பாபங்குச ஏகாதசி

யுதிஷ்டிரர் கிருஷ்ணரிடம்,” மதுசூதனா, அஷ்வின ( செப் – அக்டோ ) மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி விரதம் பற்றித் தயை கூர்ந்து கூறுங்கள் ” என்றார்.
பரமாத்மா உடனே இந்த “பாபங்குச ஏகாதசி“ பற்றி கூறுகிறேன். இது மக்களின் பாபம் தீர்க்கக் கூடியது. அன்று நாபிக் கமலம் உடைய பத்மநாபரை விதி முறைகளுடன் வழிபடவேண்டும். இதனால் இவ்வுலகில் மகிழ்ச்சியாக வாழ வேண்டுவனவும், பின்னர் பரமபத முக்தியும் கிடைக்கும். மேலும் புலனை அடக்கி, பல ஆண்டு தவம் செய்பவர் அடையும் பலனை, கருட வாகன விஷ்ணுபகவானை தொழுபவர் அடைவர். ஶ்ரீ ஹரியை பணிவுடன் தொழுபவர், அறிந்தும் அறியாமலும் செய்த பாபங்கள் நீங்கும். புனித தீர்த்த யாத்திரை செய்தவர் அடையும் பலனை, பகவான் விஷ்ணுவின் நாமத்தை ஜெபிப்பவர் அடைவர். ராமா, கிருஷ்ணா, ஜனார்தநா, விஷ்ணு போன்ற நாமங்களை குறிப்பாக ஏகாதசியில் ஜெபிப்பவர் எமராஜரை தரிசிக்க வேண்டி இருக்காது.
சிவனை பழிக்கும் வைஷ்ணவர்கள், விஷ்ணுவை பழிக்கும் சைவரும் கண்டிப்பாக நரகம் அடைவர். நூறு குதிரை தானமும், நூறு அசுவமேத யாகம் செய்த பலன், ஏகாதசி விரதம் இருப்பதால் கிடைக்கும் பலனில் பதினாறில் ஒரு பங்குதான். பதிவிரதை, கணவனை பின்பற்றுவதை போல், பாவங்கள் துரத்தினாலும் பாபங்குச ஏகாதசி விரதம் அதை நீக்கிவிடும். இந்த விரதத்தை விட சிறந்தது மூவுலகிலும் இல்லை. உலகப் பற்றிலிருந்து விடுபட்டு சொர்க்கம், இனிய வாழ்வு, நல்ல மனைவி, செல்வம் வேண்டுபவர், இந்த விரதம் இருந்தால் போதும். கங்கை, காசி, கயா, புஷ்கரம் மற்றும் குருக்ஷேத்திரம் போன்றவை கூட இந்த பாபங்குச ஏகாதசி விரதம் தரும் பலனை தராது.
இந்த விரதம் இருப்பவர் பகவானின் நாமம் சொல்லி, அவருக்கு சேவை செய்தால் எல்லா பாவமும் நீங்கி பகவானின் உறைவிடம் அடைவர். அது மட்டுமல்ல, அவரின் தாய், தந்தை, மனைவி வழியில் 10 தலைமுறையினரும், இந்த ஒரு ஏகாதசி விரதத்தால் முக்தி அடைவர். இந்த பாபங்குச விரதத்தை முறையாகக் கடைப்பிடிப்பவர்கள், பாம்புகளின் பகைவனான கருடன் மேல் ஏறி, தூய மஞ்சள் பட்டும் மாலைகளும் அணிந்து, நான்கு கரம் கொண்ட தேவ பதவியை மிக எளிதாக அடைவர். சிறு குழந்தையோ, இள வயது அல்லது முதியவர் யாராயினும் தங்கள் பாபம் நீங்கி மறு பிறவி இல்லாமல் வைகுந்தம் அடைவர்.
இந்த நாளில் தங்கம், எள், நிலம், பசு, தானியம், குடிநீர், குடை, செருப்பு தானம் அளிப்பவர் யமனை தரிசிக்க வேண்டி இருக்காது. இந்த தானங்கள் அவனது மூச்சுக் காற்றை கொல்லனின் துருத்தி போல் சீர் செய்யும்.
இந்த நாளில் பரம ஏழை கூட தன் தகுதிக்கு ஏற்ப காலையில் எழுந்து குளித்து தானம் செய்ய வேண்டும். எவன் ஒருவன் மக்களுக்காக குளம், தங்கும் இடம், தோட்டம், வீடு போன்ற வசதிகள் செய்கிறானோ, அவன் யமன் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்கிறான். இப்பிறவியில் உயர்ந்த குலப் பிறப்பு, செல்வம், நோயற்ற வாழ்வு கிடைக்கப் பெற்றவர், இது தன் முன் பிறவிப் பயன் என்பதை உணர வேண்டும். இந்த பாபங்குச விரதம் இருப்பவர் பகவான் விஷ்ணுவின் பாதத்தையே அடைவர்.
இதுவே அஷ்வின – சுக்ல பட்ச ஏகாதசி, பாபங்குச ஏகாதசியின் பெருமையாக பிரம்ம வைவர்த்த புராணத்தில் கூறப்பட்ட செய்தி ஆகும்.

