகும். அவ்விரவில் பிரபஞ்சத்தினைப் படைத்தவர் துயில்வதற்குச் செல்கிறார்.

பதம் 3.11.23 : பிரம்ம தேவரின் இரவு முடிந்தவுடன், அவரது பகற்காலத்தில் மூன்று லோகங்களின் படைப்பும் மீண்டும் துவங்குகிறது. அவை தொடர்ந்து மனித குலத்தின் தந்தையராகக் கருதப்படும் பதினான்கு மனுச் சக்கரவர்த்திகளின் ஆயுட்காலம் வரையில் இருக்கும்.

பதம் 3.11.24 : ஒவ்வொரு மனுவின் ஆயுட்காலமும் எழுபத்தியோரு சதுர் யுகங்களுக்கு சற்று
அதிகமானதாகும்.

பதம் 3.11.25 : ஒவ்வொரு மனுவின் இறுதிக் காலத்திற்குப் பிறகு, வரிசைக் கிரமத்தில் அடுத்த மனு வருகிறார். அவர் தமது சந்ததியினருடன் சேர்ந்து பல்வேறு உலகங்களை ஆள்கிறார்; ஆயினும் சப்தரிஷிகளும், இந்திரனைப் போன்ற தேவர்களும் அவர்களது அடியவர்களான கந்தர்வர்கள் போன்ற அனைவரும் மனுவுடனேயே தோன்றுகின்றனர்.

பதம் 3.11.26 : பிரம்ம தேவரின் பகற்பொழுதில் சொர்க்கம், மர்த்யம், பாதாளம் என்னும் மூவுலகங்களும் படைக்கப்படுகின்றன. இவ்வுலகங்களின் சுழற்சியில் விலங்குகள், மனிதர்கள், தேவர்கள் மற்றும் பித்ருக்கள் போன்றோர் தத்தம் கர்ம வினைகளின் பலன்களுக்கேற்பத் தோன்றவும் மறையவும் செய்கின்றனர்.

பதம் 3.11.27 : ஒவ்வொரு மனுவும் மாறும்பொழுதும் முழுமுதற் கடவுள் தனது அகச் சக்தியின் மூலம் பல்வேறு அவதாரங்களாக அதாவது மனுக்கள் போன்றும், பிறரைப் போன்றும் தோன்றுகிறார். இவ்வாறு அவர் தமது வெளிப்படுத்தப்பட்ட சக்தியினால் இப்பிரபஞ்சத்தைக் காக்கின்றார்.

பதம் 3.11.28 : பகல் நேரம் முடியும்போது தமோ குணத்தின் மறு பிரதியாகிய இருளோடு பிரபஞ்சத்தின் அந்த ஆற்றல் மிகுந்த பகல் இணைகிறது. நித்தியக் காலத்தின் பாதிப்பினால் எண்ணிலடங்கா உயிர்கள் அம்மாற்றத்தில் இணைந்து பின்னர் எல்லாம் அமைதியில் ஆழ்கின்றன.

பதம் 3.11.29 : பிரம்ம தேவரின் இரவு ஆரம்பிக்கும்பொழுது மூன்று உலகங்களும் மறைகின்றன. ஒரு சாதாரண இரவு போன்று சூரியனும், சந்திரனும் ஒளியின்றி விளங்குகின்றன.

பதம் 3.11.30 : இவ்வழிவானது சங்கர்ஷணரின் வாயினின்று வரும் தீயினால் ஏற்படுகிறது. அதனால் பிருகு போன்ற மாமுனிவர்களும் பிறகும், மூவுலகங்களிலும் எரியும் தீயின் வெம்மை தாளாது மகரலோகத்தை விட்டு ஜனலோகத்திற்கு இடம் பெயர்வர்.

பதம் 3.11.31 : அழிவின் ஆரம்பத்தில் கடல்கள் எல்லாம் கொந்தளித்துப் பொங்கும். புயற்காற்று வன்மையுடன் வீசும். கடலின் அலைகள் மூர்க்கமாகத் தாக்கும். கணப் பொழுதில் மூவுலகங்களும் நீரினால் நிரப்பப்படும்.

பதம் 3.11.32 : முழுமுதற் கடவுளான பரமபுருஷ பகவான் அப்பிரளய வெள்ளத்தின் மீது அனந்தனைப் படுக்கையாகக் கொண்டு அதன்மீது விழிகள் மூடி அரிதுயில் கொண்டிருப்பார். அப்பொழுது ஜனலோகத்தைச் சேர்ந்தவர்கள் தமது கரங்களைக் குவித்து அவரது புகழ்தனைப் போற்றிக் கொண்டிருப்பர்.

பதம் 3.11.33 : பிரம்ம தேவர் உள்ளிட்ட அனைத்து உயிர்களின் ஆயுட்காலமும் இம்முறையில் முடிவடைகிறது. ஒருவனது ஆயுள் ஒவ்வொரு உலகின் காலத்திற்கேற்ப நூறு வருடங்கள் நீடித்திருக்கிறது.

பதம் 3.11.34 : பிரம்ம தேவரின் ஆயுட்காலமான நூறு வருடங்கள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அதன் முதற் பகுதி ஏற்கெனவே முடிந்துவிட்டது. இரண்டாம் பகுதி இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பதம் 3.11.35 : பிராம கல்பம் எனப்படும் பிரம்ம தேவரின் முதற் பகுதியின் ஆரம்பத்தில் பிரம்மதேவர் தோன்றினார். அப்பொழுது அவருடன் சேர்த்து வேதங்களும் தோன்றின.

பதம் 3.11.36 : முதல் “ப்ராஹ்ம – கல்பத்தினை” அடுத்து வருவது பாத்ம – கல்பம் எனப்படும். ஏனெனில் இக்கல்பத்திலேயே முழுமுதற் கடவுளான ஹரியின் நாபிச்சுழி என்னும் குளத்திலிருந்து பிரபஞ்சத் தாமரையானது மலர்ந்தது.

பதம் 3.11.37 : ஓ, பரதக்குலத் தோன்றலே, பிரம்ம தேவரின் ஆயுளின் இரண்டாம் பகுதியின் ஆரம்பம் வாராஹ கல்பம் என்றழைக்கப்படுகிறது. ஏனெனில் அக்கல்பத்தில் தான் முழுமுதற் கடவுள் வராகமாக அவதரித்தார்.

பதம் 3.11.38 : பிரம்ம தேவரின் ஆயுளின் இருபகுதிகளும் சேர்ந்தால் அதுவே மாற்றமில்லாதவரும், அளவற்றவரும், ஜகத் காரணருமான முழுமுதற் கடவுளுக்கு ஒரு நிமேஷம் (விநாடிக்கும் குறைவான நேரம்) ஆகும்.

பதம் 3.11.39 : அணுவில் தொடங்கி பிரம்ம தேவரின் ஆயுட்காலத்தின் இரு பெரும் பிரிவுகள் வரை உள்ள பல்வேறு பரிமாணங்களையும் கட்டுப்படுத்துவது நிச்சயம் நித்தியக் காலமேயாகும். இக்காலத்தையும் கட்டுப்படுத்துபவர் பரம்பொருளேயாவார். காலம் சத்திய லோகம் உள்ளிட்டப் உள்ளிரபஞ்சத்தின் பிற தேவ லோகங்களில் உள்ள உடல் உணர்வுடையவர்களை மட்டுமே கட்டுப்படுத்துகிறது.

பதம் 3.11.40 : இவ்வியல்பிற்குரிய நடப்பு உலகமானது நான்கு கோடி மைல்கள் விஸ்தீரணமுடையதாகும். மேலும் அது எண்வகைப் பூதங்கள் இணைந்து பதினாறு வகை மூலக்கூறுகளாக மாறி உள்ளும் புறமும் பின்வருமாறு இருக்கிறது.

பதம் 3.11.41 : பிரபஞ்சமெங்கும் நிறைந்திருக்கும் மூலப்பொருட்களின் அடுக்குகளானது ஒவ்வொன்றும் முன்பை விடப் பத்து மடங்குப் பருமன் அதிகமுடையதாகும். இவ்வாறு பிரபஞ்சங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து காணப்படுவதானது அணுக்களின் மிகப்பெரிய கலப்பினைப் போல் காட்சியளிக்கிறது.

பதம் 3.11.42 : ஆதலினால் முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரே அனைத்துக் காரணங்களுக்கும் மூல காரணமாக விளங்குகின்றார். இவ்வாறு விஷ்ணுவின் ஆன்மீக உறைவிடமாவது எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி அழியாத தன்மை உடையதாகும். மேலும் இது அனைத்துத் தோற்றங்களுக்கும் மூலமாக விளங்கும் மகாவிஷ்ணுவின் உறைவிடமுமாகும்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare