24. ஸ்ரீ வல்லபாச்சாரியார் பைதக்

நோக்கங்கள்:
நோக்கம்1: ஸ்ரீ வல்லபாச்சாரியாரின் தெய்வீக அவதாரத்தை அறிதல்.
நோக்கம்2: ஸ்ரீ வல்லபாச்சாரியாரின் பிறப்பு மற்றும் ஆரம்பக் கல்வியை விளக்குதல்.
நோக்கம்3: ஜகந்நாதபுரியில் ஸ்ரீ வல்லபாச்சாரியாரின் பக்தியைப் புரிந்துகொள்வது.
நோக்கம்4: பூரியில் நடைபெற்ற தத்துவ விவாதத்தில் தெய்வீக தீர்ப்பை விளக்குதல்.
நோக்கம்5: ஸ்ரீ வல்லபாசாரியாருக்கு வழங்கப்பட்ட புனிதமான தீட்சை மந்திரத்தை பகுப்பாய்வு செய்தல்.
நோக்கம்7: ஸ்ரீ வல்லபாச்சாரியாரின் மூன்று தீர்த்தயாத்திரைகளின் நோக்கத்தைப் புரிந்துகொள்வது.
நோக்கம்8: ஸ்ரீ வல்லபாச்சாரியாரின் “பைதக்”க்களின் (Baithaks) முக்கியத்துவம் மற்றும் பரவலை விளக்குவது.
நோக்கம்9: ஸ்ரீ வல்லபாச்சாரியாரின் கடைசி செய்தியும் அவருடைய புறப்பாடு பற்றியும் அறிதல்.
நோக்கம்1: ஸ்ரீ வல்லபாச்சாரியாரின் தெய்வீக அவதாரத்தை அறிதல்.
பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னி என்ற நெருப்பு தன்மை, ஸ்ரீ வல்லபாச்சாரியாரின் வாழ்க்கை முழுவதும் முக்கிய பங்கு வகித்தது. அவர் அக்னி அல்லது நெருப்பின் (ஸ்ரீ கிருஷ்ணரின் முகத்திலிருந்து தோன்றிய) அவதாரமாகக் கருதப்படுகிறார்.
நோக்கம்2: ஸ்ரீ வல்லபாச்சாரியாரின் பிறப்பு மற்றும் ஆரம்பக் கல்வியை விளக்குதல்.
ஸ்ரீ வல்லபாச்சாரியார், இந்தியாவின் ‘சம்பாரண்ய’ எனப்படும் காட்டுப்பகுதியில், சைத்ர மாதத்தின் பதினொன்றாம் நாளில் (கி.பி. 1479) பிறந்தார். அப்போது, அவரது பெற்றோர் காசியிலிருந்து தங்கள் சொந்த ஊரான ஆந்திர மாநிலத்தின் கங்கர்வார் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தனர். அவரது தந்தையின் பெயர் லக்ஷ்மண் பட்டர், தாயின் பெயர் ஸ்ரீமதி இல்லம்மகாரு.
அவர் வெறும் 11 வயதிலேயே வேதம், புராணங்கள், ஸ்மிருதி, தந்திரம் போன்ற அனைத்து சமய நூல்களையும், சாங்க்யா, யோகா, ந்யாயா, மிமாம்சா, ஜைனா, புத்தம் போன்ற பல தத்துவங்களையும் படித்து முடித்தார்.
நோக்கம்3: ஜகந்நாதபுரியில் ஸ்ரீ வல்லபாச்சாரியாரின் பக்தியைப் புரிந்துகொள்வது.
11 முதல் 12 வயதிலேயே ஸ்ரீ வல்லபாச்சாரியார், பூரியில் உள்ள ஜகந்நாதர் தரிசனத்திற்கு சென்றார். அது ஏகாதசி (சந்திர மாதத்தின் பதினொன்றாம் நாள்) ஆக இருந்தது. இந்த புனித நாளில் அவர் கடுமையான விரதம் இருந்து, தண்ணீர் மட்டுமே அருந்தி, எந்த உணவையும் எடுத்துக்கொள்ளாமல் இருந்தார்.
அன்று காலை, அவர் ஜகந்நாதர் கோவிலில் தரிசனத்திற்குள் சென்றபோது, ஒரு பிராமணர் தவறுதலாக ஜகந்நாதர் மஹாபிரசாதத்தை அவருடைய கையில் வைத்தார். மஹாபிரசாதம் மிகவும் புனிதமானது; அதை நிராகரிக்கவும், தூக்கி எறியவும் முடியாது. அதனால், ஸ்ரீ வல்லபாச்சாரியார் வலது கையில் பிரசாதத்தை பிடித்தவாறு, மரியாதையுடன் கோயில் மண்டபத்திற்குள் சென்றார். ஏகாதசியின் புனிதத்தைக் குலைக்க விரும்பாததால், அவர் பகல், இரவு முழுவதும் அசையாமல், பக்தி மிகுந்த பிரார்த்தனைகள் மற்றும் பாடல்களுடன் ஜகந்நாதரை புகழ்ந்து நின்றார்.
இளம் வயதிலேயே, அசையாமல் 24 மணி நேரத்திற்கும் மேலாக இறைவனைப் புகழ்ந்து நின்ற இந்த சிறுவனை பலர் கண்டு, அவரின் பக்தியிலும் உறுதியிலும் ஆழ்ந்து ஈர்க்கப்பட்டனர். அங்கு இருந்த பண்டிதர்கள் மற்றும் பூசாரிகள், “இது ஸ்ரீ சுகதேவரின் மறுபிறப்பாகத் தெரிகிறது” என்று குறிப்பிட்டனர்.
ஸ்ரீ வல்லபரின் விரல்களில், அவர் பாடும்போது அருகிலுள்ள கல் சுவரில் கையை ஊன்றிப் பாடியதற்கான அடையாளங்கள் இன்றும் காணப்படுகின்றன என்று நம்பப்படுகிறது. இறைவனை அவர் மனதாரப் புகழ்ந்ததற்கு பதிலளிக்கும் விதமாக அந்தக் கல் கூட வெண்ணெய் போல உருகியதாகக் கூறப்படுகிறது.
நோக்கம்4: பூரியில் நடைபெற்ற தத்துவ விவாதத்தில் தெய்வீக தீர்ப்பை விளக்குதல்.
அந்த காலத்தில் பூரியின் ஆட்சியாளர், பண்டிதரும் பக்திமானுமாகிய கஜபதி மகாராஜா புருஷோத்தம தேவ் ஆவார். அவரின் அரண்மனையில் நான்கு முக்கிய ஆன்மீகக் கேள்விகளை மையமாகக் கொண்டு ஒரு பெரிய தத்துவ விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது:
- 1.முதன்மையான தேவர் யார்?
2.மிகச் சிறந்த கிரந்தம் எது?
3.மிக முக்கியமான மந்திரம் எது?
4.மிக முக்கியமான கர்மா எது?
ஒவ்வொரு பண்டிதரும் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்ததால், பெரும் முரண்பாடுகள் எழுந்தன. அப்போது அங்கே இருந்த ஸ்ரீ வல்லபாச்சாரியார் தைரியமாக அறிவித்தார்:
- 1.முதன்மையான தேவர்: ஸ்ரீ கிருஷ்ணர்.
2.மிகச் சிறந்த கிரந்தம்: பகவத்கீதை.
3.மிக முக்கியமான மந்திரம்: ஸ்ரீ கிருஷ்ணரின் திருநாமம்.
4.மிக முக்கியமான கர்மா: ஸ்ரீ கிருஷ்ணருக்கு பக்தியுடன் சேவை செய்தல்.
இன்னும் சிலர் இவரது கருத்தை ஏற்கவில்லை. அப்போது ஸ்ரீ வல்லபர்,
“இந்த நான்கு கேள்விகளையும் ஜகந்நாதரின் முன் வைப்போம்; அவருடைய தெய்வீக தீர்ப்பை ஏற்றுக் கொள்வோம்” என்றார்.
அனைவரும் சம்மதித்தனர். மன்னர், கோயிலின் கருவறையில், வெற்றிடமான ஒரு தாளும், பேனாவும், மைபானையும் வைத்து, கதவுகளை மூட உத்தரவிட்டார். கதவுகளை மீண்டும் திறந்தபோது, அனைவருக்கும் ஆச்சரியமாக, அந்தத் தாளில் ஸ்ரீ வல்லபர் கூறிய பதில்கள் அப்படியே தெய்வீகமாக எழுதப்பட்டிருந்தன.
அங்கு இருந்த அனைவரும் இந்த தெய்வீகத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டனர். மகிழ்ச்சியடைந்த மன்னர், ஸ்ரீ வல்லபாச்சாரியாரின் தெய்வீக ஞானத்தையும் தூய பக்தியையும் கௌரவித்து, அவருக்கு வெற்றிமாலை அணிவித்தார்.
பின்னர், ஸ்ரீ வல்லபாச்சாரியார் “புஷ்டி மார்க்” எனப்படும் — இறைவனின் அருள் (புஷ்டி) நோக்கிச் செல்லும் பாதையை — நிறுவினார்.
நோக்கம்5: ஸ்ரீ வல்லபாசாரியாருக்கு வழங்கப்பட்ட புனிதமான தீட்சை மந்திரத்தை பகுப்பாய்வு செய்தல்.
பவித்ரமான ஆடி மாதத்தின் (ஸ்ராவண மாதம்) வளர்பிறை இரவில், ஸ்ரீ வல்லபாச்சாரியார் மன அமைதி இழந்து, இந்த கலியுகத்தில் மனிதர்களின் துயரங்களை எண்ணி வருந்திக் கொண்டிருந்தார். அது நள்ளிரவு. திடீரென பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணர் தாமே நேரில் தோன்றினார்.
அவர் ஸ்ரீ வல்லபாச்சாரியாரிடம் கூறினார்:
“கவலைப்படாதீர்கள். இப்படிப்பட்டவர்கள், உமது தீட்சையைப் பெற்ற பின், இந்த மந்திரத்துடன் என்னை அணுக வரட்டும்.”
இந்த உறுதியை அளித்த பின், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பிரம்மசம்பந்த மந்திரம், கத்ய மந்திரம், சமர்பண கத்யம், ஆத்மநிவேதன மந்திரம் போன்ற பல பெயர்களால் அறியப்படும் புனிதமான தீட்சை மந்திரத்தை அருளினார்.
மந்திரத்தின் பொருள்:
“நூற்றாண்டுகளாக நான் எனது பிரியமான கிருஷ்ணரிடமிருந்து பிரிந்திருக்கிறேன். இப்போது நான் என் உடல், புலன்கள், உயிர், மனம் மற்றும் அவற்றின் செயல்பாடுகள், இம்மையிலும் பரலோகத்திலும் உள்ள எனது சொத்துக்கள் — இவையனைத்தையும் மட்டுமல்ல, என் ஆத்மாவையும் உமது திருவடியில் சமர்ப்பிக்கிறேன். இனிமேல், ஓ ஸ்ரீ கிருஷ்ணா! நான் உமது அடியேன்; முற்றிலும் உங்களுடையவன்.”
நோக்கம்6: புஷ்டி மார்க்க இலக்கியத்திற்கும் பக்திக்கும் ஸ்ரீ வல்லபாச்சாரியாரின் பங்களிப்புகளை விவரித்தல்.
ஒருபுறம், பகவானின் இனிமையான திருவுருவம்; மறுபுறம், அவரின் உதடுகளில் இருந்து வரும் இனிய வார்த்தைகள். ஸ்ரீ வல்லபாச்சாரியாரின் ஆனந்தத்திற்கு எல்லையே இருக்கவில்லை. அவர் பகவானின் திருக்கழுத்தில் புனித மாலையை அணிவித்து, பனங்கற்கண்டு நிவேதித்தார்.
அதன் பின், ஸ்ரீ வல்லபாச்சாரியாரின் உதடுகளில் இருந்து, ஸ்ரீ கிருஷ்ணர் அனைத்து இனிமைகளின் இறைவன் என்றும், அவரைப் பற்றிய அனைத்தும் இனிமையானவை என்று போற்றும் “மதுராஷ்டகம்” என்ற அற்புதமான பாடல் வெளிவந்தது.
அவர் பலருக்கு பிரம்மசம்பந்த தீட்சை வழங்கி, அதன் முக்கியத்துவத்தையும் புஷ்டி மார்க்கத்தின் அடிப்படை கொள்கைகளையும் விளக்கும் “சித்தாந்த ரகஸ்யம்” என்ற ஸ்தோத்திரத்தை இயற்றினார்.
உரையாடல் சான்று:
“ஸ்ராவணஸ்யமலே பக்ஷே ஏகாதஷ்யாம் மஹாநிஷி
சக்ஷாத் பகவதா ப்ரோக்தம் தடக்ஷரஶ: உச்ச்யதே”
(சித்தாந்த ரகஸ்யம் – 1, ஸ்ரீ வல்லபாச்சாரியார்)
பொருள்: “ஸ்ராவண மாதத்தின் வளர்பிறை பதினொன்றாம் நாளின் நள்ளிரவில், பகவான் தாமே எனக்குச் சொன்னதை, நான் அப்படியே (எழுத்து வடிவமாக) இங்கு பதிவு செய்கிறேன்.”
நோக்கம்7: ஸ்ரீ வல்லபாச்சாரியாரின் மூன்று தீர்த்த யாத்திரைகளின் நோக்கத்தைப் புரிந்துகொள்வது.
அந்தக் காலத்தில், மக்களிடையே பல தவறான நம்பிக்கைகள் மற்றும் வழிதவறிய கோட்பாடுகள் நிலவின. இதனால் மக்களை சரியான பாதையில் நடத்த வேண்டும் என்ற ஆவலுடன் ஸ்ரீ வல்லபாச்சாரியார், பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் உண்மையான அறிவை பரப்பும் நோக்கில் தீர்த்தயாத்திரைக்கு புறப்பட்டார்.
ஸ்ரீ வல்லபாச்சாரியார் இப்படிப்பட்ட மூன்று ஆன்மீகப் பயணங்களை மேற்கொண்டார். அவற்றின் நோக்கம்:
- மனிதர்கள் தங்களது உண்மையான ஆன்மீக நிலையை அறியச் செய்தல்.
- உபநிடதங்கள் மற்றும் வேதங்களின் கோட்பாடுகளை மீட்டெடுத்தல்.
- பிரம்மசம்பந்த தீக்ஷை அளித்து, மக்களை மீண்டும் இறைவனிடம் திரும்பச் செய்தல்.
மேலும், ஜாதி, மதம், பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் ஆன்மிக முன்னேற்றத்திற்கான வாய்ப்பை ஸ்ரீ வல்லபாச்சாரியார் திறந்துவைத்தார்.
நோக்கம்8: ஸ்ரீ வல்லபாச்சாரியாரின் “பைதக்”க்களின் (Baithaks) முக்கியத்துவம் மற்றும் பரவலை விளக்குவது.
பைதக் (“இருப்பிடம்”) என்பது இந்தியாவில் வைஷ்ணவ இந்துமதத்தின் புஷ்டிமார்க மரபினரைச் சேர்ந்தவர்கள், பக்தி சார்ந்த சடங்குகளை நடத்த, புனிதமாகக் கருதும் இடமாகும். இந்த இடங்கள் புஷ்டிமார்கத்தின் நிறுவனர் ஸ்ரீ வல்லபாச்சாரியாருக்கும், அவரது சந்ததியர்களுக்கும் தொடர்புடையவை. இவை இந்தியா முழுவதும் பரவியுள்ளன, குறிப்பாக உத்தரப் பிரதேசத்தின் விரஜ (Vraj) பகுதியிலும், குஜராத் மாநிலத்திலும், அதிகமாகக் காணப்படுகின்றன. மொத்தம் 142 பைதக்கள் புனிதமானவை எனக் கருதப்படுகின்றன — அதில் 84 வல்லபாச்சாரியாருடையதும், 28 அவரது மகன் வித்தலநாத் குசைஞ்ஜியினுடையது, 30 அவரது ஏழு பேரக்குழந்தைகளுடையதாகும்.
ஸ்ரீ வல்லபாச்சாரியார் வேதங்கள், பகவத்கீதை போன்ற புனித நூலக்களைப் பற்றி உரை வழங்கினார். ஒவ்வொரு பைதக்கும், அவர் ஆன்மீக உரையாடல்கள் மற்றும் போதனைகள் வழங்கிய சிறப்பான இடத்தை குறிக்கிறது. இங்கு அவர் வேதங்கள், இராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் போன்ற நூல்களின் மூலப்பாடல்களையும், அவற்றின் விளக்கங்களையும் வழங்கினார். பின்னர் இவ்விளக்கங்கள் “அனுபாஷ்யா” மற்றும் “சுபோதினி” என்ற நூல்களாகத் தொகுக்கப்பட்டன. சில இடங்களில் அந்த நிகழ்வை நினைவுகூறச் சிறிய சன்னதிகள் கட்டப்பட்டன; சில இடங்களில் ஆலயம் அல்லது சன்னதி எதுவும் இல்லை, ஆனால் அவை கதைகள் மற்றும் நூல்கள் மூலம் மட்டுமே அறியப்படுகின்றன.
இந்த சன்னதிகளில் வல்லபாச்சாரியாரின் கையெழுத்துப் பிரதிகளும், அவருடைய தனிப்பட்ட பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன, அவை புஷ்டிமார்க பக்தர்களால் பெரிதும் மதிக்கப்படுகின்றன. இங்கு பொதுவாக தெய்வ விக்ரஹங்கள் வைக்கப்படுவதில்லை; அதற்கு பதிலாக, அந்த இடத்தின் ஆன்மீகப் பெருமைக்கும், அதனுடன் தொடர்புடைய போதனைகளுக்குமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இங்கு நீரும் பனங்கற்கண்டும் மட்டுமே நிவேதனமாக அளிக்கப்படும். மேலும், வைஷ்ணவ ஹவேலி ஆலயங்களில் பின்பற்றப்படும் ,ஏழு தரிசன முறையும் பின்பற்றப்படுகிறது. புஷ்டிமார்க மரபினர்கள் இந்த பைதக் இடங்களுக்கு வந்து, ஸ்ரீ வல்லபாச்சாரியாருக்கு வணக்கம் செலுத்தி, ஆன்மீக வெளிச்சத்தை நாடுகின்றனர்.
பைதக் பரவி அமைந்துள்ள இடங்கள்:

இந்த 84 பைதக்கள் இந்தியாவின் தெற்கே இருக்கும் ராமேஸ்வரத்திலிருந்து வடக்கே இருக்கும் பத்ரிநாத் வரை, மேற்கே நாராயண சரோவர் மற்றும் பேட் த்வாரகா இடங்களிலிருந்து கிழக்கே பூரி வரை பரவி உள்ளன. பைதக்கள் அவரது வாழ்க்கைக்குத் தொடர்புடைய இடங்களிலும் உள்ளன, உதாரணமாக, குடும்பத்தின் குல தெய்வம் திருமலை திருப்பதி; அவரது பிறப்பிடமான சம்பாரண்; மற்றும் அவர் வாழ்ந்த முக்கியமான பகுதியான வாரணாசி. மேலும், ஸ்ரீ கிருஷ்ணருடன் மிகவும் தொடர்புடைய பிரதேசங்களிலும் (விரஜ் பகுதி -தற்போது உத்தரப் பிரதேசத்தின் மதுரா மாவட்டம் மற்றும் குஜராத் மாநிலத்தின் துவாரகா )பைதக்கள் இருக்கின்றன. பைதக் எண்கள் 1 முதல் 22 வரை விரஜ் பகுதியில், மதுரா மாவட்டத்தில் உள்ளன; மேலும் 53 முதல் 72 வரை குஜராத்தில் உள்ளன.
நோக்கம்9: ஸ்ரீ வல்லபாச்சாரியாரின் கடைசி செய்தியும் அவருடைய புறப்பாடு பற்றியும் அறிதல்.
அவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறப்போகும்போது, தனது மகன்களுக்கும் சீடர்களுக்கும் ஒரு செய்தியை கொடுத்தார்.
“என் அன்புடையீரே, நீங்கள் எப்போதும் கடவுளை உங்கள் முழுத் திறன்கொண்டு சேவை செய்ய வேண்டும். நீங்கள் பகவான் கிருஷ்ணரை ஒரு சாதாரண உலக எஜமானராகப் பார்க்கக்கூடாது. நீங்கள் அவருடையவராக மாறியவுடன், அவர் உங்களை கவனித்துக் கொள்வார். ஆனால் எப்படியோ, நீங்கள் இறைவனை மறந்து உலக விஷயங்களைப் பற்றி சிந்தித்தால், நீங்கள் வீழ்ச்சியடைவீர்கள்.
ஸ்ரீ வல்லபாச்சாரியாரின் அவதாரம், புனித நூலான பாகவத புராணத்தை, அனைவருக்கும் விளக்கும் நோக்கத்திற்காகவே இருந்தது. ஆனால் அவர் அதை முழுமையாக நிறைவேற்றவில்லை. பகவானிடமிருந்து அவர் தனது இருப்பிடத்திற்குத் திரும்பும்படி கட்டளைகளைப் பெற்றார். 52 வயதில், 1531 ஆம் ஆண்டு ரதயாத்திரையின் புனித நாளில், ஸ்ரீ வல்லபாச்சாரியார் கங்கையின் புனித நீரில் காலடி எடுத்து வைத்தார். அப்போது, அவருடைய வடிவத்திலிருந்து பிரகாசமான ஒளி எழுந்து, விண்மீன்களைக் கடந்து, சூரியனின் பிரகாசத்துடன் ஒன்றியது. இது மனித உலகத்தை விட்டு நித்தியமான ஆன்மிக உலகத்தை அவர் அடைந்ததை குறிக்கிறது.

